ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவினால் மூன்றாவது தடவையாக ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியும் என்று உயர்நீதிமன்றம் ஏகமனதாக ஆலோசனை வழங்கியுள்ள நிலையில் எதிர்வரும் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் நாட்டில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெறப்போவது உறுதியாகிவிட்டது.
இதுவரை காலமும் 2015 ஆம் ஆண்டில் ஜனாதிபதி தேர்தல் வரும் என கூறப்பட்டுவந்தாலும் ஜனாதிபதியினால் மூன்றாவது தடவையாக ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முடியாது என்று ஒரு சட்டச்சிக்கல் பல தரப்பினராலும் முன்வைக்கப்பட்டுவந்தது.
முன்னாள் பிரதம நீதியரசர் சரத் என். சில்வா இந்த விடயத்தை முதலில் கிளப்பினார். இதனையடுத்து எதிர்க்கட்சிகளும் இந்த விடயத்தை தூக்கிப்பிடித்தன. இந்நிலையில் கடந்த 5ஆம் திகதி ஜனாதிபதி இது தொடர்பில் தனக்கு சட்ட வியாக்கியானத்தை வழங்குமாறு உயர்நீதிமன்றத்திடம் கேட்டிருந்தார்.
இதனையடுத்து இது தொடர்பில் எழுத்துமூல சமர்ப்பணங்களை சமர்ப்பிக்குமாறு உயர்நீதிமன்றம் கோரியிருந்தது. 38 மனுக்களும் சமர்ப்பிக்கப்பட்டிருந்தன. இதனை ஆராய்ந்த உயர்நீதிமன்ற நீதியரசர்கள் இறுதியில் ஜனாதிபதியினால் மூன்றாவது தடவையாக போட்டியிடுவதற்கு எந்தத் தடையும் இல்லை என்று கடந்த 10 ஆம் திகதி ஆலோசனை வழங்கியுள்ளனர்.
இந்நிலையில் இந்த அறிவிப்பின் பின்னர் ஜனாதிபதித் தேர்தலுக்கான அரசியல் களம் சூடுபிடிக்க ஆரம்பித்துள்ளதுடன் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் மிகப்பரந்தளவிலான பிரசார கட்டமைப்புக்கான ஏற்பாடுகளை முன்னெடுத்துவருகின்றது.
ஆளும் மற்றும் எதிர்த்தரப்புக்கள் ஏட்டிக்குப் போட்டியாக கொழும்பில் கூட்டங்களை நடத்திவருகின்றன. எதிர்க்கட்சிகளும் பொது வேட்பாளரை களமிறக்குவது தொடர்பில் தீவிரமாக செயற்பட்டுவருகின்றன. அத்துடன் அத்துரலியே ரத்ன தேரரும் அரசாங்கத்தைவிட்டு விலகுவார் என்பது உறுதியாகிவிட்டது.
தேர்தல் தினத்தைப் பொறுத்தவரையில் எதிர்வரும் ஜனவரி மாதத்தின் முதல் வாரத்தில் அமையும் என தெரிவிக்கப்படுகின்றது. அதாவது இம்மாதம் 19 ஆம் திகதியுடன் ஜனாதிபதி இரண்டாம் தடவைக்காக பதவியேற்று 4 வருடங்கள் நிறைவடைகின்றன.
இந்நிலையில் அரசியலமைப்பின் பிரகாரம் நவம்பர் மாதம் 19 ஆம் திகதி நள்ளிரவின் பின்னர் ஜனாதிபதி தேர்தலுக்கான வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அதன்படி 20 ஆம் திகதி வர்த்தமானி அறிவித்தல் வெளியாகும் பட்சத்தில் அந்த தினத்திலிருந்து 16 நாட்களின் பின்னர் வேட்பு மனுத் தாக்கல் கோரப்படும்.
வேட்பு மனு கோரப்பட்ட தினத்திலிருந்து 30 நாட்கள் கடந்து தேர்தல் நடத்தப்படவேண்டும். 60 நாட்களை தாண்டிச் செல்ல முடியாது. அவ்வாறு பார்க்கும்போது இம்மாதம் 20 ஆம் திகதியிலிருந்து 46 நாட்களின் பின்னர் உடனடியாக தேர்தலை நடத்தலாம்.
அப்படியாயின் ஜனவரி மாதம் முதல் வாரத்தில் தேர்தல் நடைபெறும். இந்த நிலையில் பரிசுத்த பாப்பரசரின் இலங்கை விஜயம் ஜனவரி மாதம் 13 ஆம் திகதிமுதல் 15 ஆம் திகதிவரையான காலப்பகுதியில் இடம்பெறவுள்ளது. எனி னும் பாப்பரசரின் விஜயமும் தடையின்றி இடம்பெறும் என்று அரசாங்கமும் கூறியுள்ளது.
அப்படிப்பார்க்கும்போது ஜனவரி மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தலை எதிர்பார்க்க முடியும். ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை பொறுத்தவரை ஒரு சில கட்சிகளை தவிர அனைத்துக் கட்சிகளும் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு ஆதரவு வழங்குவதாக அறிவித்துள்ளன.
ஜாதிக ஹெல உறுமயவும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியும் இதுவரை தமது முடிவை அறிவிக்காமல் உள்ளன. ஜாதிக ஹெல உறுமயவைப் பொறுத்தவரை அக்கட்சி அரசாங்கத்தில் இருந்து வெளியேறுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது.
தாம் முன்வைத்துள்ள 19 ஆவது திருத்தச் சட்டத்தை அரசாங்கம் நிறைவேற்றாமல் ஜனாதிபதி தேர்தலுக்கு சென்றால் அரசாங்கத்தை விட்டு வெளியேறி ஜனாதிபதியை தோற்கடிப்போம் என்று அக்கட்சி கூறியுள்ளது.
எனவே இன்னும் 6 தினங்களில் 19 ஆவது திருத்தச் சட்டம் நிறைவேற்றப்படுவதற்கான சாத்தியம் இல்லை. அதனால் ஜாதிக ஹெல உறுமய அரசாங்கத்தைவிட்டு வெளியேறுவது உறுதியாகிவிட்டது என்று கூறலாம். கடந்த புதன்கிழமை கொழும்பில் நடந்த எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் உரையாற்றிய அத்துரலியே ரத்ன தேரர் இந்த விடயத்தை உறுதிப்படுத்திவிட்டார் என்றே கூறலாம்.
மேலும் முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் அரசாங்கம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக கூறப்பட்டுவருகின்றபோதிலும் இதுவரை முடிவு எட்டப்படவில்லை. ஜனாதிபதித் தேர்தலுக்கான அறிவிப்பு வெளியான பின்னரே முடிவு அறிவிக்கப்படும் என்று முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான பரபரப்பான சூழலில் எதிர்க்கட்சிகளின் பொதுவேட்பாளர் விவகாரம் பெரும்பாடாகிவிட்டது. எதிர்க்கட்சிகளின் சார்பில் பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்ட நிலையில் இன்னும் பொது வேட்பாளர் யார் என்பது வெளிவராமல் உள்ளது.
பொது எதிர்க்கட்சிகளின் கூட்டில் பல கட்சிகள் உள்ளன. இந்தக் கூட்டில் புதிதாக தற்போது ஜாதிக ஹெல உறுமயவும் இணைந்துகொண்டுள்ளது. இந்நிலையில் யார் பொது வேட்பாளர் என்பதே கேள்வியாகவுள்ளது. முதலில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க பொதுவேட்பாளராக களமிறக்கப்படுவார் என்று கூறப்பட்டது.
அதற்கான கள முயற்சிகளும் காய்நகர்த்தல்களும் முன்னெடுக்கப்பட்டன. ஆனால் ஏதோவொரு காரணத்தினால் அவர் அதிலிருந்து பின்வாங்கியதாகவும் கூறப்பட்டது.
தனது தந்தையான முன்னாள் பிரதமர் பண்டாரநாயக்க ஆரம்பித்த சிலங்கா சுதந்திரக் கட்சிக்கு எதிராக களமிறங்க அவருக்கு தயக்கம் இருந்திருக்கலாம்.
மேலும் அவரின் இரண்டு பிள்ளைகளும் தாய் மீண்டும் அரசியலுக்கு போவதை விரும்பவில்லை என்றும் தெரிவிக்கப்படுகின்றது. ஆனால் புதிய தகவல்களின் படி சந்திரிகா குமாரதுங்க பொதுவேட்பாளராக போட்டியிட இணங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இதுவரை உத்தியோக பூர்வமாக இந்த விடயம் அறிவிக்கப்படாமல் உள்ளது.
எவ்வாறெனினும் அரசியல் களத்தில் எதுவும் நடக்கலாம். இதேவேளை ரணில் விக்கிரமசிங்க பொது வேட்பாளராக போட்டியிடவில்லை என்பதுதற்போது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது என்று கூறலாம்.
அடுத்ததாக பொது வேட்பாளர் பட்டியலில் கரு ஜயசூரியவின் பெயர் முன்வைக்கப்பட்டுள்ளது. ஆனால் கரு ஜயசூரிய பொது வேட்பாளராக களமிறங்குவதற்கு கட்சிக்குள் எதிர்ப்புக்கள் உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. ரணில் விக்கிரமசிங்க இந்த விடயத்தில் கருத்துக்களை வெளியிடாமல் உள்ளார்.
எனவே கருஜயசூரிய விடயமும் உறுதியில்லாமல் உள்ளது. சஜித் பிரேமதாசவின் பெயர் மிகப்பெரிய அளவில் பொது வேட்பாளர் விடயத்தில் முன்வைக்கப்படாமல் உள்ளது. அந்தவகையில் பொது வேட்பாளர் விடயத்தில் இதுவரை உடன்பாடு இல்லாத நிலை காணப்படுகின்றது.
எனினும் பொது வேட்பாளர் விடயத்தில் விரைவாக தீர்மானம் ஒன்றுக்கு வருமாறு ஐக்கிய தேசிய கட்சியுடன் சம்பந்தப்பட்ட தேரர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தற்போது சர்ச்சைக்குரியவராக பேசப்பட்டுவருகின்ற மங்கள சமரவீர திடீரென கடந்த புதன்கிழமை கொழும்பில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் பொதுக் கூட்டத்தில் கலந்துகொண்டார்.
மங்கள சமரவீர அரசாங்கத்துக்கு செல்லப்போகின்றார் என்று கடந்த சில வாரங்களாக செய்திகள் பரவிவருகின்ற நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டத்தில் அவரது பிரசன்னம் திருப்பு முனையாக அமைந்துள்ளது.
அவர் எவ்வாறான முடிவை எடுப்பார் என்று இதுவரை உறுதியாக தெரியாதுள்ள நிலையில் பொது வேட்பாளராக யார் களமிறக்கப்படுவார் என்ற விடயத்தை வைத்து அவரின் முடிவு அமையும் என்றும் கூறப்படுகின்றது.
இந்நிலையில் எதிர்க்கட்சிகளின் முக்கிய பிரசார சுலோகமாக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை நீக்கப்படவேண்டும் என்ற விடயம் காணப்படுகின்றது.
நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்கவேண்டும் என்றும் தமது பொது வேட்பாளர் வெற்றிபெற்றால் ஆறு மாதங்களில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை நீக்கப்படும் என்றும் எதிர்க்கட்சிகளின் சார்பில் கூறப்பட்டுவருகின்றது.
ஆனால் ஆளும் கட்சியானது இந்த விவகாரத்துக்கு தற்போது பதில் கூறியுள்ளது. அதாவது நாட்டில் ஸ்திரமற்ற நிலையை ஏற்படுத்தவே வெளிநாட்டு சக்திகளுடன் இணைந்து எதிர்க்கட்சிகள் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குமாறு கோருகின்றன.
வெளிச்சக்திகளின் தேவையை நிறைவேற்றவே எதிர்க்கட்சிகள் இன்று முயற்சிக்கின்றன என்று அரசாங்கம் தெரிவித்துள்ளது. இந்தக் கருத்தை ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளரும் அமைச்சருமான சுசில் பிரேம்ஜயந்த தெரிவித்துள்ளார்.
மேலும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையின் காரணமாகவே யுத்தம் முடிக்கப்பட்டது. அதனால்தான் நாடு அபிவிருத்தி செய்யப்படுகின்றது.
இந்நிலையில் யுத்தத்தை நிறுத்த அன்று முயற்சித்த சக்திகள் இன்று எதிர்க்கட்சிகளின் துணையுடன் நாட்டை ஸ்திரமற்ற நிலைக்கு கொண்டு செல்ல இந்த நிறைவேற்று அதிகாரம் என்ற ஆயுதத்தை கையில் எடுத்துள்ளன என்றும் அமைச்சர் பிரேம்ஜயந்த குறிப்பிட்டுள்ளார்.
மேலும் ஐக்கிய தேசிய கட்சியின் வங்குரோத்து அரசியலை. மறைப்பதற்காக நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு அரசாங்கம் தயாரில்லை என்று அமைச்சர் டிலான் பெரேராவும் குறிப்பிட்டுள்ளார்.
எனவே எதிர்க்கட்சிகள் கோருகின்ற வகையில் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமையை நீக்குவதற்கு அரசாங்கம் தயாரில்லை என்பது தெளிவாகின்றது. எனவே ஜாதிக ஹெல உறுமய அரசைவிட்டு வெளியேறப்போவது உறுதியாகிவிட்டது.
இவ்வாறு ஆளும், எதிர்க்கட்சிகளின் காய்நகர்த்தல்கள் இருக்கின்ற நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியில் பிரதான கட்சிகள் பாரிய முயற்சிகளை மேற்கொண்டுவருகின்றன.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு வழங்கவேண்டும் என்று இதன்மூலம் கூட்டமைப்பு தனது நேர்மையை வெளிக்காட்டவேண்டும் என்றும் அமைச்சர் பஷில் ராஜபக் ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.
தமக்கு ஆதரவு வழங்குவதன் மூலம் சிறந்த அரசியல் தீர்வை கூட்டமைப்பு பெற்றுக்கொள்ள முடியும் என்ற ரீதியில் அமைச்சர் பஷிலின் கூற்று அமைந்துள்ளது. இதேவேளை எதிர்க்கட்சிகளின் சார்பில் கருத்து வெளியிட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர் லக் ஷ்மன் கிரியெல்ல தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிரணிக்கு ஆதரவு வழங்கவேண்டும் என்று கோரியுள்ளார்.
இந்நிலையில் கூட்டமைப்பு எவ்வாறான தீர்மானம் ஒன்றை எடுக்கும் என்பது இதுவரை தெளிவுபடுத்தப்படவில்லை. ஆனால் நேற்று முன்தினம் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் ஒரு விடயத்தை திட்டவட்டமாக குறிப்பிட்டுள்ளார்.
அதாவது ”எம்மைப் பயன்படுத்தி இனத்துவேஷத்தை கிளப்பி தேர்தல் முடிவினை சாதகமாக்கிக் கொள்வதற்கு எவருக்கும் நாம் சந்தர்ப்பம் வழங்க மாட்டோம். ஜனாதிபதித் தேர்தலில் எத்தகைய முடிவினை எடுப்பது என்பது தொடர்பில் மக்களுடன் கலந்துரையாடி மனச்சாட்சியின்படி தீர்மானம் எடுப்போம்” என்று அவர் கூறியுள்ளார்.
கடந்த தேர்தலை போன்று இம்முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று பகிரங்கமாக எந்த நிலைப்பாட்டையும் அறிவிக்காமல் இருக்கும் நிலையே காணப்படுகின்றது.
மக்கள் தமது மனச்சாட்சியின் படி தீர்மானம் எடுப்பதற்கு கூட்டமைப்பு இடமளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. ஆனால் எவ்வாறான முடிவுகளை சிறுபான்மை அரசியல் கட்சிகள் எடுத்தாலும் அவை மக்களின் எதிர்கால நலன் சார்ந்ததாக அமையவேண்டும் என்பதே முக்கியமானதாகும்.
ஒரு காலத்தில் நாட்டின் அரசாங்கத்தை தீர்மானிக்கும் சக்திகளாக சிறுபான்மை கட்சிகள் இருந்தன. ஆனால் இன்று அந்த நிலை மாறிவிட்டது. எனவே மீண்டும் அவ்வாறான நிலையை சிறுபான்மைகள் கட்சிகள் உருவாக்கவேண்டியது அவசியமாகும்.