வட கொரியா மற்றுமொரு ஏவுகணை அல்லது அணு சோதனை மேற்கொள்ளும் அச்சத்திற்கு மத்தியில் அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று தென் கொரியாவை அடைந்துள்ளது.
ஏவுகணை தாங்கிய யு.எஸ்.எஸ் மிச்சிகன் நீர்மூழ்கிக் கப்பல் கொரிய தீபகற்பத்தை அடையவிருக்கும் கார்ல் வில்சன் விமானதாங்கி கப்பலுடன் இணைவுள்ளது.
வட கொரியா தனது இராணுவத்தின் 85 ஆவது நிறைவு தினத்தை நேற்று கொண்டாடிய நிலையில் கடந்த காலங்களில் இந்த நிகழ்வில் அது ஏவுகணை சோதனைகளை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
கொரிய தீபகற்பத்தில் அண்மைய வாரங்களில் பதற்றம் தீவிரமடைந்திருப்பதோடு வட கொரியா மற்றும் அமெரிக்கா வார்த்தை மோதலில் ஈடுபட்டு வருகின்றன.
மேலும் ஓர் அசாதாரண நிகழ்வாக வட கொரியா விடயம் பற்றிய சந்திப்பொன்றுக்கு அமெரிக்க செனட் உறுப்பினர்கள் அனைவருக்கும் இன்று புதன்கிழமை வெள்ளை மாளிகைக்கு வரும்படி அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
யு.எஸ்.எஸ் மிச்சிகன் அணு ஆயுத வல்லமை கொண்ட நீர்மூழ்கி கப்பல் என்பதோடு அது 154 டொமஹாக் குரூஸ் ஏவுகணைகளை தாங்கிய 60 சிறப்புப் படை துருப்புகளை உடையதாகும்.
இந்த நீர்மூழ்கிக் கப்பல் கார்ல் வின்சன் போர் கப்பல் குழுவுடன் அமெரிக்காவின் படை திறனை காட்டுவதற்கு போர் ஒத்திகை ஒன்றிலும் ஈடுபடவுள்ளது.
போர் கப்பல் அறிவிக்கப்பட்ட விரையில் கொரிய தீபகற்பத்தை அடையாததால் அது எங்கே உள்ளது என்பது குறித்து குழப்பம் நிலவி வந்தது. என்னும் அது தற்போது பிராந்தியத்தை நோக்கி பயணிப்பதாக அமெரிக்க கடற்படை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இந்த விமானதாங்கி கப்பலை மூழ்கடிப்பதாக வட கொரியா கோபாவேசமாக எச்சரிக்கை விடுத்திருந்தது. அது அமெரிக்காவின் ஆத்திரமூட்டு நடவடிக்கைக்கு முன்கூட்டிய பாரிய தாக்குதல் ஒன்றாக இருக்கும் என்று கூறியது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இம்மாத ஆரம்பத்தில் அளித்த தொலைக்காட்சி பேட்டி ஒன்றில், தாம் விமான தாங்கி கப்பலை அனுப்பியதாகவும் அமெரிக்காவிடம் விமாதாங்கி கப்பலை விடவும் பலம் கொண்ட நீர்மூழ்கி கப்பல்கள் இருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
இந்த பதற்ற சூழலை தணிக்க முயற்சித்து வரும் சீனா, அமைதி காக்கும்படி தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது. சீன ஜனாதிபதி ஷி ஜின்பின் நேற்று டிரம்புடன் தொலைபேசியில் உரையாடியுள்ளார்.
அதில் அனைத்து தரப்புகளும் பொறுமை காக்க வேண்டும் என்றும் பதற்றம் அதிகரிக்கும் வகையிலான நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்த்துக்கொள்ளுமாறும் கேட்டுக் கொண்டுள்ளார்.