இந்தியாவின் பெரும் பணக்காரர் முகேஷ் அம்பானி வீட்டில் முதல் திருமணம் நடைபெறவிருக்கிறது. முகேஷ் அம்பானி மகள் இஷா மற்றும் மும்பையைச் சேர்ந்த மற்றோரு தொழிலதிபர் அஜே பிரமால் மகன் ஆனந்த் பிரமால் ஆகியோரின் திருமணம் வருகிற டிசம்பர் 12- ம் தேதி நடைபெறவுள்ளது.
மகள் திருமணத்தை மிகப் பிரமாண்டமாக நடத்த முகேஷ் அம்பானி திட்டமிட்டுள்ளார். குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்ட தலைவர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள், பெரும் தொழிலதிபர்கள், பாலிவுட் நட்சத்திரங்கள், கிரிக்கெட் வீரர்கள் . வெளிநாட்டு தொழிலதிபர்கள் பலரும் இந்தத் திருமணத்தில் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ராஜஸ்தான் மாநிலம் உதயப்பூரில் திருமணம் பிரமாண்டமாக நடத்தப்படவுள்ளது. அழகிய கலைஅலங்காரத்துடன் திருமண அரங்குகள் அமைக்கப்படுகிறது.
தற்போது திருமணத்துக்காக அழைப்பிதழ்களை உறவினர்கள், நண்பர்களுக்கு முகேஷ் அம்பானி, அஜே பிரமால் குடும்பத்தினர் வழங்கி வருகின்றனர். அழைப்பிதழ் மிகவும் அழகாக வடிவமைக்கப்பட்டுள்ளது.
அழகிய பாக்ஸ் ஒன்றில் புத்தகவடிவில் அழைப்பிதழ் தயாரிக்கப்பட்டுள்ளது. முகப்பு பக்கத்தில் இஷா மற்றும் ஆனந்த் ஆகியோரின் முதல் எழுத்தைக் குறிக்கும் வகையில் என்ற எழுத்து மட்டுமே பொறிக்கப்பட்டுள்ளது.
அழைப்பிதழ் உள்ளே இஷா, ஆனந்த் ஆகியோர் தங்கள் திருமணத்தில் பங்கேற்று ஆசி வழங்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
அழைப்பிதழ் உள்ள பாக்ஸை திறந்ததும் காயத்ரி மந்திரம் ஒலிப்பது கூடுதல் ஸ்பெஷல். அழைப்பிதழுடன் மேலும் சிறிய 4 பாக்ஸ்கள் விருந்தினர்களுக்கு வழங்கப்படுகிறது.
அவற்றில் விருந்தினர்களுக்கான‘ பரிசுகள் உள்ளன. இந்த அழைப்பிதழ் ஒன்றின் விலை ரூ.3 லட்சம் ஆகும். தற்போது இந்த அழைப்பிதழ் வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகி வருகிறது.
இந்திய பாரம்பர்யம் கலாசாரத்தின்படி இஷா, ஆனந்த் பிரமால் ஜோடி திருமணம் நடைபெறுமென்று முகேஷ் மற்றும் அஜே பிரமால் குடும்பத்தினர் கூட்டாக வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளனர்.