இயேசு பிறந்த தினம் சகல கிறிஸ்தவர்களுக்கும் ஒரு மகிழ்ச்சிகரமான பரிசுத்த தினமாகும்.
உலகத்தில் உள்ள சகல கிறிஸ்தவர்களும் இத்தினத்தை பரிசுத்த தினமாகவும் பக்தியுள்ள-மேன்மையுள்ள-சமய வழிபாடாகக் கொண்டாடுகிறார்கள்.
கிறிஸ்மஸ் விழாவில் சிறப்புத்தன்மை என்னவென்றால், தற்காலத்தில் உள்ள பிரிவினைகளும் சிறையிருப்புக்களும் அகற்றப்பட்டு மக்கள் சாந்தியும் சமாதான சக வாழ்வுடனும் வாழ உதவி செய்வதாகும்.
ஆனால், இயேசுவின் பிறப்பின் நோக்கத்தின்படி குறிப்பிடப்பட்டுள்ள செயற்பாடுகள் ஒன்றும் இக்காலத்தில் நடைபெறுவதில்லை.
எங்கும் கொலைகள். போர் அழிவுகள், குடிவெறிகள், வன்புணர்வுகள் நிறைந்து காணப்படுகின்றன. இந்நாளிலே இதற்கோர் எண்ணக்கருவை நாம் கொடுக்க வேண்டும்.
கிறிஸ்மஸ் விழாவின் உண்மையான தாத்பரியம் என்ன என்பதை நாம் கண்டுபிடிக்க வேண்டும். மனிதம், இரக்கம், கிருபை, கருணை என்றால் என்ன என்பதைச் சற்றுச் சிந்திக்க வேண்டும்.
உலக மக்களுக்காகக் கடவுளின் குமாரன் இயேசு மனிதனாகப் பிறந்தார்.
மனித அவதாரம் எடுத்து வாழ்ந்த காலத்தில் அவர் செய்த சேவைகள் எண்ணிலடங்காதவை. அளவிடமுடியாதவை.
மனிதனின் இரட்சிப்புக்காகவும் நல்வாழ்வுக்காகவும் தம்மை சிலுவையில் பலியாக்கினார்.
அவர்களோடு உலகத்தில் வாழ்ந்த காலத்தில் மரித்தோரை உயிர்ப்பித்தார். குருடர்களைப் பார்வையடையச் செய்தார். செவிடர்களுக்கு செவிப்புலனைக் கொடுத்தார். ஊமைகள் பேசினார்கள். முடவர்கள் எழுந்து நடந்தார்கள். நோயாளிகள் சொஸ்தமடைந்தார்கள். அநீதியையும், அடிமைத்தனத்தையும் பகிரங்கமாக எதிர்த்தார்.
நீதிக்காகவும் சமத்துவத்திற்காகவும் போராடினார். உண்மையில் இந்த நத்தார் தினத்தை முன்னிட்டு உலகத்திலும் இலங்கையிலும் உள்ள சகல கிறிஸ்தவ ஆலயங்களிலும் விசேட ஞாபகார்த்த ஆராதனைகள் நடைபெறுகின்றன.
24 ஆம் திகதி நடு இரவில் மக்கள் குடும்பம் குடும்பமாகச் சென்று பிறந்த இயேசு பாலனையும் வணங்குவார்கள். இந்த இரவில் பல இடங்களிலும் நத்தார் கரோல் சேவைகளும் நடைபெறும்.
இயேசு பிறந்த சந்தோஷத்தினால் வீடு வீடாக இன்னிசைப் பாடல்களுடன் பவனி வருவார்கள். கிறிஸ்தவர்கள் மட்டுமல்ல, பல மதத்தவர்களும் பல்லினத்தவர்களும் இப்படியான விழாவில் பங்குபற்றி ஆனந்தம் கொண்டாடுவார்கள்.
ஆடு, மாடுகளை வெட்டி சுவையான உணவுகளைச் சமைத்து தாங்கள் உண்பதுடன் உறவினர்களுக்கும் கொடுப்பார்கள். மதுபானத்தைப் பாவித்து மதிமயங்குவார்கள்.
ஒருவருக்கொருவர் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களைக் கூறுவார்கள். விலை உயர்ந்த அன்பளிப்புக்களை ஒருவருக்கொருவர் கொடுத்து சந்தோஷமடைவார்கள்.
கிறிஸ்மஸ் வாழ்த்து மடல்களை அனுப்புவார்கள். கிறிஸ்மஸ் மரத்தை உண்டுபண்ணி அதில் வெளிச்சம் தரும் பல வர்ண மின்சார விளக்குகளை அந்த மரத்தைச் சுற்றி இணைத்து அழகுபடுத்துவார்கள்.
லூக்கா 2-–7 இன் படி யுதேயா நாட்டில் உள்ள பெத்லகேம் என்னும் தாவீதின் ஊரிலே அவள் தனது முதற்பேறான குமாரனைப் பெற்று, சத்திரத்திலே அவர்களுக்குத் தங்குவதற்கு இடம் கிடைக்காமையால் பிள்ளையைத் துணியால் சுற்றி முன்னணியிலே கிடத்தினார்கள்.
லூக்கா 2:10 இல் தேவதூதன் ஆடு மேய்க்கும் இடையர்களைக் கண்டு பயப்படாதிருங்கள்.
இதோ எல்லா இனத்தாருக்கும் மிகுந்த சந்தோஷத்தை உண்டாக்கும் நற்செய்தியை உங்களுக்கு அறிவிக்கின்றேன்.
லூக்கா 2:11. இன்று கர்த்தராகிய கிறிஸ்து என்னும் இரட்சகர் உங்களுக்காகத் தாவீது என்னும் ஊரிலே பிறந்திருக்கிறார் எனக் கூறினார்.
லூக்கா 2:16 இடையர்கள் தீவிரமாக வந்து மரியாளையும் ஜோசேப்பையும் முன்னணியில் கிடத்தி இருக்கிற பிள்ளையையும் கண்டார்கள்.
03 வானசாஸ்திரிகள் நட்சத்திரங்களைப் பற்றிப் படித்தவர்கள். கிழக்கிலிருந்து வந்த நட்சத்திரத்தைப் பின் தொடர்ந்து ஜெருசலேமிற்கு வந்து குழந்தை இயேசுவைக் கண்டு ஆராதனை செய்தார்கள்.
பொன், தூபம், வெள்ளி மீறை போன்ற திரவியங்களை அன்பளித்துச் சென்றார்கள்.
தாவீதின் அரசன் இயேசு பிறந்துள்ளார் என்ற செய்தி ஏரோது மன்னனுக்கு கிடைத்தவுடன் அவன் பயந்து இயேசுவைக் கொல்ல வழிதேடினான்.
கர்த்தருடைய தூதன் அன்றிரவு யோசேப்புக்கு கனவில் தோன்றி, ஏரோது அரசன் குழந்தையைக் கொலை செய்ய விருப்பதால் இரவோடு இரவாக எகிப்து தேசத்துக்குப் போகும்படி கூறிய படியால் யோசேப்பு குடும்பத்துடன் எகிப்து தேசத்துக்குச் சென்றார்.
ஆனாலும், ஏரோது அரசன் இயேசுவைக் கொல்லும் நோக்கத்தில் இஸ்ரேல் தேசத்தில் உள்ள இரண்டு வயதுக்குட்பட்ட சகல ஆண் குழந்தைகளையும் கொலை செய்தான். தாய்மாரின் அழுகைச் சத்தமோ தேசமெங்கும் பரவியது. லூக்கா 23-– 27 இயேசு கூறியவை வருமாறு:
மாயைக்காரர்களே வேதபாதகரே -பலிசேயர்களே உங்களுக்கு: ஐயா, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறைக்கு ஒப்பாய் இருக்கிறீர்கள். அவைகள் புறம்பே அலங்காரம் காணப்படும்.
உள்ளேயோ மரித்தவர்களின் எலும்புகளாலும் சகல அசுத்தத்தினாலும் நிறைந்திருக்கும்.
அப்படியே நீங்களும் மனுசருக்கு முன்பாக நீதிமான்கள் எனக் காணப்படுகிறீர்கள். ஆனாலும் உள்ளத்திலே மாயத்தினாலும் அக்கிரமத்தினாலும் நிறைந்திருக்கிறீர்கள்.
மத்தேயு 5:3. இயேசு ஆவியில் எழுமையுள்ளவர்கள் பாக்கியவான்கள் பரலோக இராச்சியம் அவர்களுடையது எனக் கூறினார்.
மத்தேயு 19:23 அப்போது இயேசு தம்முடைய சீசர்களை நோக்கி ஜஸ்வரியவான்கள் பரலோக இராஜ்யத்தில் பிரவேசிப்பது மிகவும் அரிதென்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்கிறேன் என்றார்.
மேலும் நல்லெண்ணம், நல்லொழுக்கம் மூலம் உருவாகும் ஏழ்மையான வாழ்க்கையானது, பொய்யான, நீதியற்ற முறையில் வஞ்சகமான முறையில் செல்வந்தராகி வாழும் வாழ்க்கையை விடச் சிறந்தது எனக் கூறினார்.
இயேசு வாழ்ந்துகாட்டிய, துர்நடத்தைகளை எதிர்த்துச் செய்த நற்கருமங்களை நாம் கைக்கொள்ள வேண்டும்.
ஆகவே கிறிஸ்தவர்களாகிய நாங்கள் உயர்ந்த மனித பண்புகள் நிறைந்த வாழ்க்கையை வாழ முயற்சிக்க வேண்டும்.
புது ஆடைகள் அணிந்து வீதிகளைச் சோடனை செய்து வீடுகளை அலங்கரித்து பல வர்ண மின்சார விளக்குகளை இணைத்து புசித்தும், குடித்தும் ஆடம்பர வாழ்க்கை வாழ்வதை விடப் பரிசுத்த வேதாகமத்தில் சங்கீதக்காரன் கூறுவது போன்று நல்வாழ்க்கை என்பது ருசியான சாப்பாடுகள் சமைத்துச் சாப்பிடுவது அல்ல.
ஏழைகளுக்குத் தான தருமம் செய்து கோப சுபாவம் அற்றவர்களாய், பழிவாங்கும் மனமற்றவர்களாய், பிரிவினைகள் சாதி-சமய-பகைமைகளை மறந்து மனமாற்றம் அடைந்தவர்களாய் மாற வேண்டும்.
அப்போது நீதியும் நியாயமும் – சமத்துவமும் நாட்டில் நிலைநிற்கும். கிறிஸ்மஸ் நற்செய்தியானது யாவருக்கும் சமாதானம் என்பதாகும்.
எனவே, இயேசுவின் சிலுவை மரணத்தையும் பாடுகளையும் நினைவுகூர்ந்து நல்மகிழ்ச்சி உடையவர்களாக ஜீவிப்பதோடு படித்தவர், பாமரர், ஏழை, பணக்காரன் என்ற வேறுபாடுகளையும், இனம், மொழி, நாடு, நிறம் என்ற எல்லைகளையும் தாண்டி கிராமங்களிலும் நாட்டிலும் வாழும் சகல மனிதர்களும் சகல உரிமைகளுடனும் சுதந்திரத்துடனும் வாழவேண்டும்.
மேலும் சிறைச்சாலையில் பல ஆண்டுகளாக துன்பம் அனுபவித்துவரும் சிறைக்கைதிகள் விடுதலை அடையவேண்டும்.
காணாமல் ஆக்கப்பட்டோர் தமது குடும்பங்களுடன் மீண்டும் இணைய வேண்டும். போரில் கணவனை இழந்த விதவைகளும் ஊனமுற்றோர்களும் வீடு வாசல்களை இழந்து அநாதைகளாய் வாழ்பவர்களும் பூரண விடுதலைப் பெற்று சந்தோச சமாதானத்துடன் சகவாழ்வை பெற்று நீடுழி வாழ இறைவனை வேண்டி நிற்கிறோம்.
சிறந்த கொள்கை பிரகடனங்களுடன் புதிய அரசை அமைத்திருக்கும் நல்லாட்சி அரசு கடந்த 68 ஆண்டுகளாக துன்புறும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளை தீர்த்து அவர்களுடைய ஜனநாயக உரிமைகளையும் மனித உரிமைகளையும் வழங்க முன்வரவேண்டும்.
அந்த வகையில் மன்னார் சமாதான அமைப்பு நல்லாட்சி அரசின் கவனத்துக்கு கீழ்வரும் விடயங்களை முன்வைக்கிறது.
ஐக்கிய இலங்கைக்குள் வடக்கு, கிழக்கு இணைந்த சமஷ்டி ஆட்சியின் அடிப்படையில் மாநில அந்தஸ்தை வழங்குதல். சமஷ்டி என்பது பிரிவினைவாதமில்லை.
இந்தியா, அமெரிக்கா, ஆபிரிக்கா, ஐரோப்பிய நாடுகளில் உள்ளது போன்ற ஒரு உன்னதமான ஆட்சிமுறையாகும்.
அங்கு அனைவரின் மதங்களும் நலன்களும் உரிமைகளும் மொழிகளும் பாதுகாக்கப்பட்டு வருவதை காணலாம்.சிங்கள பௌத்த தேசிய அரசு என்ற நிலை மாற்றப்பட்டு சிங்களவர்கள், தமிழர்கள், முஸ்லிம்கள், மலைநாட்டு தமிழர்கள் ஆகிய அனைவருக்கும் பொருத்தமான நல்லாட்சி அரசை ஸ்தாபித்தல் முக்கியமானதாகும்.
சர்வ அதிகாரமுள்ள ஜனாதிபதி முறை ஒழிக்கப்பட்டு குடும்ப ஆட்சி அகற்றப்பட்டு மக்களுக்கு பொறுப்புக் கூறக்கூடிய பாராளுமன்ற மக்கள் பிரதிநிதிகள் கொண்ட பிரதமர் ஆட்சியை ஸ்தாபித்தல்.
தமிழ்மொழிக்கும் சிங்கள மொழிக்கு கொடுத்துள்ள தேசிய அந்தஸ்தை வழங்குதல். இலங்கை கடல் எல்லைக்குள் அத்து மீறிவந்து மீன்பிடித்துச்செல்லும் இந்தியர்களையும் அவர்களது படகுகளையும் பறிமுதல் செய்து அதிகூடிய தண்டனையும் சிறைவாசமும் அளித்தல்.
அத்துடன் போரில் பாதிக்கப்பட்ட தமிழ் பிரதேசங்களிலும் தென்பகுதி சிங்களவர்கள் வந்து மீன்பிடித்தல் தடைசெய்தல்.வடக்கு கிழக்கு மாகாணங்களில் தமிழ் மக்கள் வாழும் பிரதேசங்களை இரா ணுவ மயமாக்கி அதன் மூலம் சிங்கள குடியேற்ற ங்களை உருவாக்கி பௌத்த விகாரைகளை அமைத்தல் தடைசெய்யப்பட வேண்டும்.
இறுதியாக யேசு பிறந்த நன்னாளில் தமிழ்மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்பட்டு அவர்களுக்கு ஜனநாயக உரிமைகளையும் வழங்கி மனித உரிமைகளையும் வழங்கி உலகிலே சாந்தி சமாதானத்தோடு கூடிய நல்லாட்சி நடைபெறும் நாடு என்ற பெரு மையை உலகத்திற்கே எடுத்துக்காட்டி, தர்மம் காக்கும் ஓர் புண்ணிய பூமி என்ற நற் பெயரை உலகத்திற்கு வழங்க வேண்டும்.
ஐ.நா. சபையும் உலகநாடுகளும் இணைந்து ஜனா திபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு சமாதானத் திற்கான நோபல் பரிசை வழங்கவேண்டு மென கேட்டு நிற்கிறோம்.