பாலியல் உறவுக்கு மறுத்த பெண்ணை கொலை செய்த கள்ளக்காதலனுக்கு ஆயுள் தண்டனை விதித்து தமிழகத்தின் கடலூர் மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கடலூர் மாவட்டம், திட்டக்குடி அடுத்த கூடலூர் காலனியைச் சேர்ந்தவர் பிரகாஷ் (30). இவரது மனைவி செல்வராணி (26). இவர்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர்.
பிரகாஷ் சென்னையில் தங்கி ஹோட்டலில் வேலை செய்து வந்துள்ளார். செல்வராணி தனது மகள்களுடன் கிராமத்தில் வசித்து வந்துள்ளார்.
அதே கிராமத்தைச் சேர்ந்த பிரகாஷின் தம்பி முறையான கருணாமூர்த்தி (23) என்பவருடன் செல்வராணிக்கு கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது.
இவர்கள் இருவரும் பல இடங்களுக்குச் சென்று உல்லாசம் அனுபவித்து வந்துள்ளதை அறிந்த பிரகாஷ் இருவரையும் கண்டித்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மாதம் ஒரு நாள் இரவு, செல்வராணி தனது மகள்களுடன் வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த போது தோட்டத்து வழியாக வீட்டிற்குள் புகுந்த கருணாமூர்த்தி, செல்வராணியை தன்னுடன் பாலியல் உறவில் ஈடுபடும்படி வற்புறுத்தியுள்ளார்.
அதற்கு அவர் மறுக்கவே இருவர்களுக்கிடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. ஆத்திரமடைந்த கருணாமூர்த்தி தாக்கியதில், செல்வராணி மயங்கி வீழ்ந்துள்ளார்.
பின்னர் அவரது முகத்தில் தலையணையை வைத்து அழுத்தி கொலை செய்துள்ளார்.
தடுக்க முயன்ற செல்வராணியில் மகளுக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த முறைப்பாடு பேரில், கருணாமூர்த்தியை கைது செய்த ஆவினங்குடி பொலிஸார், அவர் மீது கடலூர் மகளிர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
இந்த வழக்கில், அரச தரப்பில் சட்டத்தரணி பவானி வாதிட்டுள்ளார்.
வழக்கை விசாரித்த நீதிபதி செல்வம், வீட்டினுள் அத்துமீறி நுழைந்த குற்றத்திற்கு 5 ஆண்டு சிறை தண்டனை மற்றும் 1000 ரூபா அபராதம், கொலை செய்த குற்றத்திற்காக ஆயுள் தண்டனை மற்றும் 1000 ரூபா அபராதம், சிறுமிக்கு கொலை மிரட்டல் விடுத்த குற்றத்திற்கு இரண்டாண்டு சிறை தண்டனை விதித்து, இந்த தண்டனைகளை கருணாமூர்த்தி ஏக காலத்தில் அனுபவிக்க உத்தரவிடப்பட்டுள்ளார்.