நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே 9 வயது சிறுவன் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளியை போலீஸார் கைது செய்துள்ளனர். சிறுவனிடம் பாலியல் அத்துமீறல் செய்ததை வீட்டில் சொல்வதாகச் சொன்னதால் கொலை செய்ததாகக் கொலையாளி வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
நெல்லை மாவட்டம் தாழையூத்து அருகே உள்ளது குறிச்சிகுளம் கிராமம். இந்தக் கிராமத்தைச் சேர்ந்த 9 வயது சிறுவன் அதே பகுதியில் உள்ள தனியார் மெட்ரிக் பள்ளியில் மூன்றாம் வகுப்பு முடித்து நான்காம் வகுப்பு செல்லவிருந்த நிலையில், கடந்த 26-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை விளையாடச் சென்றுவிட்டு வீடு திரும்பவில்லை.
அதனால் சந்தேகம் அடைந்த சிறுவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் சிறுவனைத் தேடத் தொடங்கினார்கள்.
ஆனால், சிறுவனைக் கண்டுபிடிக்க முடியாததால் அச்சம் அடைந்த பெற்றோர், தாழையூத்து காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.
காவல்துறையினர் சிறுவனைத் தேடிவந்த நிலையில், குறிச்சிகுளம் கிராமத்தின் அருகே உள்ள நான்கு வழிச் சாலையை ஒட்டிய முட்புதருக்குள் சிறுவனின் உடல் கிடப்பதாகத் தகவல் கிடைத்துள்ளது.
போலீஸார் அங்கு சென்று பார்த்தபோது, தலையில் கல்லால் பலமாக அடிபட்ட நிலையில் சிறுவனின் உடலை போலீஸார் கைப்பற்றினார்கள்.
சிறுவன் உடல் – கொலையாளி கைது
சிறுவனின் உடல் கிடந்த இடத்தை ஆய்வு செய்த போலீஸார், பாலியல் தொல்லை காரணமாக யாரோ அவரைக் கொலை செய்திருக்கலாம் என முடிவுக்கு வந்தார்கள்.
அதனால் குறிச்சிகுளம் பகுதியைச் சேர்ந்த 8 பேரிடம் தனிப்படை போலீஸார் தீவிர விசாரணை நடத்தினர். அதில் அதே ஊரைச் சேர்ந்த 19 வயது இளைஞரான மாயாண்டி என்பவருக்குக் கொலையில் தொடர்பு இருப்பது தெரியவந்தது. அதனால் அவரிடம் தீவிர விசாரணை நடத்தப்பட்டது.
அப்போது போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்த கொலையாளியான மாயாண்டி, `சிறுவன் எல்லோரிடமும் நன்றாகப் பழகக்கூடியவன். 9 வயது மட்டுமே ஆகியிருந்தாலும் டிக்டாக் செயலியில்கூட சிறப்பாகப் பதிவு செய்துவைத்திருக்கிறான்.
அவன் விளையாடிக் கொண்டிருந்தபோது நான் அங்கே சென்றேன். அவனை அருகில் இருக்கும் முட்புதருக்குள் கூட்டிச் சென்றேன். அங்கு வைத்து பாலியல் ரீதியான தொந்தரவு கொடுத்தபோது அச்சம் அடைந்த அவன், அதை எல்லாம் அவன் அம்மாவிடம் சொல்வதாகக் கூறினான்.
கொலை
நடந்த விவரங்களை வீட்டில் சொன்னால் எனக்கு அவமானம் ஏற்படுமே என அஞ்சினேன். அதனால் அவனைக் சமாதானப்படுத்த முயற்சி செய்தேன்.
ஆனால், அவன் அழுதுகொண்டே எந்தச் சமாதானத்தையும் ஏற்காததால் ஆத்திரத்தில் அருகில் இருந்த கல்லை எடுத்து அவன் தலையில் ஓங்கி அடித்தேன்.
தரையில் விழுந்த அவன் எழுந்திருக்கவே இல்லை. அதனால் அவனது உடலை முட்புதருக்குள் தூக்கி வீசி விட்டு வந்துவிட்டேன். குடும்பத்தினர் தேடியபோது நானும் கூடச் சேர்ந்து தேடினேன்.
ஆனாலும், போலீஸார் நான்தான் அவனைக் கடைசியாக கூட்டிச் சென்ற விவரத்தை எப்படியோ கண்டுபிடித்துவிட்டார்கள். தெரியாமல் இப்படிச் செய்துவிட்டேன்’’ எனக் கதறியிருக்கிறார்.
கைது செய்யப்பட்ட மாயாண்டியை போலீஸார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தார்கள்.