கணவன் விபத்தில் இறந்து ஓர் ஆண்டும் ஒரு மாதமும் கடந்து, அவரது உயிரணு மூலம் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்திருக்கிறார், கண்ணூரைச் சேர்ந்த பெண்.
கேரள மாநிலம் கண்ணூரைச் சேர்ந்தவர், சுதாகரன். கல்லூரி துணைப் பேராசிரியராகப் பணிபுரிந்த இவருக்கும் கண்ணூர் ஃபெடரல் வங்கி கடன் பிரிவு மேலாளராகப் பணிபுரியும் ஷில்னாவுக்கும் 2006-ம் ஆண்டு ஏப்ரல் மாதம் திருமணம் நடந்தது.
திருமணமாகி பல ஆண்டுகள் சுதாகரன்-ஷில்னாஆனபின்பும் குழந்தை இல்லாமல் தவித்தனர்.
இந்த நிலையில், 2015 ஆகஸ்ட் 15-ம் தேதி, கல்லூரியின் சக பேராசிரியர்களுடன் நிலம்பூருக்கு சுற்றுலா சென்றிருந்தார் சுதாகரன்.
அப்போது, அவரது மனைவி ஷில்னாவுக்கு உடல்நிலை சரியில்லை எனத் தகவல் வந்ததால், சுற்றுலாவை பாதியில் முடித்துக்கொண்டு தனியாக வீடு திரும்ப முடிவுசெய்தார்.
சுற்றுலா சென்ற வாகனத்தை விட்டு கீழே இறங்கி பேருந்தில் ஏறுவதற்காக சாலையைக் கடந்தபோது, விபத்தில் சிக்கி சுதாகரன் இறந்தார்.
சுதாகரன் மூலம் குழந்தை பெற்றுக்கொள்ள ஷில்னாவும் அவரது உறவினர்களும் விரும்பினர். இதையடுத்து, சுதாகரனின் உயிரணுக்கள் தனியாக எடுத்து பாதுகாக்கப்பட்டது.
பின்னர், அந்த உயிரணுக்கள்மூலம் டாக்டர்கள் உதவியுடன் ஷில்னா கர்ப்பமானார்.
இந்த நிலையில், கண்ணூர் கொயிலி மருத்துவமனையில் நேற்று காலை 11.50 மணிக்கு அறுவைசிகிச்சைமூலம் இரட்டைப் பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்தார் ஷில்னா. இதனால், ஷில்னா மற்றும் உறவினர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.