35 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியாவில் சமீபத்தில் சினிமா தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன. அமெரிக்கன் மூவி தியேட்டர்ஸுடன் (AMC) கைகோத்து, மேலும் 15 நகரங்களில் ஐந்து ஆண்டுகளுக்குள் 40 தியேட்டர்கள் தொடங்கிவிருப்பதாகவும் அறிவித்தனர். இதனால், மிகுந்த எதிர்பார்ப்புடனும் மகிழ்ச்சியுடனும் இருக்கிறார்கள் அந்நாட்டு மக்கள்.
1970 வரை சவுதி அரேபியாவில் ஏராளமான சினிமா தியேட்டர்கள் இருந்தன. ஆனால், நாளடைவில் இது இஸ்லாமிய மரபுகளுக்கு எதிரானது என்று, இஸ்லாமிய மறுமலர்ச்சி திட்டம் 1980-களில் தியேட்டர்களுக்கு கடும் எதிர்ப்பைத் தெரிவித்தது.
இதனால், ஒரேயொரு தியேட்டரைத் தவிர்த்து மற்ற அனைத்து தியேட்டர்களும் மூடப்பட்டன. இயங்கும் தியேட்டரிலும் கல்வி சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் மட்டுமே வெளியிடுவதுக்கு அனுமதி.
இதனைத் தொடர்ந்து, பல பரிசீலனைகளுக்குப் பிறகு, கடந்த ஏப்ரல் 18-ம் தேதி சட்டபூர்வமாக சினிமா தியேட்டர்கள் இயங்கும் என அறிவிக்கப்பட்டது. சிறப்புக் காட்சியும் அரங்கேறியது.
இந்த காட்சிக்கு மூத்த அரசு அதிகாரிகள், சில வெளிநாட்டு பிரமுகர்கள், தேர்ந்தெடுக்கப்பட்ட தொழில்முனைவோர்கள் மட்டுமே அழைக்கப்பட்டனர்.
35 ஆண்டுகளுக்குப் பிறகு சவுதியில் ஒளிபரப்பான முதல் திரைப்படம் ‘Black Panther’. ரியாத் நகரிலுள்ள ‘சிம்பொனி கச்சேரி மண்டபத்தை’ தியேட்டராக மாற்றியமைத்து, 45 அடி உயர ஸ்க்ரீனில் இப்படம் ஒளிபரப்பப்பட்டது. பொதுமக்களுக்கான டிக்கெட் விற்பனையும் தொடங்கியது. இது 450 சீட்டுகளைக் கொண்ட தியேட்டர்.
இதைப் பற்றி AMC நிறுவனத்தின் தலைமை நிர்வாகி ஆடெம் ஆரோன் தொடக்க விழாவில் கூறியதாவது, “இந்த நாள் AMC வரலாற்றில் மிக முக்கியமான நாள்.
இனி சவுதி அரேபிய மக்கள் படங்கள் பார்ப்பதற்கு பஹ்ரைன், துபாய், லண்டன் போன்ற நகரங்களுக்குச் செல்ல தேவையில்லை. இங்கேயே அமைந்துள்ள அழகான தியேட்டர்களுக்குச் சென்று படங்களைப் பார்த்து மகிழலாம்’ என்று கூறினார்.
இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகு தியேட்டர்களைத் திறப்பதற்கு மிக முக்கியக் காரணமும் உண்டு. இது, சமூக சீர்திருத்தவாதியான ‘இளவரசர்’ முஹம்மது பின் சல்மானின் ‘சமூகம் நவீனமயமாக்கல் திட்டத்தின்’ ஓர் அங்கமும்கூட.
இன்னும் சில காலங்களில் எண்ணெய் விலை குறைவதற்கு வாய்ப்புகள் அதிகம் என்பதால், அந்நேரத்தில் இதுபோன்ற பொழுபோக்கு அம்சங்களின் வாயிலாக ஈட்டப்படும் லாபம், தக்க சமயத்தில் உதவும் என்ற நோக்கிலும் தியேட்டர்கள் திறக்கப்பட்டுள்ளன.
இவர்களின் நீண்ட கால இலக்கு, சுமார் 32 மில்லியன் மக்கள் வாழும் நாட்டுக்கு, மொத்தம் 2,500 ஸ்க்ரீன்ஸ் வீதம் 350 தியேட்டர்கள் 2030-க்குள் திறக்கப்பட வேண்டும் என்பதே.
அதிலும் இங்கு 25 வயதுடையவர்களின் எண்ணிக்கையே அதிகம். நிச்சயம் நலிவடையாத திட்டம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதனால் பெரும்பாலான மக்கள் மகிழ்ச்சியில் உறைந்திருந்தாலும், சிலர் எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர். சில சமூக வலைதள பதிவுகள் ஆச்சர்யப்பட வைக்கிறது.
அதில், ‘நினைவில் இருக்கட்டும். நீ கடவுள் முன் நின்று, படம் பார்த்தவர்கள் அனைவரின் பாவங்களையும் வாங்கி கொள்வாய்’ என்றெல்லாம் பதிவிட்டிருந்தார்கள்.
இதைப் பற்றி அந்நாட்டு தகவல் தொடர்பாளர் அவாத் அல் அவாத் கூறுகையில், “தியேட்டர்களுக்கு வந்து படம் பார்த்து மகிழ வேண்டும் என நினைப்பவர்களை நாங்கள் மனதார வரவேற்கிறோம். வர விருப்பமில்லாதவர்களை நாங்கள் எதுவும் சொல்ல முடியாது. அது, அவர்களின் தனிப்பட்ட விருப்பம்’’ என்றார்.
அந்நாட்டு சின்னத் திரைகளின் சென்சார் விதிமுறைகள்தான் வெள்ளித்திரைக்கும். மதம், அரசியல், கவர்ச்சி தொடர்பான படங்கள் முற்றிலும் தவிர்க்கப்படும். ஒரு மாசம் ஸ்ட்ரைக் நடந்ததுக்கே, எப்படா தியேட்டர் போவோம்னு ஆயிடுச்சு. ஆனா, இவங்க எப்படித்தான் 35 வருஷம் இருந்தாங்களோ!