அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் இலங்கை புதிய அரசியலில் சூறாவழி ஒன்றைக் கிளப்பிவிட்டிருக்கின்றார்.
இம்மாதத்துடன் பதவியிலிருந்து ஓய்வுபெற்றுச் செல்லும் அவர் இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்களை ஒவ்வொருவராகச் சந்தித்து பிரியாவிடை பெற்றுவருகின்றார்.
அந்த வகையில், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்த போது அவர் தெரிவித்ததாக ‘கசியும்’ தகவல்கள்தான் கொழும்பு அரசியலில் இப்போது ”ஹொட் ரொப்பிக்’!
கொழும்பு, விஜேராம மாவத்தையிலுள்ள மகிந்த ராஜபக்ஷவின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் கடந்த ஞாயிறு இடம்பெற்ற இந்தச் சந்திப்பில் கோதாபய ராஜபக்ஷவை இலக்குவைத்தே அமெரிக்கத் தூதுவர் பேசியதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.
மகிந்தவின் காலத்தில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளராகக் கடமையாற்றிய கோதாபய மிகவும் சக்திவாய்ந்த ஒருவராகக் கருதப்பட்டவர்.
இராணுவத்தில் மட்டுமன்றி, நகர அபிவிருத்தியிலும் அவருடைய பங்கு பிரதானமாக இருந்திருக்கின்றது.
மிகவும் திறமையான, கண்டிப்பான திட்டமிட்டுச் செயற்படும் ஒரு அதிகாரி என ராஜபக்ஷ காலத்தில் பெயரெடுத்தவர்.
அவரது ஒரு பக்கம் அதுவென்றால் அவரது மறுபக்கம் அவர் ஒரு கடும் போக்கு சிங்கள பௌத்த தேசியவாதி.
இலங்கை அரசியலில் கடும் சர்ச்சைகளுக்குக் காரணமாக இருந்த பொதுபல சேனாவின் உருவாக்கத்தின் பின்னணியில் அவர் இருந்துள்ளார்.
இதன்மூலம் சிங்களக் கடும்போக்காளர்கள் மத்தியில் ”ஹீரோ”வாகவே இவர் பார்க்கப்படுகின்றார்.
அதேவேளையில், இலங்கையை சிங்கள பௌத்த நாடாக மாற்றத் துடிக்கும் சிங்கள புத்திஜீவிகளும், தமது இலக்கை அடைவதற்கு கோத்தாவின் ஆளுமையைத்தான் நம்பியுள்ளார்கள்.
அதனால்தான், அடுத்த வருட இறுதியில் நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில் கோத்தா களமிறக்கப்படுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
கூட்டு எதிரணியின் சார்பில் மகிந்த மீண்டும் போட்டியிட முடியாத நிலையில், சிங்கள மக்கள் மத்தியில் வசீகரம் மிக்க அடுத்த தலைவராக இருப்பவர் கோத்தாதான் என்பதில் சந்தேகம் இல்லை.
ஆனால், தற்போதைய சர்வதேச நிலைமைகளைப் பொறுத்தவரையில், கோத்தா குறித்த பார்வையை மாற்றியமைக்க வேண்டிய தேவை ஒன்று கூட்டு எதிரணிக்கு உள்ளது.
அதற்காகவே ‘வியத்மய’ என்ற அமைப்பு களத்தில் இறக்கப்பட்டுள்ளது. ஆனால், மேற்குலகம் கோத்தா விடயத்தில் இறுக்கமாகவே இருக்கும் என்பதைத்தான் கடந்த ஞாயிறு சந்திப்பு உணர்த்தியிருக்கின்றது.
வியத்மயவில் கோத்தா
இப்போது அரசியலில் முக்கியமாகப் பேசப்படும் ‘வியத்மய’ என்ற அமைப்பில் கோத்தாவின் பங்கு முக்கியமானது.
கடந்த மாதம் கொழும்பிலுள்ள சங்க ரி லா ஹொட்டலில் நடைபெற்ற இந்த அமைப்பின் ஆண்டு விழாவும், அதில் கோத்தா நிகழ்த்திய உரையும், அரசியலில் சர்ச்சையைக் கிளப்பிய விடயங்கள்.
பொருளாதார தொழில்நுட்ப ரீதியில் நாட்டை அடுத்த நூற்றாண்டுக்குக் கொண்டுசெல்வதற்கான திட்டமிடலை இந்த அமைப்பின் மூலமாக அவர் முன்வைக்கின்றார்.
தன்மீதான ”இராணுவ வாதி”, ”சிங்களத் தேசியவாதி” என்ற இமேஜை மாற்றியமைப்பதற்கான ஒரு உபாயமாகவே இந்த அமைப்பை அவர் பயன்படுத்த முற்படுகின்றார்.
இதன் மூலம் தன்மீதான மேற்குலகின் பார்வையை மாற்றியமைப்பதற்கு அவர் முற்படுகின்றார் என்ற கருத்து ஒன்று முன்வைக்கப்பட்டது.
பொது எதிரணியில் சார்பில் அதாவது ராஜபக்ஷக்கள் தரப்பில் ஜனாதிபதித் தேர்தலில் களமிறக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படும் கோத்தா, தன்மீதான ஒரு புதிய இமேஜை உருவாக்குவதற்காக ”வியத்மய” என்ற அமைப்பைப் பயன்படுத்திக்கொள்ள முற்படுகின்றார் என்பதில் சந்தேகம் இருக்கத் தேவையில்லை.
இதன் அடுத்த கட்டமாகத்தான் தான் சிறுபான்மையின மக்களுக்கு விரோதமானவன் அல்ல என்பதைக் காட்டிக்கொள்ள அவர் முற்பட்டிருக்கின்றார்.
‘இப்தார்’ மாதம் இந்த விடயத்தில் அவருக்கு உதவியது. அழுத்கம பகுதியில் நடைபெற்ற இப்தார் நிகழ்வின் மூலமாகவும், அவர் நடத்திய இப்தார் மூலமாகவும் தான் முஸ்லிம்களின் நண்பர் எனக் காட்டிக்கொள்வதில் அவர் வெற்றிபெற்றிருக்கின்றார். ”எதிர்கால ஜனாதிபதிக்கு ஜெயவேவா…” என்ற கோஷத்துடனேயே அழுத்கமவில் அவர் வரவேற்கப்பட்டார் என்பது கவனிக்கத்தக்கது.
இதனைவிட, கோத்தாவுக்கும் மைத்திரிக்கும் இடையில் ஒரு புரிந்துணர்வு இருப்பதாகவும் சொல்லப்படுகின்றது. கோத்தா களமிறங்கும் பக்கத்தில் சுதந்திரக் கட்சியிலிருக்கும் பலர் அந்தப் பக்கத்துக்குச் செல்வதற்கான வாய்ப்புக்களும் அதிகம் உள்ளது. இது கோத்தாவுக்குள்ள மற்றொரு பிளஸ்!
சர்வதேச ரீதியான தன்மீதான இமேஜ மாற்றியமைக்க ”வியத்மய”யும், உள்நாட்டில் இப்தாரையும் அவர் பயன்படுத்திக்கொண்டாலும், அவர் எதிர்கொள்ளும் முக்கியமான தடையாக இருப்பது அவரது இரட்டைக்குடியுரிமைதான்!
அமெரிக்கப் பிரஜை
அமெரிக்க பிரஜாவுரிமையையும் கொண்டிருக்கும் கோதாபய அதனைத் துறக்காத வரையில் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாது. அரசியலமைப்புக்கான 19 ஆவது திருத்தத்தின் மூலமாக கோத்தாவுக்கு ரணில் வைத்துள்ள ‘செக்’ அது!
பிரதமராகியதும் தனக்கு ஆபத்தாக வரக்கூடிய 3 விஷயங்களில் ரணில் கவனத்தைச் செலுத்தினார்.
மூன்றாவது தடவையாகவும் ஜனாதிபதியாக ஒருவர் போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தியது அதில் பிரதானமானது.
இது மகிந்தவுக்கு வைக்கப்பட்ட செக்.
இரண்டாவது, பாராளுமன்றத்தைக் கலைப்பதற்கு ஜனாதிபதிக்கு இருந்த அதிகாரத்தை மட்டுப்படுத்தியது. இது மைத்திரிக்கு வைக்கப்பட்ட செக்.
நான் ஜனாதிபதியாகத் தெரிவான அன்றிரவே பாராளுமன்றத்தைக் கலைத்திருக்க வேண்டும்” என மைத்திரி கடந்த வாரம் ஆதங்கத்துடன் சொன்னது அந்த ஆத்திரத்தில்தான்.
மூன்றாவது இரட்டைப் பிரஜைவுரிமை உள்ளவர்கள் தேர்தலில் போட்டியிட முடியாத நிலையை ஏற்படுத்தியது.
இது கோத்தாவுக்கும் பசிலுக்கும் வைக்கப்பட்ட செக்!
எந்தளவுக்கு திட்டமிட்டு தந்திரோபாயத்துடன் ரணில் செயற்படுகின்றார் என்பதற்கு இது சிறந்த உதாரணம்! இதன்மூலம் அடுத்த தேர்தலில் தனக்கான பாதையில் தடைகள் இருக்காது என்பதுதான் ரணிலின் கணிப்பு!
அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப்
மகிந்த கெசாப் பேச்சு
மகிந்த தரப்பைப் பொறுத்தவரையில் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள மக்களின் அதிகளவு ஆதரவைப் பெறக் கூடியவராக கோத்தாதான் உள்ளார்.
அதனைவிட முஸ்லிம் தரப்பும் அவரை ஆதரிக்கலாம் என்ற நிலையும் உள்ளது. கோத்தா மீதான இந்த இமேஜ் நன்கு திட்டமிட்ட முறையில் உருவாக்கப்படுவதையும் அவதானிக்க முடிகின்றது.
கோத்தாவைக் களமிறக்க வேண்டும் என்ற கோரிக்கைகள் பலமடைந்திருக்கும் நிலையில், கடந்த வாரம் மகிந்த ராஜபக்ஷவும் அது தொடர்பாக முதல் முறையாகக் குறிப்பிட்டிருந்தார். ”அந்தக் கோரிக்கை குறித்து உரிய நேரத்தில் பரிசீலிப்போம்” என அவர் குறிப்பிட்டிருந்தார்.
மகிந்தவின் இந்த அறிவிப்பு வெளிவந்த ஒரு சில தினங்களிலேயே அமெரிக்கத் தூதுவர் அதுல் கெசாப் மகிந்த ராஜபக்ஷவைச் சந்தித்து ஒன்றரை மணி நேரம் பேசினார்.
அந்தப் பேச்சில் கோத்தாவையே அமெரிக்கத் தூதுவர் இலக்கு வைத்ததாக செய்திகள் வெளியாகியுள்ளன. யாழ்ப்பாணத்திலிருந்து வெளிவரும் தமிழ்த் தினசரி ஒன்று இது குறித்த செய்திகளை வெளியிட்டது.
”அமெரிக்கப் பிரஜையாக இருந்துகொண்டு கோத்தா இழைத்துள்ளதாகத் தெரிவிக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டு, உண்மைகள் கண்டறியப்படும் வரையில் அவரது பிரஜாவுரிமையை ரத்துச்செய்வதற்கு அமெரிக்க முன்வராது” என தூதுவர் கெசாப் உறுதியாகக் கூறிவிட்டதாகச் சொல்லப்படுகின்றது.
கோத்தா மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் சாதாரணமானவையல்ல. மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் மற்றும் யுத்தக் குற்றங்கள் எனும் மிக மோசமான குற்றச்சாட்டுக்கள் அவர் மீது சுமத்தப்பட்டுள்ளன.
சர்வதேச கிரிமினல் குற்ற நீதிமன்றங்களினால் விசாரிக்கப்பட வேண்டியவை அவை. அவற்றை அமெரிக்க பிரஜையாகவும் இருந்து கொண்டுதான் அவற்றை கோத்தா இழைத்திருக்கின்றார்.
பாரதூரமான இக்குற்றச்சாட்டுக்கள் தமது பிரஜைக்கு எதிராக இழைக்கப்பட்டிருக்கையில், அது குறித்து நீதி நியாயமான விசாரணை நடத்தி தீர்வு கிடைக்கும் வரையில் அமெரிக்க பிரஜைவுரிமையை தமது நாடு ரத்துச் செய்யாது என்பதுதான் அதுல் கெசாப் சொன்ன தகவல். இது ராஜபக்ஷக்களுக்கு கடும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கும் என்பதில் சந்தேகம் இல்லை.
இதனைவிட மேலும் இரு விடயங்களையும் கொசாப் சொல்லியிருக்கின்றார். நிசா பிஸ்வால், தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலராக இருந்த போது, 2014 பெப்ரவரி மாத தொடக்கத்தில், இலங்கை வந்திருந்தார் என்றும், அவரை கோதாபய ராஜபக்ச மரியாதையாக நடத்தவில்லை என்றும், அதுல் கெசாப் நினைவுபடுத்தியிருக்கிறார்.
கோத்தா மீதான அமெரிக்காவின் சீற்றத்தையும் அதிருப்தியையும் இது காட்டியது. இதனைவிட, சங்க ரி லா விடுதியில், கடந்த மே 13ஆம் நாள், நடந்த வியத்மய ஆண்டு விழாவுக்கு முன்னதாக, கோத்தா சீனாவுக்கு மேற்கொண்ட பயணம் தொடர்பாகவும் அமெரிக்க தூதுவர் கேள்வி எழுப்பியிருக்கின்றார்.
அதாவது, கோத்தாவின் அரசியலின் பின்னணியில் சீனா இருக்கின்றதா என்ற சந்தேகம் அமெரிக்காவுக்கு இருக்கின்றது என்பதை இது காட்டியது. கோத்தா களமிறக்கப்படுவதை மேற்குலகம் ஏற்காது எனவும் அமெரிக்கத் தூதுவர் அடித்துக்கூறிவிட்டார்.
2015 இல் இடம்பெற்ற ஆட்சிமாற்றத்தின் பின்னணியில் அமெரிக்கா இருந்தது என்பது அனைவருக்கும் தெரிந்ததுதான்.
ரணிலை அதிகாரத்துக்குக் கொண்டுவர வேண்டும் என்பதுதான் அமெரிக்கவின் இலக்கு. அதற்கு கோத்தா தடையாக வருவதை அமெரிக்கா விரும்பாது.
கோத்தாவின் குடியுரிமை விவகாரத்தை இதற்காக அமெரிக்கா கையாளும் என்பதும் எதிர்பார்க்கக்கூடியதுதான். அமெரிக்க தூதுவரின் செய்தி இதனைத் தெளிவாக வெளிப்படுத்தியுள்ளது. இந்த நிலையில் ராஜபக்ஷக்களின் அடுத்த திட்டம் என்ன?
பி.பார்தீபன்