2006ம் ஆண்டு ஆயுதப் போராட்டத்தினதும், சமாதானப் பேச்சுவார்த்தைகளினதும் முடிவுகளைத் தீர்மானிக்கும் ஆண்டாக மாறியது.
நோர்வேயின் சிறப்புத் தூதுவர் ஜொன் ஹன்சன் பவர் ( Jon Hanssen Bauer ) இன் அவதானிப்பு இவ்வாறாக இருந்தது.
அதாவது அனுசரணையாளராக தொடர்ந்து செயற்படுவதா? அல்லது செயற்பாடுகளைச் சுருக்கிக் கொள்வதா? என்பது விவாதமாக அமைந்தது.
நிலமைகளுக்கு ஏற்றவாறு எம்மைச் சரிசெய்ய வேண்டியிருந்தது. நிலமைகளின் போக்கை அவதானித்த எனக்கு ஆரம்பத்திலேயே முழமையான போரை நோக்கி நிலவரங்கள் செல்லலாம் என உணர்ந்தேன்.
Norwegian Peace Envoys Jon Hanssen-Bauer, left, and Erik Solheim, right
நவம்பரில் நடந்த கூட்டுத் தலைமை நாடுகளின் சந்திப்பிற்கு முதலிருந்தே எமது நடவடிக்கைகளை குறைப்பது, அதாவது கூட்டுத் தலைமை நாடுகளின் செயற்பாடுகளுடனும், பொது மக்களின் பார்வையிலும் சம்பந்தப்பட்டவர்களே தத்தமது செயற்பாடுகளுக்குப் பொறுப்புச் சொல்லட்டும் என எண்ணி, எமது நடவடிக்கைகளைக் குறைத்துக் கொள்ள தீர்மானித்தோம்.
ஏனெனில் தற்போதைய நிலமையில் எமது உயர் பிரசன்னம்; மேலும் பிரச்சனைகளைத் தோற்றுவிக்கலாம்.
அதாவது நோர்வே மீதான தாக்குதல்களும், போரின் போக்கில் எந்த மாறுதல்களையும் ஏற்படுத்தப்போவதில்லை எனக் கருதினோம். இந் நிலையில் கூட்டுத் தலைமை நாடுகளே நிலமைகளைத் தமது கையில் எடுக்கட்டும்.
நாம் உள்ளுர் சந்திப்புகளை ஏற்பாடு செய்வது, தகவல்களை கூட்டுத் தலைமை நாடுகளுடன் பரிமாறுவது, கிளிநொச்சியுடன் தொடர்ந்து தொடர்புகளை வைத்திருப்பது, கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகளைக் குறைப்பது என்பவற்றுடன் நிறுத்த எண்ணினோம்.
கண்காணிப்புக் குழுவினரை முற்றாக எடுப்பது சம்பந்தப்பட்டவர்களுடன் கலந்தாலோசிக்காமல் முடிவு செய்வதாக அமையும். அரசும், புலிகளும் அவ்வாறான நடவடிக்கையை விரும்ப மாட்டார்கள்.
கண்காணிப்புக் குழுவினரின் பாதுகாப்பு என்பது எமது கவலைக்குரிய பிரச்சனை. போர்க் களங்களில் சிக்கி சங்கடப்படுவதை நாம் விரும்பவில்லை.
அதனால் பிரசன்னத்தைக் குறைக்க எண்ணினோம். அதுமட்டுமல்ல நோர்வே மீது அதிகளவு விமர்சனம் வைக்கப்படுவதால் கண்காணிப்புக் குழு தாக்குதலுக்கு இலக்காக அமையலாம் என எண்ணினோம்.
2006ம் ஆண்டு டிசெம்பர் மாத ஆரம்பத்தில் கொழும்பு சென்று பஸிலைச் சந்தித்து நீங்கள் திருகோணமலைத் துறைமுகத்தைப் பாதுகாப்பதற்காக மட்டுமல்ல முழு கிழக்கு மாகாணத்தையும் கைப்பற்றவும் அதன் பின்னர் புலிகளை முழுமையாக அழிக்க எண்ணியுள்ளீர்களா? என வினவினேன்.
ஆம். நான் வெளிப்படையாக சொல்வதானால் நாம் அந்த முடிவை ஏற்கெனவே எடுத்துவிட்டோம். சற்று நேரம் கழித்து அங்கு பாடசாலை ஒன்றில் சிறுவர்கள் கொல்லப்பட்டுள்ளார்களே? நீங்கள் அவ்வாறு செய்ய முடியாது என்றேன்.
உடனே கோபமடைந்த பஸில், நோர்வேயினரும், ஏனையோரும் புலிகளை ஒரு பரந்த வெளிக்கு வருமாறு கூறுங்கள். நாங்கள் அவர்களை நேரில் சந்திக்கலாம்.
அதனால் பொது மக்களின் மரணத்தைத் தவிர்க்கலாம் என்றார். நான்கு மணி நேர சந்திப்பிற்கு பின்னர் நாம் தற்போது போரில் ஈடுபட்டுள்ளோம் எனக் கூறி விடைபெற்றார்.
அத் தருணத்தில் அவ்வாறானால் எங்களால் எந்த உதவியும் செய்ய முடியாது எனக் கூறி கண்காணிப்புக் குழுவினரை வெளியேறுப்படியும், நாமும் எமது பணி முடிந்தது எனக் கூறட்டுமா? எனக் கேட்டேன். அப்போது இல்லை எனத் தெரிவித்த அவர்,
உங்கள் பணி எமக்குத் தேவைப்படக்கூடும். ராணுவ வெற்றியைப் பெறுவோமா? என்பது எனக்கு நிச்சமில்லை. மீளவும் சமாதானத்திற்குச் செல்ல வேண்டி வருமா? என்பதும் தெரியவில்லை.
கண்காணிப்புக் குழுவின் செயற்பாடுகள் குறைக்கப்பட்டாலும் அவர்கள் அங்கு இருப்பது அவசியம் என்றார். அவரைப் பொறுத்தமட்டில் களத்தில் சுயாதீன அமைப்பு இருப்பது நல்லது என எண்ணினார்.
புலிகளுடன் தொடர்பு ஒன்றை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பை எதிர்பார்த்திருப்பதாக இறுதியாக தெரிவித்தார் என சிறப்புத் தூதுவர் தெரிவித்தார்.
2006ம் ஆண்டு செப்டெம்பர் மாதமளவில் 68 வயதான பாலசிங்கத்திற்கு குடலில் புற்றுநோய் இருப்பது தெரியவந்தது.
ஒரு சில வாரங்களே அவரால் வாழ முடியும் என வைத்தியர்கள் தெரிவித்தனர். நவம்பர் மாத இறுதிப் பகுதியில் தனது மக்களின் துன்பத்தை துடைக்கும் முயற்சியில் தம்மால் தீவிரமாக ஈடுபட முடியாதவாறு நோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
அதனைத் தொடர்ந்து சில வாரங்களில் அதாவது 2006ம் ஆண்டு டிசெம்பர் 14ம் திகதி காலமானார்.
பாலசிங்கத்தின் மரணம் குறித்து பிரபாகரன் வெளியிட்ட விஷேட செய்தியில் ‘ தேசத்தின் குரல்’ என விழித்து பாரிய குடும்பமான இயக்கத்தின் மூத்த புதல்வன் எனவும், மூன்று தசாப்தங்களாக வழி காட்டிய நட்சத்திரம் எனவும், அவரது ஆத்மா தமக்கு பலத்தை அளிக்கும் எனவும் புகழ்ந்துரைத்திருந்தார்.
பாலசிங்கத்தின் நினைவுகளை எரிக் சோல்கெய்ம் பகிர்ந்துகொள்கையில்…. “ஜெனீவா பேச்சுவார்த்தைகள் அக்டோபர் மாதத்தில் முடிவடைந்த நிலையில் பாலசிங்கத்தின் மனைவி அடேல் தொலைபேசியில் அழைத்து பாலசிங்கம் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
அவரது மரணத்திற்கு சில வாரங்களுக்கு முன்னர் தாம் அவரைச் சென்று பார்த்ததாகவும், அவர் படுக்கையில் இருந்தாரே தவிர மிகவும் தெளிவான சிந்தனையோடு காணப்பட்டதாகவும், தகவல்களைப் பெறுபவராகவும் காணப்பட்டார்.
ஆனால் அவர் பிரபாகரன் குறித்து மிகவும் ஏமாற்றம் அடைந்தவராகவும், நிலமைகள் மிகவும் பாதகமாக மாறிவருவதை அவர் அவதானித்தார். தனது இறுதிக் காலங்களில் பிரபாகரனுடன் அவர் பேசவில்லை என தாம் நம்புவதாக சோல்கெய்ம் தெரிவித்தார்.
தமிழ் மக்களின் பிரச்சனையில் இந்தியாவின் முக்கியத்துவத்தை பாலசிங்கம் உணர்ந்திருந்த போதும், பிரபாகரனின் வழிமுறைகளில் அவர் அதிருப்தி அடைந்திருந்தார்.
“இப் பிரச்சனையில் பிரபாகரனும் பிரச்சனைக்குரிய ஓர் அம்சம் என்ற முடிவுக்கு அவர் வந்திருப்பார். கிழக்கை புலிகள் இழப்பார்கள் எனத் தெரிவித்த பாலசிங்கம் தொடர்ந்து வடக்கையும் அவர்கள் இழக்கக்கூடும் என தனக்கு தெரிவித்ததாக கூறுகிறார். அவர் ஆரம்பத்தில் நிலமைகளை எவ்வாறு எடை போட்டாரோ அவ்வாறே அவை நடந்தேறின.”
பின்னோக்கிப் பார்க்கையில் இரு தரப்பினரதும் வழிமுறைகளே பிரச்சனைக்குரியதாக அமைந்தன. டிசெம்பர் மாதத்தில் ஏற்பட்ட பாலசிங்கத்தின் மரணத்தின் பின்னர் புலிகள் தரப்பிலிருந்து எவ்வித புதிய முயற்சிகளும் மேற்கொள்ளப்படவில்லை.
பாலசிங்கத்தின் வெற்றிடமே அதற்கான காரணமாகும். பிரபாகரனிடம் சென்று பேசக்கூடிய மனிதராக அவர் இருந்தார். அதனால் அர்த்தமுள்ள தீர்வுகளோடு மீண்டும் அரசியல் பிரச்சாரத்தை எடுக்க அவரால் முடிந்தது.
பாலசிங்கம் குறித்து இந்தியப் பத்தரிகையாளர் நாராயண சுவாமி கூறுகையில்… “பாலசிங்கம் தமிழ் மக்களின் போராட்டம் குறித்து பிரபாகரனை விட தமக்கு அதிகம் தெரியும் என உணர்ந்திருந்தார்.
அதனால்தான் பாலசிங்கம் குறித்து எரிக் சோல்கெய்ம் விடுத்த அறிக்கை பிரச்சனையாக அமைந்தது. தான் சந்தித்தவர்களில் மிகவும் நேர்மையானவராக பாலசிங்கம் இருந்தார் எனவும், ஏனெனில் அவர் பிரபாகனுடன் முரண்பட்டார்.
ஆனால் பகிரங்கமாக எதையும் தெரிவிக்கவில்லை. பல உண்மைகளை அவர் சோல்கெய்ம் இற்கு கூறியுள்ளார்.
ஆனால் ஏனையோர் அந்த பாலசிங்கத்தை அறியவில்லை. புலிகளின் ஒவ்வொரு கொலையையும் பாலசிங்கம் கண்டித்ததும் இல்லை அதேபோல நியாயப்படுத்தியதும் இல்லை என்பதை உலகம் அறியும்.
இதன் அரத்தம் அவரது ஆலோசனைகள் எடுபடாது என்பதல்ல. அவரது ஆலோசனைகள் முடிவுகளை மாற்றும் சக்தி வாய்ந்தன அல்ல என்பதே உண்மையாகும்.
1985 இல் பாலசிங்கம் உட்பட மூன்று இலங்கைத் தமிழர்களை வேண்டப்படாதவர்கள் எனக் குறிப்பிட்டு இந்தியா வெளியேற்றியிருந்தது.
கோபமடைந்த பிரபாகரன் ராஜிவ் காந்தியை நோக்கி, பாலசிங்கத்தின் கருத்துக்களுக்கு நான் செவிமடுப்பதாக நீங்கள் கருதுகிறீர்கள்.
நான் அவரது பேச்சைக் கேட்கிறேன். ஆனால் அதனால் நான் முடிவுகளை மாற்றுவதில்லை. விடுதலைப்புலிகளுக்கு எது நன்மை தருகிறதோ? அதன் வழி நான் தீர்மானிக்கிறேன் என தெரிவித்திருந்தார் என நாரயணசுவாமி பகிர்ந்து கொள்கிறார்.
Ram, Editor-in-Chief, The Hindu
பாலசிங்கம் குறித்து இந்திய பிரபல பத்திரிகை ‘ இந்து’ பிரதம ஆசிரியர் ராம் தெரிவிக்கையில் அவர் ஒரு ராஜதந்திரி. பிரபாகரனுடன் விஷேச உறவை வைத்திருந்தார்.
அவர் ஒரு வெளியுறவு அமைச்சரைப் போன்றவர். தனது மூத்த சகோதரர் என பிரபாகரன் கூறுவார்.
அவர் ஒரு போராளியோ அல்லது அதிகாரத்தில் இருப்பவரோ அல்ல என்பது பலருக்குத் தெரியும். அவருக்கு மரியாதை இருந்தது.
வழிமுறைகளைத் தீமானிப்பவராக அவர் இருந்ததில்லை. வெளி விவகாரமே அவருடன் பேசப்பட்டது.
முதன்முறையாக பிரபாரனைப் பேட்டி கண்டபோது பாலசிங்கமே மொழி பெயர்த்தார். அது பின்னப்பட்டிருப்பதை பின்னர் காண நேர்ந்தது.
பிரபாகரன் ஆங்கிலக் கேள்வியை முழுமையாக பெற்றாரோ தெரியவில்லை. ஆனால் பாலசிங்கம் வெளியுலகத்திற்கு ஏற்றவாறு பின்னியிருந்தார்.
பிரபாகரன் கூறியவற்றிற்கும், அவற்றை வெளியிட்டதற்கும் பெரும் இடைவெளியிருந்தது. அது அவருடைய ராஜதந்திரத்தின் ஒரு பகுதி. அவர் விசவாசமாக இருந்தார். அவரால் புலிகள் எடுத்த தவறான திருப்பங்களை காண முடிந்திருக்கும் என்றார் ராம்.
2006ம் ஆண்டு நத்தார் தினம் நெருங்கியபோது ராணுவம் திருகோணமலையின் தெற்குப் பகுதியிருந்த புலிகளின் இருப்பிடங்களை நோக்கி தாக்குதலைத் தொடுத்தனர்.
குறிப்பாக கடற்கரைப் பகுதியாகிய வாகரை தாக்குதலுக்குள்ளாகியது. இதில் மூன்று சமூகத்தினருமே பெருமளவில் பாதிக்கப்பட்டனர்.
பொதுமக்கள் துப்பாக்கிக்கு இரையானார்கள். வாகரையிலிருந்த சுமார் 40000 மக்கள் இடம்பெயர்ந்தனர். தென் கிழக்கில் அகதிகள் தொகை 200,000 ஆக உயர்ந்தது.
வாகரையை மக்கள் அற்ற பிரதேசமாக மாற்றுவதே அரசின் நோக்கமாக இருந்தது. மறு பக்கத்தில் மக்களை வெளியேறாமல் செய்வதில் புலிகள் குறியாக இருந்தனர்.
இதே வேளை யாழ்ப்பாணக் குடாநாடு இதர பகுதிகளுடன் தொடர்பு அற்ற தரைவழி மூடப்பட்ட ஒன்றாக தொடர்ந்து காணப்பட்டது.
நத்தார் தினம் முடிவடைந்ததும் ராணுவ நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதால் தமது செயற்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துவதாக கண்காணிப்புக் குழுவினர் அறிவித்தனர்.
டிசெம்பர் மாத ஆரம்பத்தில் கண்காணிப்புக் குழுவின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் இருப்பதாக நோர்வே பொலீஸ் தெரிவித்தது. கண்காணிப்புக் குழு அதிகாரி லார்ஸ் ஜொஹான் செல்பேர்க் ( Lars Johan Selvberg) நோர்வேயிலிருந்து கொழும்பு திரும்பியபோது விமான நிலையத்திலிருந்து துப்பாக்கி துழைக்காத வாகனத்தில் அவர் எடுத்துச் செல்லப்பட்டார்.
இவ்வளவு எச்சரிக்கை இதுவரை இருந்நததில்லை. இதனால் கண்காணிப்புக் குழுவினர் கொழும்பிற்கு வந்தனர். இதற்குப் போரையே காரணம் காட்டினர்.
2006ம் ஆண்டு கூட்டுத் தலைமை நாடுகளின் போக்கில் காணப்பட்ட மாற்றங்கள் குறித்து தெரிவித்த சிறப்புத் தூதுவர் ஜொன் ஹன்சன் பவர் ( Jon Hanssen Bauer ) தெரிவிக்கையில் அந்த ஆண்டில் பல நாடுகளின் தூதுவர்களோடு கலந்துரையாடியதாகவும், ராணுவம் சர்வதேச மனித நேய சட்டங்களை மீறுவதாக தெரிவித்த அதேவேளை புலிகளிடம் இதே செய்திகளை தெரிவித்ததாகவும் கூறுகிறார்.
கூட்டுத் தலைமை நாடுகளின் அதிகரித்த பங்களிப்பினை இலங்கை அரசு ஏற்றுச் செயற்பட்டுள்ளது. அமெரிக்கா, யப்பான் இதில் இணைந்திருப்பதை தமக்கு வாய்ப்பாக அரச தரப்பினர் கருதினர்.
( அடுத்த வாரம் தொடரும்)
Erik Solheim அவர்களின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட TO END A CIVIL WAR என்ற நூலிலிருந்து சில பகுதிகள். தொகுப்பு : வி. சிவலிங்கம்