போர் நடைபெற்ற காலப்பகுதியில் எமது மக்களை தயவு தாட்சண்யம் இல்லாமல் கொத்துக் கொத்தாக படுகொலை செய்த குற்ற உணர்ச்சியினால்தான் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தில் பணியாற்றும் இராணுவ அதிகாரி மக்களுக்கு நன்மை செய்கிறார்.
அந்த குற்ற உணர்ச்சி அவரை வாழ்நாள் பூராகவும் வாட்டிவதைக்கும், அதனாலேயே நன்மை செய்வதாக வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
வடமாகாண நீர்ப்பாசனத் திணைக்களத்தின் தலைமை அலுவலகம் நேற்று முல்லைத்தீவு மாங்குளத்தில் திறந்து வைக்கப்பட்டது. இத் திறப்பு விழா நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே முதலமைச்சர் இவ்வாறு கூறினார்.
இங்கு அவர் மேலும் கூறுகையில்;
அண்மையில் பத்திரிகையிலும் ஊடகங்களிலும் வெளிவந்த ஒரு செய்தியில் இராணுவ அதிகாரி ஒருவரின் செயலை பாராட்டி கௌரவித்து அவருக்கு மலர் மாலைகள் அணிவித்து பல்லக்கில் ஏற்றிவந்து விடை கொடுத்து அனுப்பியதாக செய்திகள் வெளிவந்தன.
அவர்கள் இவ்வாறு நடந்துகொள்வதற்கு இயல்பாகவே அந்த அலுவலர் அவ்வாறான நல்ல குணநலன்களைக் கொண்டிருந்தாரா அல்லது அவ்வாறு இயங்குமாறு பணிக்கப்பட்ட அறிவுறுத்தல்களுக்கு அமைய அவர்கள் செயற்பட்டார்களா என்பது பற்றி எனக்கு எதுவும் தெரியாது.
ஆனால் அவரால் மேற்கொள்ளப்பட்ட அபிவிருத்திப் பணிகளுக்கு செலவிடப்பட் ட நிதிகள் எங்கிருந்து வந்தன என்பன பற்றி எதுவுமே கூறப்படவில்லை. முன்பள்ளி ஆசிரியர்களுக்கு எம்மால் ரூபா 6,000ரூபா வழங்கப்பட்டு வருகின்றது. ஆனால் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தால் 30,000 ரூபாவுக்கும் மேலாக வழங்கப்படுகிறது.
இந்நிதி எங்கிருந்து வருகிறது? இதற்கென இராணுவத்திற்கு ஒதுக்கி வைத்த பணமாக இருக்க முடியாது. இவ்வாறான செலவுகளில் வெளிப்படைத்தன்மை இல்லாததால் இராணுவம் திட்டமிட்டே ஐந்து மடங்கு சம்பளம் கொடுத்து எமது மக்களை விலைக்கு வாங்குகின்றதோ என்று எண்ணவேண்டியுள்ளது.
அவர்களுக்கான மேலதிக பணம் எங்கிருந்து கிடைக்கிறது என்பதை இராணுவம் விபரிக்க வேண்டும். இந்த நிதிகள் வடமாகாண சபைக்கு வழங்கப்பட்டிருப்பின் அல்லது வடமாகாண சபையின் ஒத்திசைவோடு மத்திய அரசினால் மேற்கொள்ளப்பட்டிருப்பின் எம் மக்களை விலைக்கு வாங்கும் ஒரு கைங்கரியமாக இது அமைந்திருக்காது.
யுத்த காலப்பகுதியில் எமது உறவுகளை முதியவர், குழந்தைகள், பெண்கள், இளைஞர், யுவதிகள், நோய்வாய்ப்பட்டவர்கள் என்ற எதுவித வேறுபாடுகளோ தயவுதாட்சண்யமோ இன்றி கொத்துக் கொத்தாக கொன்று குவித்த நிகழ்வுகளை நேரில் பார்த்த எவருக்கும் அவை மறந்து போய்விட நியாயமில்லை.
அவ்வளவு உயிர்களையும் காவு கொள்வதற்கு தாம் சார்ந்த ஒரு அமைப்பு காரணமாக இருந்ததே என்ற கவலை மேற்படி இராணுவ அலுவலருக்கு இருந்ததோ நான் அறியேன்.
இருந்திருந்தால் அந்த நினைவு வாழ்நாள் முழுவதும் அவரை வாட்டி வதைக்கும் என்று எதிர்பார்க்கலாம்.
அதனடிப்படையில் தமது தவறுகளை சீர்செய்வதற்கும் அல்லது இறை மன்றாட்டம் மேற்கொள்வதற்குமாக இவ்வறான தார்மீக சிந்தனைகள் அந்த அலுவலரிடம் தோற்றம் பெற்றிருக்கக் கூடும் என்பதை நாம் உணர வேண்டும் என்றார்.