அவ்வாறு, ஆம்புலன்ஸிற்கு வழிவிடாமல் சென்ற கார் ஓட்டுனருக்கு தக்க பாடம் கிடைத்துள்ளது.
மேல் சிகிச்சைக்காக அந்த குழந்தையை ஆம்புலன்ஸ் வாகனம் மூலமாக வேறு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல ஏற்பாடு செய்யப்பட்டது.
பெரும்பாவூர் என்ற இடத்தில் உள்ள மருத்துவமனையில் இருந்து கலம்சேரி என்ற இடத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குழந்தை ஆம்புலன்ஸ் மூலமாக கொண்டு செல்லப்பட்டது.
அப்போது வழியில் ஆம்புலன்ஸிற்கு முன்னால் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் கார் ஒன்று சென்றுள்ளது. ஆம்புலன்ஸ் சைரன் சப்தம், சுழல் விளக்குகளுக்கு அசங்காமல் அந்த காரின் ஓட்டுனர் வழிவிடாமல் சென்றுள்ளார்.
வழியில் பல வாகனங்கள் ஒதுங்கி ஆம்புலன்ஸிற்கு வழி விட்ட நிலையில், இந்த ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஓட்டுனர் மட்டும் வழிவிடாமல் சென்றுள்ளார்.
பெரும்பாவூரிலிருந்து கலம்சேரிக்கு 20 நிமிடங்களில் ஆம்புலன்ஸ் வாகனம் சென்றுவிடுமாம். ஆனால், ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஓட்டுனர் வழிவிடாததால் 35 நிமிடங்களில் அடைந்துள்ளது. 15 நிமிடங்கள் தாமதமாக சென்றுள்ளது.
இதையடுத்து, ஆம்புலன்ஸ் ஓட்டுனர் மொபைல்போன் கேமரா மூலமாக பதிவு செய்யப்பட்ட காட்சிகளுடன் அலுவா போலீசிடம் புகார் செய்யப்பட்டது. வீடியோ காட்சிகளை பார்த்த போலீசார் உடனடியாக விசாரணையில் இறங்கினர்.
KL17 L202 என்ற பதிவு எண் கொண்ட ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட்டை போலீசார் மடக்கினர். விசாரணையில் ஆம்புலன்ஸிற்கு வழிவிடாமல், அந்த காரை ஓட்டி வந்த ஜோஸ் என்பது தெரிய வந்ததும், அவரை கைது செய்தனர்.
மேலும், அந்த ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரையும் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் உரிமையாளருக்கும் நோட்டீஸ் அனுப்பப்பட்டு இருக்கிறது.
போலீசார் ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் ஓட்டுனரிடம் விசாரணை நடத்தியபோது, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு பைலட் வாகனம் போல சென்றதாக சப்பைக் கட்டு கட்டி இருக்கிறார். இது போலீசாரை திகைப்பில் ஆழ்த்தினாலும், அவரை கைது செய்தனர்.
ஃபோர்டு ஈக்கோஸ்போர்ட் காரை ஓட்டிய ஜோஸ் என்பவரின் ஓட்டுனர் உரிமத்தை தற்காலிகமாக ரத்து செய்யவும் அப்பகுதி வட்டாரப் போக்குவரத்து அலுவலருக்கு போலீசார் பரிந்துரை செய்துள்ளனர்.
உயிருக்கு போராடும் குழந்தையை ஏற்றிச் சென்ற ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு கார் ஓட்டுனர் வழிவிடாமல் செல்லும் காட்சிகள் பதைபதைக்க வைக்கிறது. வீடியோவில் காணலாம்.
உயிருக்கு போராடுபவர்களை ஏற்றிச் செல்லும் அல்லது காப்பாற்ற செல்லும் அவசர ஊர்திகளுக்கு வழிவிடுவது சட்டப்படி, தார்மீகபடி ஒவ்வொரு வாகன ஓட்டிகளின் கடமை. அந்த சமயத்தில் அவசர ஊர்திகளுடன் போட்டி போட்டு செல்வதை தவிர்க்கவும்.