அழகான இலங்கையின் கடலை ரசித்தபடி தங்கள் நாளை சந்தோசமாகத்தான் ஆரம்பித்திருப்பார்கள். யாருக்கும் எதுவும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை இதுதான் நமது கடைசிக் காலை என்று.
ஆம்! இலங்கையின் அழகை ரசிக்க வந்த வெளிநாட்டவர்கள் அலங்கோலமாகிப்போய் திரும்பிப் போகிறார்கள். அதில் இலங்கையைச் சுற்றிப் பார்க்க வந்தவர்கள் வெள்ளைத் துணியில் சுற்றிப் போகிறார் கள்.
கடந்த ஞாயிறன்று இலங்கையில் நிகழ்ந்த தொடர் வெடிகுண்டுத் தாக்குதலில் மொத்தம் 35 வெளிநாட்டவர்கள் பலியானார்கள். அந்த ஒவ்வொரு வெளிநாட்டவருக்குப் பின்னாலும் ஒவ்வொரு கதை நீள்கிறது…
இந்தியாவின் மக்களவைத் தேர்தல் பிரசாரம் முடிந்து இலங்கைக்கு ஓய்வெடுக்க வந்த கர்நாடகாவைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதா கட்சியின் 7 பேர், டென்மார்க் நாட்டின் பெரும் பணக்காரரின் இரு புதல்விகள், இலங்கைக்கு உதவி புரிய வந்த ஒரு குடும்பத்தின் தலைவி என்று ஒரு பெரும் சோகக் கதையே நீள்கிறது.
டென்மார்க் நாட்டின் பிரபல தொழிலதிபர் அன்ட்ரஸன் ஹாவல்க் பாவ்ல்ஸ்ன். உயிர்த்த ஞாயிறு பண்டிகையை முன்னிட்டு இலங்கைக்கு குடும்பத்துடன் சுற்றுலா வந்திருந்தார்.
போர்ப்ஸ் பட்டியலின்படி, டென்மார்க் நாட்டின் முதல் பணக்காரர் இவர்.
பல்வேறு தொழில் நிறுவனங்கள் இவருக்கு உள்ளன. இவரின், சொத்து மதிப்பு 5.9 பில்லியன் அமெரிக்க டொலராகும்.
இலங்கையில் நடந்த குண்டு வெடிப் பில் அன்ட்ரஸனின் நான்கு குழந்தைகளில் மூன்று குழந்தைகள் பலியாகியுள்ளன.
குழந்தைகளைப் பலி கொடுத்த அன்ட்ரஸனுக்கு ஸ்கொட்லாந்து நாட்டின் ஒரு சதவீத நிலம் சொந்தமானது. இந்த நாட்டில் அன்ட்ரஸனுக்கும் இவரின் மனைவி ஆன்னே ஸ்டார்ம் பென்டசர்ஸனுக்கும் சொந்தமாக 200,000 ஏக்கர் நிலம் உள்ளது. பிரித்தானியாவில் அதிகளவில் நிலம் சொந்தமாக வைத்திருப்பவர்களில் இவருக்கு இரண்டாவது இடம். 12 பெரிய தோட்டங்களும் உள்ளன.
பெண்கள் உடையான வேரோ மோடா, ஜேக் அண்ட் ஜோன்ஸ் ஜீன்ஸ் போன்றவை அன்டர்ஸனுக்குச் சொந்தமான `பெஸ்ட் செல்லர்’ நிறுவனத்தின் தயாரிப்புதான்.
“இலங்கை ஓர் அழகான நாடு. இந்த உயிர்த்த ஞாயிறு விடுமுறையை அங்கு கழிக்கலாம்” என்று தன் குழந்தைகளிடம் கூறி கொழும்புக்கு அன்ட்ரஸன் சுற்றுலா அழைத்து வந்துள்ளார். வந்த இடத்தில் குழந்தைகளைப் பறிகொடுத்து விட்டு கண்ணீர் மல்க நிற்கிறார்.
அன்ட்ரஸனுக்கு ஆறுதல் சொல்ல எம்மிடம் வார்த்தை கள் இல்லை!
இந்தியாவில் தற்போது நடைபெற்றுவரும் மக்களவைத் தேர்தலில் கடுமையான பிரசாரத்தை முடித்துக்கொண்டு இலங்கைக்கு ஓய்வெடுக்க கர்நாடகாவின் ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 7 பேர் இங்கு வந்துள்ளனர்.
இங்கு வந்தவர்களைக் காணவில்லை என்று உறவினர்கள் இலங்கைக்கு படையெடுத்து வருகின்றனர்.
இதில் பெங்களூருவைச் சேர்ந்த ஹனுமந்த் ராயப்பா, ரங்கப்பா, புருஷோத்தம், நாகராஜ ரெட்டி மற்றும் சிக்க பள்ளாப்பூரைச் சேர்ந்த சுப்ரமண்யா, கேசவராஜ், சிவகுமார் ஆகிய 8 நிர்வாகிகள் கொழும்பிலுள்ள ஷங்கிரிலா நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்தனர்.
இந்த ஹோட்டலில் நிகழ்ந்த குண்டு வெடிப்பில் 15 பேர் உயிரிழந்தனர்.
இந்தக் குண்டுவெடிப்பில் சிக்கியோரில் 10 இற்கும் மேற்பட்டோர் இந்தியர்கள் என தகவல் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், ம.ஜ.த.வைச் சேர்ந்த ஹனுமந்த் ராயப்பா, ரங்கப்பா ஆகிய இருவரும் குண்டு வெடிப்பில் பலியாகி விட்டனர் என கர்நாடக முதலமைச்சர் குமாரசாமிக்கு தகவல் கொடுத்துள்ளார். இதனிடையே ம.ஜ.த. கட்சியின் உறுப்பினர் விஸ்வநாத்தின் மருமகனும், யலஹங்கா பகுதி ம.ஜ.த. செயலாளருமான புருஷோத்தும் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி நேற்று உயிரிழந்துள்ளார்.
இரத்தம் தோய்ந்த ஆடையுடன் குடும்பத்தைத் தேடி…
இங்கிலாந்து நாட்டின் அழகிய குடும்பம் ஒன்று கணவன், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகள் இந்தக் குண்டுவெடிப்பில் சிக்கி சின்னாபின்னமாகியுள்ளனர்.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் மனைவி, பிள்ளைகளை இழந்த ஒரு குடும்பத் தலைவனின் தவிப்பு, போராட்டம், சோகம் என்று அனைத்தும் கலந்த ஒரு மனநிலையை என்ன எழுதியும் மாளாது.
இறுதியில் இவர் தனது மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளையும் இழந்து அநாதரவாகத்தான் தற்போது சுற்றித் திரிகிறார்.
அழகான இலங்கை அலங்கோலமாகிக் கிடக்கிறது. இலங்கை மண்ணை ரசிக்க வந்தவர்களும் புதையுண்டு போனார்கள்…
அருந்தப்பு தப்பினேன் ராதிகா
”அடக் கடவுளே இலங்கையில் குண்டுவெடிப்புகள். எல்லோருக்கும் கடவுள் துணை நிற்கட்டும். இப்போதுதான் கொழும்பில் சினமன் கிராண்ட் ஹோட்டலிலிருந்து வெளியேறினேன். அங்கு குண்டுவெடிப்பு நடந்துள்ளது. என்னால் இதை நம்ப முடியவில்லை. அதிர்ச்சியாக உள்ளது” என்று பகிர்ந்திருந்தார் தென்னிந்தியத் திரைப்பட நடிகை ராதிகா சரத்குமார்.
அந்த ஹோட்டலில்தான் காலை உணவருந்தினேன்
இலங்கையில் நடந்த தற்கொலை குண்டுத் தாக்குதலில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் அணில் கும்ப்ளே உயிர் தப்பியுள்ளார்.
விடுமுறையைக் கழிப்பதற்காக கும்ப்ளே இலங்கை வந்துள்ளார். கொழும்பில் குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்ட ஹோட்டல் ஒன்றிலேயே அவர் தங்கியிருந்துள்ளார். தான் உட்பட குழுவினர் குண்டு வெடிப்பு நடந்த ஹோட்டலிலேயே உணவருந்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் கும்ப்ளே டுவிட்டர் செய்தியொன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் “அழகான இலங்கைக்கும் அதன் மக்களுக்கும் பிரார்த்தனை” செய்து கொள்வதாக அவர் குறிபிட்டுள்ளார்.