14 வயதான தங்கள் மகள் ஆருஷியை கொன்றதாக ஆயுள்தண்டனை விதிக்கப்பட்டிருந்த ராஜேஷ் தல்வார், நுபுர் தல்வார் தம்பதியை அலகாபாத் உயர்நீதிமன்றம் வழக்கில் இருந்து விடுவித்தது.
2008 ஆம் ஆண்டு மே மாதம் 15 இரவு அல்லது 16 அதிகாலை நேரத்தில் தல்வார் தம்பதியின் மகள் ஆருஷி நொய்டாவில் இருக்கும் அவர்களது வீட்டில் கொலை செய்யப்பட்டிருந்தார்.
அதற்கு அடுத்த நாள் அவர்களது வீட்டுப் பணியாளர் 44 வயதான ஹேம்ராஜின் சடலம் அண்டை வீட்டின் மொட்டை மாடியில் கண்டெடுக்கப்பட்டிருந்தது.
இந்த இரட்டைக் கொலை சம்பவம் நடந்த இடத்தில் ஆதாரங்கள் அழிக்கப்பட்டும், முழுமையாக சேகரிக்கப்படாமலும் இருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்த வழக்கில் பல எதிர்பாராத திருப்பங்கள் நிகழ்ந்தன. வழக்கை விசாரித்த சிபிஐ, 30 மாதங்களுக்கு பிறகு வழக்கை முடித்துக் கொள்வதாக அறிவித்த்து.
உச்ச நீதிமன்றத்திற்கு இது தொடர்பாக ஒரு வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. உச்ச நீதிமன்ற அறிவுறுத்தலுக்குப் பிறகு வழக்கை சிபிஐ மீண்டும் விசாரித்தது. ஆருஷியின் பெற்றோரே குற்றவாளிகள் என்ற சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து, பல் மருத்துவர்களான இத்தம்பதியினர் அலகாபாத் உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்கள்.
2013ஆம் ஆண்டு நவம்பர் 25ஆம் நாளன்று, காசியாபாத் சிபிஐ சிறப்பு நீதிமன்றம் ஆருஷியின் பெற்றோர்களே குற்றவாளின் என்று கூறி, இருவருக்கும் ஆயுள் சிறை தண்டனை வழங்கி தீர்ப்பு வழங்கியது.
இந்த ஆயுள் தண்டனை தவிர, தவறான தகவல்கள் கொடுத்தமைக்காக தந்தை ராஜேஷ் தல்வாருக்கு ஓர் ஆண்டு சிறை தண்டனையும் வழங்கப்பட்டது.
சிபிஐ சிறப்பு நீதிமன்ற தீர்ப்புக்கு பிறகு, காஜியாபாதில் உள்ள டாஸ்னா சிறையில் தண்டனை அனுபவித்து வந்தனர் பல் மருத்துவர்களான தல்வார் தம்பதிகள்.