நடைபெறும் நாடாளுமன்றத் தேர்தலில் தலைநகர் டெல்லியில் போட்டியிடுகிறார் பிக் பாஸ் பிரபலம் நித்யா பாலாஜி
நாட்டின் 17 வது மக்களைவைக்கான தேர்தல் தொடங்கி, சில மாநிலங்களில் முதல்கட்ட வாக்குப் பதிவு முடிவடைந்துள்ளது. தமிழகத்தில் 39 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக நாளை மறுதினம் (ஏப்ரல் 18) நடைபெற உள்ளது.
மக்களவைத் தேர்தலில் தலைநகர் புதுடெல்லியின் ஒரு தொகுதியில் தேசிய பெண்கள் கட்சி வேட்பாளராகப் போட்டியிடுகிறார், தமிழகத்தில் கடந்தாண்டு ‘பிக் பாஸ் 2’ மூலம் பிரபலமானவரும் காமெடி நடிகர் தாடி பாலாஜியின் மனைவியுமான நித்யா.
இவர் சமீபத்தில் புதிதாகத் தொடங்கப்பட்ட ’தேசிய பெண்கள் கட்சி’யில் இணைந்தார். அந்தக் கட்சியின் தமிழகத் தலைவராக நித்யா நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
டெல்லியில் போட்டியிடுவது குறித்து நித்யாவிடம் பேசினோம். “காஞ்சிபுரம் தனித் தொகுதியில் போட்டியிடறதா முடிவு செய்திருந்தேன்.
ஆனா, நான் தமிழ்நாட்டுல எந்தத் தொகுதியில போட்டியிட்டாலும், அங்க போய் என்னைப் பத்தி அவதூறு பரப்பணும்கிற பிளான் வச்சிருந்தார் பாலாஜி. ஏன், டெல்லியில எங்களோட தேசியக் கட்சியின் நிர்வாகிகளுக்கே குடிச்சுட்டுப் போனைப் போட்டு, ‘அவளெல்லாம் கட்சித் தலைவியா’னு கேட்டு லந்து பண்ணியிருக்கார்.
இவர் சொன்ன எதையும் காதுல வாங்கிக்காத எங்க கட்சியின் தலைநகர் நிர்வாகிகள்தான் என்னை டெல்லியில போட்டியிட அறிவுறுத்தினாங்க.
வடக்கு டெல்லியில் தமிழர்கள் பரவலா வசிக்கிறது எனக்கு சாதகமா இருக்கும்கிற நம்பிக்கை இருக்கு. அதனால சரின்னு சொல்லிட்டேன். அடுத்த சில நாள்கள்ல டெல்லி போய் தேர்தல் வேலைகளைத் தொடங்கணும்’’ என்றார்.
`சமயங்களில் உங்களது செயல்பாடுகள் பப்ளிசிட்டியை விரும்புவதுபோல் இருப்பதாக சிலர் விமர்சிக்கிறார்களே’ என்ற கேள்வியை முன்வைத்தோம்.
“இப்படி வேற சொல்றாங்களா. டெல்லியில போட்டியிடறதுக்கான உண்மையான காரணத்தை அப்படியே சொல்லிட்டேன்.
ஏங்க இந்தியக் குடிமகனுக்கு எங்க வேணாலும் போட்டியிட உரிமை இருக்கில்லையா. டெல்லியிலிருந்து ராகுல் காந்தி கேரளாவுல போட்டியிட்டா அதுக்குப் பேரும் பப்ளிசிட்டிதானா. எல்லாம் பாலாஜியால வந்த வினை. அவராலதான் நான் இப்படியான பேச்சையெல்லாம் கேட்க வேண்டியிருக்கு’ என்றபடி முடித்துக்கொண்டார்.