இனிமேல் தண்ணீர் பருகும் ஒவ்வொரு முறையும் ஆண்கள் தங்கள் அடிவயிற்றைத் தடவிப் பார்க்க வைத்து விட்டனர் இங்கிலாந்து விஞ்ஞானிகள்
ஒரு நாளாவது பெண்ணாக இருந்து பார்த்தால்தான் எங்களின் கஷ்டம் உங்களுக்குப் புரியும் என்று பெண்கள் விடும் சாபம் இனி பலிக்கப்போகிறது?
ஆண்களும் கருத்தரிக்கலாம் எனும் அதிர்ச்சி ரிப்போர்ட்டைத் தந்து திகில் கிளப்புகிறார்கள் இங்கிலாந்து நாட்டு விஞ்ஞானிகள்.
சார்லஸ் டைலர் தலைமையிலான இங்கிலாந்து விஞ்ஞானிகள் குழு, கழிவுப்பொருட்களால் சுற்றுச்சூழல் மாற்றம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டது.
ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக அந்நாட்டு ஆறுகளில் வாழும் மீன்களை சோதனைக்குட்படுத்தியதில், ஆண் மீன்களிடம் விந்துக்குப் பதிலாக கருமுட்டை இருப்பதைக் கண்டு அனைவரும் அதிர்ந்தனர்.
இயற்கைக்கு மாறாக இது சாத்தியமானது எப்படி? என்று குழம்பிப் போனார்கள்.
பின்னர் அந்த ஆற்றின் நீர் மாதிரிகளைச் சேகரித்து சோதனை செய்ததில் பெண்தன்மையை உருவாக்கக்கூடிய ஈஸ்டிரோஜின் எனும் ஹார்மோன் அதில் கலந்திருப்பதைக் கண்டுபிடித்தனர்.
அதிகப்படியான இரசாயன மற்றும் உயிரியல் கழிவுகள் நீர்நிலைகளில் ஈஸ்டிரோஜினை உருவாக்கிவிடும் என்பது அறிவியல் ஆராய்ச்சிகளின் முடிவு.
உலக நாடுகள் அனைத்திலும் ஓடும் மாசுபட்ட நதி, ஆறு மற்றும் நீர்நிலைகளில் ஈஸ்டிரோஜின் என்கிற ஹார்மோன்கள் கலந்திருக்க வாய்ப்பிருப்பதாகவும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
எவ்வளவு தான் நீரைச் சுத்திகரித்தாலும் அதிலுள்ள ஹார்மோன்களை அழிக்க முடியாது என்றும் அந்த நீரை மனிதர்கள் பருகுவதற்கான சூழல் ஏற்பட்டால் அது பெரிய விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அடுத்த குண்டை தூக்கிப்போட்டு மனித சமூகத்தை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கின்றனர்.
அது இந்த நீரைப் பருகும் ஆண்களும் கருத்தரிக்க முடியும் என்பதே.
இந்த ஆய்வு முடிவு குறித்துப் பிரபல பாலின மருத்துவர் காமராஜிடம் பேசியபோது, ஆண்கள் கர்ப்பமாகும் வாய்ப்பே இல்லை என்று எடுத்த எடுப்பிலேயே அடித்துப் பேசியவர், மனிதர்களின் இனப்பெருக்க முறையும் மீன்களின் இனப் பெருக்க முறையும் முற்றிலும் மாறுபாடானது.
பொதுவாகப் பெண்மீன்கள் கருமுட்டையை வயிற்றில் வைத்திருக்காது. கருமுட்டைகளை வெளியேதான் சுமக்கும். இந்தப் பெண் மீன்கள் மீது காதல் கொள்ளும் ஆண் மீன்கள், அந்தக் கருமுட்டையின் மேல் உயிரணுக்களைப் பீச்சியடிக்கும்.
இப்படி வித்தியாசமான உடலமைப்பைப் பெற்றிருப்பதால், புறவெளியில் ஏற்படும் மாற்றத்திற்குப் பாதிக்கப்படும் முதல் உயிரினம் மீன்கள் தான்.
இந்த ஈஸ்டிரோஜின் ஹார்மோன் பெண்களிடமும் சுரக்கக்கூடிய ஒன்றுதான். பெண்களுக்கான இலட்சணங்களை இந்த ஈஸ்டிரோஜின்களே உறுதி செய்கின்றன.
இந்த மாதிரியாக ஒரு ஹார்மோன் பலகீனமான வடிவமைப்பும் உடல் உறுப்புகளும் உள்ள மீன்களைத் தாக்கும் போது, மீன்கள் பாலினம் பாதிக்கப்படுவது இயற்கை.
ஆனால் இதுபோன்ற பாதிப்புகள் மனிதர்களுக்கு ஏற்படாது. அவ்வளவு எளிதாக ஹார்மோன் அட்டாக் செய்து ஆண்களில் பாலின மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியாது என்று விவரித்தவரிடம் இங்கிலாந்து விஞ்ஞானிகளின் ஆய்வில் ஆண்கள் கர்ப்பம் குறித்து கருத்தை வெளியிட காரணம் என்ன என்று கேட்டபோது….
சுற்றுப்புறச் சூழல் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதுதான் காரணம். சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீது இருக்கும் அக்கறையில் சொல்லப்படுகின்ற விஞ்ஞான பொய்தான் இது என்றார்.
ஆனால் அதுக்காக இந்த விடயத்தை அப்படியே ஒதுக்கித் தள்ளிவிட முடியாது. ஹார்மோனால் ஆண்களுக்குப் பாலின பாதிப்பு எதுவும் ஏற்படாது என்றாலும் வேறு மாதிரியான பிரச்சினைகளை சந்திக்க வேண்டிவரும்.
குறிப்பாக ஆண்மைக் குறைபாடு, உடலில் பெண்தன்மை ஏற்படுதல், மலட்டுத்தன்மை போன்ற பல பாதிப்புகள் ஆண்களுக்கு ஏற்படலாம்.
மேலும் ஈஸ்டிரோஜின் தண்ணீரில் மட்டும் இல்லை. பாக்கெட் செய்யப்பட்ட உணவுப் பொருட்கள், வாகனப் புகை, பூச்சிக்கொல்லி மருந்துகள் என எல்லாவற்றிலும் இருக்கிறது என்று சரவெடிகளை வீசினார்.
வயல், தோட்டங்களில் பூச்சிக்கொல்லி மருந்துகள் தெளிக்கும் விவசாயிகளுக்கு ஹார்மோன் பாதிப்பால் நோய் வருவதற்கு அதிக வாய்ப்பு இருக்கிறது.
அங்கு விளைந்த காய்கறிகளைச் சாப்பிடும் போது நோய் ஏற்படக்கூடிய அபாயம் இருக்கிறது. மொத்தத்தில் இரசாயன கழிவுகள் கலந்துள்ள நீரைப் பருகினால் ஆண்களுக்கு மட்டுமல்ல, மனித சமூகத்துக்கே பாதிப்பு என்றார்.
எது எப்படியிருப்பினும் இனி மேல் தண்ணீர் பருகும் ஒவ்வொரு முறையும் ஆண்கள் தங்கள் அடிவயிற்றை தடவிப் பார்க்க வைத்துவிட்டனர் இங்கிலாந்து விஞ்ஞானிகள்.