இலங்கை ஜனாதிபதி தேர்தல் சனிக்கிழமை முடிந்து உடனே வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இரவு முழுவதும் தொடர்ந்து நடந்து வரும் வாக்கு எண்ணிக்கையில் முதல் முதலாக காலி மாவட்டத்தில் இருந்து முதல் தபால் வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாயின.
அதிகாலை 2 மணிக்கு வெளியான முதல் தபால் எண்ணிக்கை முடிவில் கோட்டாபய ராஜபக்ஷ 25.099 வாக்குகள் (67.49 சதவீதம்) பெற்றார்.
சஜித் பிரேமதாஸ – 9.093 வாக்குகள் பெற்றார்.
அனுரகுமார திசநாயக – 2,450 வாக்குகள் பெற்றார்.
வடக்கில் சஜித் அபார முன்னிலை
வாக்கு எண்ணிக்கை முடிவுகள் வெளியாகிற பல தொகுதிகளில் கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலை பெற்று வந்தாலும், தமிழர் பகுதியான வடக்கு மாகாணத்தில் உள்ள மாவட்டங்களில் சஜித் பிரேமதாச அபார முன்னிலை பெற்றுள்ளார். வடக்கு மாகாணத்தில் கோட்டாபாய ராஜபக்ஷவைவிட சஜித் லட்சக் கணக்கான வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
கோட்டாபயவுக்கு ஆதரவாக தமிழர் கட்சிகள் சில மேற்கொண்ட நிலைப்பாடு, அவருக்கு ஆதரவாக தமிழர் வாக்குகளைப் பெற்றுத் தருவதற்கு எந்த அளவுக்கு உதவியுள்ளது என்பது தற்போது கேள்விக்குறியாகியுள்ளது.
தேர்தல் முறையும் – வாக்கு எண்ணிக்கையும்
இலங்கையில் 25 நிர்வாக மாவட்டங்கள் இருந்தாலும், இவை தேர்தலுக்காக 22 மாவட்டங்களாக பகுக்கப்பட்டுள்ளன.
யாழ்ப்பாணமும், கிளிநொச்சியும் இரண்டு நிர்வாக மாவட்டங்கள் என்றபோதும் இவை இரண்டும் ஒரே தேர்தல் மாவட்டங்களாக உள்ளன.
அதுபோல வன்னி, முல்லைத்தீவு, மன்னார் ஆகியவை மூன்று தனித்தனி நிர்வாக மாவட்டங்களாக உள்ளபோதும் இவை மூன்றும் ஒரே தேர்தல் மாவட்டமாக உள்ளன. வாக்காளர் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் இப்படி இவை பகுக்கப்பட்டன. எனவேதான் நிர்வாக மாவட்டங்களை விட தேர்தல் மாவட்டங்களின் எண்ணிக்கை மூன்று குறைவாக இருக்கின்றன.
வாக்குகள் தொகுதிவாரியாக எண்ணப்பட்டாலும் ஒட்டு மொத்தமாக 50 சதவீதத்துக்கும் கூடுதலான வாக்குகளைப் பெறுகிறவரே ஜனாதிபதியாவார்.
இந்தியத் தேர்தல் முடிவுகளைப் போல தொகுதிவாரியான முடிவு பல சுற்றுகளாக அறிவிக்கப்படாது. ஒவ்வொரு தொகுதி முடிவும் முழுமையாகவே அறிவிக்கப்படும்.
இலங்கை ஜனாதிபதி தேர்தலைப் பொறுத்தவரை முதல் தேர்வு, இரண்டாவது தேர்வு, மூன்றாவது தேர்வு என்று ஒருவர் மூன்று பேருக்கு வாக்களிக்க முடியும். முதல் தேர்வு மட்டுமே முதலில் எண்ணி முடிக்கப்படும்.
அதில் எந்த வேட்பாளருக்கும் 50 சதவீதத்துக்கு மேல் வாக்கு கிடைக்காவிட்டால், இரண்டாவது தேர்வு பெற்றவர்கள் யார் என்பது எண்ணப்படும்.
தபால் வாக்குகள் மட்டும் மாவட்ட வாரியாக எண்ணி முடிவுகள் அறிவிக்கப்படும். அந்த அடிப்படையில்தான் முதலாவதாக காலி மாவட்ட தபால் வாக்கு முடிவுகள் வெளியாகியுள்ளன.
இலங்கை ஜனாதிபதி தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரத்தை நேரலையாகத் தெரிந்துகொள்ள: இலங்கை அதிபர் தேர்தல் 2019: நேரலை