இரு ரஷ்ய ராஜதந்திரிகள் தமக்கிடையே டெலிபோனில் தமாஷாக பேசிக்கொண்ட (சில உண்மைகளும் உள்ளன) உரையாடல் ஒன்று ரிக்கார்ட் செய்யப்பட்டு (யாருடைய வேலை? சி.ஐ.ஏ.?), லீக் செய்யப்பட்டு, தற்போது பரபரப்பை கிளப்பிக்கொண்டு இருக்கிறது.
சுமார் 5 நிமிடங்கள் இவர்கள் இருவரும் தமக்கிடையே பேசிக்கொண்டனர்.
உக்ரேனில் கிரிமியா பகுதியை ரஷ்யா ஆக்கிரமித்தபின் அடுத்து ரஷ்யா எந்த இடத்தை கைப்பற்றும் என இவர்கள் தமாஷாக பேசிக்கொண்ட ஒலிப்பதிவு இது (ரஷ்ய ராஜதந்திரிகள் தமக்கிடையே பேசிக்கொண்டபோது சரளமாக கெட்டவார்த்தைகளை உபயோகித்துள்ளனர். அதை தவிர்த்து விடலாம்).
இந்த உரையாடல் லீக் செய்யப்பட்டது குறித்து ரஷ்யா கனத்த மௌனம் சாதிக்கிறது. இந்த டெலிபோன் உரையாடலை ரிக்கார்ட் செய்தது யார்? எப்படி ரிக்கார்ட் செய்தார்கள் என்பது பற்றி, ரஷ்ய உளவுத்துறைகள் மிக தீவிரமாக ஆராய்ந்து வருகின்றன.
காரணம், இரு ராஜதந்திரிகளும் ரஷ்ய தூதரகங்களில் உள்ள தமது அலுவலகங்களில் இருந்து பேசியிருந்தால், தூதரக போன்கள் ஒட்டுக் கேட்கப்படுகின்றன என அர்த்தமாகிறது!
போனில் உரையாடிய இருவரும், இகோர் சுபாரோவ் (எரித்தியா நாட்டுக்கான ரஷ்ய தூதர்), செர்கேய் பக்காரெவ் (ஸிம்பாப்வே நாட்டுக்கான ரஷ்ய தூதர்).
இந்த ராஜதந்திரிகள் அப்படி என்னதான் தமாஷாக பேசிக்கொண்டார்கள்?
“எங்களுக்கு (ரஷ்யாவுக்கு) கிரிமியா (உக்ரேன்) கிடைத்துவிட்டது. அத்துடன் முடியாது இது. இனிவரும் காலத்தில் காட்டலேனியாவையும் (ஸ்பெயின்), வெனீஸையும் (இத்தாலி) நாம் எடுத்துக் கொள்ளலாம். அப்புறம் ஸ்காட்லாந்தையும், அலாஸ்காவையும் (அமெரிக்கா) பிடுங்கிக் கொள்ளலாம்” என்று பலத்த சிரிப்புடன் கூறுகிறார், இகோர் சுபாரோவ்.
இந்த உரையாடல் பகுதியில் மற்றொரு (தமாஷான அல்லது, சிலருக்கு கோபம் வரக்கூடிய) விவகாரத்தை கிளப்புகிறார்கள் சிலர்.
அது என்னவென்றால், ரஷ்ய ராஜதந்திரி சுபாரோவ், ஸ்காட்லாந்து என்பதை, ரஷ்ய மொழியில் உச்சரிக்கும்போது Scotland என்பது, Cattleland (கால்நடைகளின் பூமி) என்பதுபோல ஒலிக்கிறது.
ஸ்காட்லாந்தில் கால்நடைகள் உள்ள பண்ணைகள் அதிகம். தவிர ஸ்காட்லாந்து நங்கைகளை, (நாகரீக) பிரிட்டிஷ் நங்கைகள், ‘கால்நடை பூமி பெண்கள்’ (cattleland chicks) என கேலியாக அழைப்பது பிரிட்டிஷ் அலுவலகங்களில் வழக்கம்.
சரி, அதை விடுங்கள். வேறு என்ன பேசிக்கொண்டார்கள் இவர்கள்?
“எமது எல்லையோர நாடுகள், எஸ்டோனியா, பல்கேரியா, ரொமானியா ஆகியவற்றையும் கைப்பற்ற வேண்டும்” என்று கூறிய ரஷ்ய ராஜதந்திரி சுபாரோவ், “ஐரோப்பிய ஒன்றியத்தின் எரித்ரியா குழுவின் தலைவருடன் சமீபத்தில் பேசிக்கொண்டிருந்தபோது, அவர் என்னிடம் ஜோக்காக, “பல்கேரியா, ரொமானியா ஆகிய இரு நாடுகளையும் நீங்கள் திரும்ப எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்கும்” என்று கூறினார்” என்கிறார்.
இதையடுத்து இந்த இரு ராஜதந்திரிகளும் தமது தமாஷ் பேச்சில் ஒரு முடிவுக்கு வருகின்றனர்.
“நாம் பேசாமல் பல்கேரியா, ரொமானியா, மற்றும் பால்டிக் கச்சடா நாடுகளை ஐரோப்பிய ஒன்றியத்திடமே விட்டுவிட்டு, கலிபோர்னியாவையும், மயாமியையும் (இரண்டுமே அமெரிக்க மாநிலங்கள்) கைப்பற்றிக் கொள்ளலாம்.” என்கிறார், செர்கேய் பக்காரெவ்.
இதற்கு இகோர் சுபாரோவ், “ஆமா.. நிஜம்தான். மயாமியில் 95% ரஷ்யர்கள்தான் உள்ளார்கள் (இந்த சதவீதக் கணக்கு நிஜமல்ல. ஆனால், மயாமியின் கணிசமான அளவில் ரஷ்யர்கள் – கியூபா நாட்டவர்களுக்கு அடுத்தபடியாக – உள்ளார்கள் என்பது நிஜம்). அங்கு நாம் ஒரு தேர்தல் வைக்கலாம், நீங்கள் அமெரிக்காவுடன் இருக்க போகிறீர்களா? அல்லது ரஷ்யாவுடன் இணைய போகிறீர்களா என்று” என்கிறார்.
அதற்கு செர்கேய் பக்காரெவ் பலத்த சிரிப்புடன், “ஆமா.. நாம் லண்டனிலும் அப்படி ஒரு தேர்தல் வைக்கலாம்” என்கிறார்.
இந்த ஒலிப்பதிவு, சர்வதேச ராஜதந்திர வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்த போகிறது. அது மட்டுமல்ல, பல ராஜதந்திரிகளை திகிலடைய வைக்கவும் போகிறது! (ஆமா.. நாம பேசறதையும் ரிக்கார்ட் பண்ணுவாய்ங்களா?)