கண் அசைவாலும், சிரிப்பாலும், நடிப்பாலும், ரசிகர்களின் இதயம் தொட்ட கீர்த்தி சுரேஷ், கோலிவுட்டில் கோலோச்சுகிறார். முதல் முறையாக, பரதன் இயக்கத்தில், விஜய்க்கு ஜோடியாக, பைரவா படத்தில் நடித்துள்ளார். இந்த படத்தின் அனுபவங்களை, நம்முடன் பகிர்ந்து கொள்கிறார், கீர்த்தி:
இந்த பொங்கல், உங்களுக்கு ஸ்பெஷல் தானே?
நிச்சயமாக ஸ்பெஷல் தான், இந்த பொங்கலை, பைரவா பொங்கல் என்றே சொல்லலாம். இந்தாண்டின் துவக்கத்திலேயே, எனக்கு பெரிய படம் ரிலீஸ் ஆகிறது. கொஞ்சம் சந்தோஷம்; கொஞ்சம் டென்ஷன் எல்லாம் இருக்கு.
விஜய் கூட நடிக்கும் போது, அவரை கவனித்த விஷயங்கள்?
நடிக்க போகும் வரை, அமைதியாக தான் இருப்பார் விஜய். கேமரா முன் வந்திட்டால், அப்படியே மாறிடுவார். அதேபோல், பாடல் காட்சிகளுக்கு, ரிகர்சல் எல்லாம் பார்க்க மாட்டார்; அமைதியா கவனிப்பார். ஆனால், படப்பிடிப்பின் போது, பட்டையை கிளப்புவார்.
விஜயுடன் நடிக்க பயந்தது, எந்த காட்சியில்?
அவருடன் டான்ஸ் ஆடத் தான் ரொம்ப பயந்தேன். மஞ்சள் மேகம்… என்ற பாட்டு தான், முதலில் எடுத்தாங்க. அந்த காட்சியில் நடிக்கும்போது, பயமாக இருந்தது. பாப்பா… பாப்பா என்ற குத்து பாட்டுக்கு, அவருடன் ஆடியபோது, நடுங்கி போய்விட்டேன். இதுமாதிரி, மற்ற படங்களில் எனக்கு நடந்ததில்லை.
படத்தில், உங்க கேரக்டர் பற்றி?
மலர்விழி என்ற பெயரில், திருநெல்வேலி ஏரியாவில் வசிக்கும், கிராமத்து பெண்ணாக நடிக்கிறேன். பாவாடை – தாவணி, சுடிதார் என, எல்லாம் கலந்த வித்தியாசமான, காஸ்ட்யூம் எனக்கு. சமூக பொறுப்புள்ள கதையில், நானும் இருக்கிறேன் என்பது, பெருமையான விஷயம்.
நீங்க துறு துறு பொண்ணு; விஜய் அமைதி, படப்பிடிப்பில் எப்படி இருந்தது?
தம்பி ராமையா, சதீஷ் இவங்க எல்லாரும் செட்ல இருந்தால், கலகலன்னு இருக்கும். மற்றவர்களுடன் எப்படி கலகலப்பாக பேசுவேனோ, அதைப் போல தான், விஜயுடனும் பேசுவேன்.
அவர் கொஞ்சம் அமைதியாக கேட்டு, மெதுவா பேசுவார்; பேச ஆரம்பித்தால், நல்லா பேசுவார். படம் முடியறதுக்குள்ளே, நல்லா பேசிட்டேன்னு தான் நினைக்கிறேன்.
யாருடன் நடிக்க காத்திருக்கீங்க?
எனக்கு சின்ன வயதில் இருந்தே, சூப்பர் ஸ்டாருடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை உள்ளது. என் அம்மா மேனகா, சிவகுமார் சாருடன், மூன்று படங்களில் நடிச்சிருக்காங்க; அம்மாகிட்ட சொல்வேன், சூர்யா சாருடன் நான் நடிப்பேன் என்று. அதேபோல், இப்போது சூர்யா சாருடன் நடிக்கிறேன். எப்படியும், சூப்பர் ஸ்டாருடன் ஒரு படத்தில் நடிக்க வேண்டும். அப்புறம், தல கூட ஒரு படத்திலாவது நடிக்க வேண்டும்.
நீங்க யாருடைய ரசிகை?
நயன்தாராவின் தீவிர ரசிகை நான். அவங்க நடிப்பு எனக்கு ரொம்ப பிடிக்கும்; நயன்தாரா படங்களை தொடர்ந்து கவனித்து வருகிறேன்.
சிவகார்த்திகேயனுடன், அடுத்து, எப்ப சேர்ந்து நடிக்க போறீங்க?
எனக்கு தெரிஞ்சு, அவருக்கு போர் அடிச்சிருக்கும்ன்னு நினைக்கிறேன். ரெமோ படத்துக்கு பின், இரண்டு பேருக்கும் கொஞ்சம் இடைவெளி தேவை. அந்த இடைவெளிக்கு பின், மீண்டும் சேர்ந்து நடிக்கலாம்.
பொங்கல் கொண்டாட்டம் எப்படி?
ரொம்ப ஜாலியா எதிர்பார்த்துட்டு இருக்கேன். சென்னையில் உள்ள வீட்டில் தான், பொங்கல் கொண்டாடப் போகிறேன். இதுதவிர, இந்தாண்டு பைரவா வேறு ரிலீசாகிறது.
ஒரே, கலகலப்பாக இருக்கும். நிறைய புது டிரஸ் எடுத்திருக்கேன். பொங்கல் சமைக்க தெரியாது. ஆனால், சாப்பிடுவேன். கரும்பையும் ரசித்து சாப்பிடுவேன். வாய் எல்லாம், எரிய ஆரம்பிச்சிடும்; அந்த அளவுக்கு சாப்பிடுவேன்.