இலங்கையின் பல்வேறு பகுதிகளில் ஈஸ்டர் தினத்தில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்களின் சூத்திரதாரி என்று இலங்கை அரசால் கருதப்படும் சஹ்ரான் ஹாசிம் என்பவரின் மரணத்தை உறுதிப்படுத்தும் பொருட்டு, அவரின் மகள் மொஹமத் சஹ்ரான் ருஸைனாவின் ரத்தத்தைப் பெற்று டிஎன்ஏ பரிசோதனையை மேற்கொள்வதற்கு கொழும்பு கோட்டே நீதவான் நீதிமன்றம் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு அனுமதி வழங்கியுள்ளது.
சாய்ந்தமருதிலுள்ள வீடொன்றில் கடந்த 26ம் தேதி இடம்பெற்ற தற்கொலைக் குண்டுவெடிப்பில், சஹ்ரானின் உறவினர்கள் உள்ளடங்கலாக பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்த பலர் இறந்த நிலையில், அங்கிருந்து சஹ்ரானின் மனைவி மற்றும் மகள் ஆகியோரை படையினர் காப்பாற்றி சிகிச்சைகளுக்காக மருத்துவமனையில் அனுமதித்தனர்.
இதேவேளை, சஹ்ரானின் சகோதரி மதனியா என்பவரை, டிஎன்ஏ பரிசோதனைக்காக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரியிடம் முன்னிலைப்படுத்துமாறு, மட்டக்களப்பு சிறைச்சாலையின் அத்தியட்சகருக்கு கோட்டே நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.