அமெரிக்க டிரோன் விமானம் நடத்திய தாக்குதலில் உயிரிழந்த இரானின் முக்கிய தளபதி காசெம் சுலேமானீயின் இறுதிச்சடங்கில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் குறைந்தது 35 பேர் உயிரிழந்துள்ளதாக இரானிய ஊடகங்கள் கூறுகின்றன.
தென்கிழக்கு இரானின் கெர்மான் பகுதியில் நடைபெற்ற இந்த சம்பவத்தில் 48க்கும் அதிகமானோர் காயமடைந்துள்ளதாகவும் அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
காசெம் சுலேமானீயின் உடல் இரானிலுள்ள அவரது சொந்த ஊரில் இன்று அடக்கம் செய்யப்பட உள்ளது. அவரது இறுதிச்சடங்கில் மில்லியன்கணக்கான மக்கள் கலந்து கொள்ளலாம் என ஏற்கனவே கணக்கிடப்பட்டிருந்தது.
கூட்ட நெரிசலுக்கான காரணம் குறித்து தெளிவாக தெரியவில்லை. ஆனால் சுலேமானீயின் இறுதிச்சடங்கில் கலந்து கொள்வதற்காக மீண்டும் மக்கள் பெருமளவில் கெர்மான் நகர தெருக்களில் செல்வதை காண முடிகிறது.
சுலேமானீயின் படுகொலை இரானுக்கும் அமெரிக்காவிற்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்தியுள்ளது.
மத்திய கிழக்கு நாடுகள் முழுவதிலும் இரான் செல்வாக்கு அதிகரிக்க முக்கிய காரணமாக விளங்கியவர் காசெம் சுலேமானீ. மேலும் அந்நாட்டின் அதிஉயர் தலைவரான அயதுல்லா காமெனிக்கு அடுத்ததாக இரண்டாவது அதிகாரமிக்க நபராக சுலேமானீ விளங்கினார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற பிறகு, இரானுக்கு எதிராக கடுமையான நிலைப்பாட்டை டிரம்ப் எடுத்தார். அதற்கு இரானும் தனது பாணியில் பதிலளித்தது. இதனை தொடர்ந்து கடந்த மாதம் இராக்கில் இயங்கி வரும் இரானிய ஆதரவு பெற்ற ஆயுதக்குழு மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து பதற்றம் மேலும் அதிகரித்தது.