கேரள மாநிலத்தில் இருந்து அபுதாபிக்கு சென்று அங்கு கார் டிரைவராக பணியாற்றும் நபருக்கு லாட்டரி சீட்டு மூலம் 10 லட்சம் திர்ஹம் பரிசாக கிடைத்துள்ளது.
அபுதாபி: கேரள மாநில தலைநகர் திருவனந்தபுரத்தை சேர்ந்தவர் அப்துல் சலாம் ஷாநவாஸ். கடந்த 1997-ம் ஆண்டு வேலைதேடி வளைகுடா நாடுகளுக்கு சென்ற ஷா நவாஸ், முதலில் ஷார்ஜா நகரில் டாக்சி டிரைவராக இருந்தார். தற்போது அபுதாபியில் ஒரு வீட்டில் கார் டிரைவராக பணியாற்றி வருகிறார்.
அபுதாபி நாட்டின் சுற்றுலா மற்றும் கலாச்சாரத்துறை இணைந்து 47 நாள் கோடைக்கால விற்பனை கொண்டாட்டத்தின் ஒருபகுதியாக ’மால் மில்லியனைர்’ என்னும் பரிசுச் சீட்டு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது.
கலிதியா மால், அபுதாபி
கலிதியா மாலில் சுமார் 200 திர்ஹம்களை செலவழித்து இந்த பரிசு குலுக்கலில் ஷாநவாஸ் நுழைந்தார். கடந்த 5-ம் தேதி நடந்த குலுக்கலில் இவருக்கு 10 லட்சம் திர்ஹம்கள் (இந்திய மதிப்புக்கு சுமார் 2 கோடி ரூபாய்) பரிசு தொகையாக கிடைத்துள்ளது.
சமீபத்தில் தனது சொந்த ஊரில் நிலம் ஒன்றை வாங்கிய ஷாநவாஸ், வரும் 2021-ம் ஆண்டில் அங்கு ஒரு வீட்டை கட்டுவதற்கு திட்டமிட்டிருந்தார்.
’நான் இன்னும் 50 ஆண்டுகள் உழைத்தாலும் இவ்வளவு பெரிய தொகையை பார்க்க முடியாது’ என குறிப்பிட்ட ஷா நவாஸ் வாங்கிய சீட்டுக்கு பரிசு விழுந்ததாக கைபேசியில் வந்த எஸ்.எம்.எஸ்.-ஐ அழித்துவிட்டு தவித்த நிலையில், கைபேசி எண் மற்றும் இதர தகவல்களை வைத்து பரிசுத்தொகையை அதிகாரிகள் உறுதிப்படுத்தினர்.
ஷா நவாசுக்கு அராபிய நல்ல உடைகள் தந்து அவரை விலையுயர்ந்த காரில் அழைத்து வரச் செய்து இந்த பரிசுத்தொகையை அதிகாரிகள் வழங்கி, வாழ்த்தினர்.
’இத்தனை பெரிய தொகை தனக்கு பரிசாக கிடைத்தாலும் கேரளா மாநிலத்தில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள என் மக்களை சுற்றியே எனது நினைவுகள் அலைமோதுகின்றன.
இறைவன் அருளால் அவர்கள் நல்லபடியாக பக்ரீத் பண்டிகையை கொண்டாட வேண்டும் என விரும்புகிறேன்’ எனஅபுதாபியில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அப்துல் சலாம் ஷாநவாஸ்(43) குறிப்பிட்டார்.