போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தியை நோக்கி இட்டுச் சென்ற மகிந்த ராஜபக்ச அரசாங்கத்தை அப்ப(ம்) கோட்பாட்டில் கவிழ்க்க முடியுமாயின் நாட்டுக்கு எந்த பணிகளையும் செய்யாத தற்போதைய அரசாங்கத்தை அப்ப(ம்) கோட்பாட்டில் மாற்றுவது பெரிய காரியமல்ல எனகூட்டு எதிர்க்கட்சியின் ஒருங்கிணைப்பாளரான நாடாளுமன்ற உறுப்பினர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார்.
மினுவங்கொடையில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் உரையாற்றும் போதே அவர் இதனைக் கூறியுள்ளார்.
தற்போதைய அரசாங்கத்தை 2017ஆம் ஆண்டில், அவர்கள் நாட்டுக்கு அறிமுகப்படுத்திய அப்ப(ம்) கோட்பாட்டை பயன்படுத்தியோ வீட்டுக்கு அனுப்புவோம்.
மேலும் மகிந்த ராஜபக்ச தலைமையில் அரசாங்கத்தை அமைத்த பின்னர் இந்த கோட்பாட்டை அனைவரும் அறிந்து கொள்ள முடியும்.
யுத்தம் காரணமாக நாடு அழிந்து போயிருந்த சந்தர்ப்பத்திலேயே மகிந்த ராஜபக்ச நாட்டை பொறுப்பேற்று போரை முடிவுக்கு கொண்டு வந்து, அதற்கு செலவு செய்த பணத்தை கல்விக்கு செலவு செய்தார்.
மகிந்த ராஜபக்ச போரை முடிவுக்கு கொண்டு வந்து நாட்டை அபிவிருத்தி செய்து வந்த போது மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் தேவை சிலருக்கு ஏற்பட்டது. இதற்காக பல்வேறு கருத்துக்களை சமூகமயப்படுத்தினர்.
தற்போது மாற்றம் ஏற்பட்டுள்ளதா என்பது குறித்து சிந்திக்க வேண்டும். நாட்டின் தேசிய பாதுகாப்பு பாதிக்கப்பட்டுள்ளது, வடக்கு, கிழக்கில் உள்ள பௌத்த விகாரைகள் உடைக்கப்பட்டுள்ளன.
அரிசி விலை 100 ரூபாவாக அதிகரித்துள்ளது, மாற்றத்திற்காக வாக்களித்தவர்களுக்கு தற்போது வெட்கம் ஏற்பட்டுள்ளது எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.