மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்பதற்காக இலங்கைச் சிறையில் உள்ள மீனவரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கும்படி அவரது உறவினர்கள் அரசுக்குக் கோரிக்கை விடுத்துள்ளனர்.
மண்டபம் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த மீனவர் ஜெயசீலன். கடந்த மாதம் 14-ம் தேதி மீன்பிடிக்கச் சென்றபோது இலங்கைக் கடற்படையினரால் சிறைப்பிடித்துச் செல்லப்பட்டார்.
நீதிமன்ற உத்தரவுப்படி இலங்கை யாழ்ப்பாணம் சிறையில் தற்போது அடைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் மீனவர் ஜெயசீலனின் மகன் ஸ்டீபன் (31) மண்டபத்தில் மீன்பிடிக்கக் கடலுக்குச் சென்று வருகிறார்.
நேற்று கடற்கரைக்குச் சென்றபோது திடீர் என உடல் நலக்குறைவு காரணமாக ஸ்டீபன் உயிரிழந்தார்.
இதையடுத்து மகனின் உடலை இறுதியாகப் பார்க்கவும், இறந்த மகனின் இறுதிச் சடங்கில் பங்கேற்கவும் வேண்டி இலங்கைச் சிறையில் உள்ள மீனவர் ஜெயசீலனை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்வதுடன், அவரை உடனடியாக தமிழ்நாட்டிற்கு அழைத்து வரவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு மீனவர் ஜெயசீலனின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.