அமெரிக்க நகரமொன்றில், வாகனமொன்றில் ஏற்றிச் செல்லப்பட்ட பெரும் எண்ணிக்கையான நாணயத்தாள்கள் வீதியில் கொட்டப்பட்டதால், அவ்வழியே சென்றவர்கள் பலரும் நாணயத்தாள்களை எடுப்பதற்கு முண்டியத்த சம்பவம் அண்மையில் இடம்பெற்றது.
ஜோர்ஜியா மாநிலத்தின் அட்லாண்டா நகரிலுள்ள வீதியில் சென்றுகொண்டிருந்த வாகனமொன்றின் பின்புறக் கதவு, தற்செயலாகத் திறந்துகொண்டது.
இதனால், அவ்வாகனத்தில் ஏற்றிச் செல்லப்பட்ட பெரும் எண்ணிக்கையான நாணயத்தாள்கள் காற்றில் பறந்து வீதியில் வீழ்ந்தன. சுமார் 175,,000 டொலர் பணம் இவ்வாறு வீழ்ந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, அவ்வழியே சென்ற வாகனங்களின் சாரதிகளும் ஏனையோரும் தமது வாகனங்களை நிறுத்தி, நாணயத்தாள்களை எடுப்பதற்கு ஆர்வம் காட்டினர்.
எனினும், மேற்படி நாணயத்தாள்களை வைத்திருப்பது, திருட்டுச் செயலாகவே கருதப்படும் என பொலிஸார் அறிவித்துள்ளதுடன், அவற்றைத் தம்மிடம் ஒப்படைக்குமாறு கோரிக்கை விடுத்தனர்.
மேற்படி சம்பவத்தின்போது வீதியிலிருந்து தான் சேகரித்த பணத்தை உள்ளூர் பொலிஸாரிடம் ஒப்படைத்த ஒருவரின் புகைப்படத்தையும் பொலிஸ் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்.