அபுதாபியிலிருந்து நாடு கடத்தப்பட்ட, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவின் கவர்ஸ் கோப்ரேஷன் நிறுவனத்தின் பணிப்பாளர் எனக் கூறப்படும் பட்டபொல இரேஷா டி சில்வா நேற்றுக்காலை நாடு திரும்பிய நிலையில் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போது அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
கைது செய்யப்பட்ட இரேஷா டி சில்வா நேற்றைய தினம் கொழும்பு மேல்நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட வேளையில் 5 இலட்சம் ரூபா ரொக்கப் பிணையிலும், 50 இலட்சம் ரூபா பெறுமதியான சரீரப் பிணையிலும் செல்ல நீதிமன்றம் அனுமதியளித்தது.
அத்துடன் ஒவ்வொரு மாதமும் இறுதி ஞாயிற்றுக் கிழமையன்று நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவில் கையொப்பமிட இரேஷாவுக்கு உத்தரவிட்டதோடு அவரது வெளிநாட்டு பயணத்தையும் நீதிமன்றம் தடை செய்தது.
இரேஷா டி சில்வா வழக்கு விசாரணைகளுக்காக நீதிமன்ற வழக்கு விசாரணை அழைப்புகளை புறக்கணித்து வந்த காரணத்தால் அவரைக் கைது செய்யுமாறு நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் இரேஷா வெளிநாட்டில் தலைமறைவாகியுள்ளதாக தகவல் கிடைத்தது.
இத்தகவலையடுத்து இது தொடர்பாக சர்வதேச பொலிஸார் (இன்டபோல்) உதவியை பெற்று அபுதாபியில் வைத்து அவர் கைது செய்யப்பட்டு நாடுகடத்தப்பட்ட நிலையில் நேற்றைய தினம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தபோது குடிவரவு, குடியகல்வு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னர் கொழும்பு மேல் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டார்.
2013 ஒக்டோபர் 1 ஆம் திகதிக்கும் 2014 ஆகஸ்ட் 31 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக் ஷவுக்கு சொந்தமான கவர்ஸ் கோப்பரேட் சர்விசஸ் நிறுவனம் பிறிதொரு நிறுவனமொன்றுடன் மேற்கொண்ட கொடுக்கல் வாங்கல்களின்போது முரணான வகையில் நிதியீட்ட சதி மேற்கொண்டமை, அதற்கமைய முறையற்ற விதத்தில் 30 மில்லியன் ரூபா நிதியீட்டிய குற்றச்சாட்டில் சந்தேக நபர்களுக்கு எதிராக 11 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் வழக்கு தொடரப்பட்டுள்ளது.
இந்த வழக்கின் எதிரிகளாக பெயரிடப்பட்டுள்ள ஒர்னெலா இரேஷா டி சில்வா உள்ளிட்ட மூவர் வெளிநாட்டுக்கு தப்பிச் சென்றிருந்த நிலையில் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந் நிலையில் எச்.சி.129/17 எனும் இலக்கத்தின் கீழ் விசாரிக்கப்பட்டு வரும் இந்த கறுப்புப் பண சுத்திகரிப்பு வழக்கும் நேற்று கொழும்பு 7 ஆம் இலக்க மேல் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இரேஷா டி சில்வா மேலதிகமாக இந்த கவர்ஸ் கோப்ரடிஸ் சேர்விசஸ் வழக்கில் முதல் பிரதிவாதியாக நாமல் ராஜபக் ஷ பெயரிடப்பட்டுள்ள நிலையில் 2ஆம் 3 ஆம் பிரதிவாதிகளாக முறையே இந்திக பிரதாப் கருணாஜீவ, சுஜானி போகொல்லாகம ஆகியோரும் 5 ஆம் பிரதிவாதியாக நித்திய சேனானி சமரநாயக்கவும் 6 ஆவது பிரதிவாதியாக வரையறு க்கப்பட்ட கவர்ஸ் கோப்ரடீஸ் சேர்விசஸ் தனியார் நிறுவனம் பெயரிடப்பட்டுள்ளன.
இந் நிலையில் நேற்று விசாரணைகள் இடம்பெற்ற போது, இது தொடர்பிலான அடுத்த கட்ட விசாரணைகளை எதிர்வரும் 31 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி, குற்றப் பத்திரிகை மீதான விசாரணைகளை அடுத்த வருடம் பெப்ரவரி மாதம் 16 ஆம் மற்றும் 20 ஆம் திகதிகளில் விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக அறிவித்தார்.