தியாகி திலீபனின் 31 ஆவது நினைவேந்தல் நிகழ்வு நேற்று நல்லூரிலுள்ள தியாகி திலீபனின் நினைவிடத்தில் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி, ஜனநாயகப் போராளிகள் கட்சி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் பொது மக்கள் ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர்.
முன்னதாக தியாகி திலீபனின் நினைவுத் தூபி அமைந்துள்ள பகுதி தமிழ்த் தேசிய மக்கள் முன்னிணியினரால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இவர்களும் அஞ்சலி செய்வதற்கான அனைத்து ஏற்பாடுகளுடனும் வருகை தந்திருந்தார்கள்.
இதேபோன்று ஜனநாயகப் போராளிகள் கட்சியும் அனைத்து ஏற்பாடுகளுடனும் அவ்விடத்தில் கூடியிருந்தனர்.இதனால் யார் யார் இதனை ஏற்பாடு செய்வது என்ற குழப்ப நிலை காணப்பட்டது.
எனினும் ஒன்றிணைந்து செயற்படுவதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்ட நிலையில் காலை 10.10 மணியளவில் வழமைபோன்று மாவீரரின் பெற்றோர் ஒருவர் ஈகைச்சுடரினை ஏற்றி அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மலர் அஞ்சலி இடம்பெற்றது. இதனையடுத்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டு நிகழ்வுகள் நிறைவுக்கு வந்தனர்.
இத்தகைய சூழலில் ஜனநாயகப் போராளிகள் கட்சி, ஒலிவாங்கி இல்லாத நிலையில் மௌன அஞ்சலி செலுத்துமாறும் அஞ்சலி நிகழ்வு முடிவடைந்ததும் . நிகழ்வுகள் முடிவடைந்ததாகவும் அறிவித்தார்கள்.
இதேபோன்று ஒலி வாங்கியுடன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியும் ஒரு நிமிட மெளன அஞ்சலியுடன் நிகழ்வுகளை முடிவுக்குக் கொண்டு வந்து திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்துக்குச் செல்லுமாறு அழைப்பு விடுத்தனர்.
நிகழ்வில் பிரசன்னமாகி இருந்த வடக்கு மாகாண சபையின் அவைத்தலைவர் சி.வி.கே. சிவஞானத்திடம் ஊடகங்கள், குறித்தநிகழ்வு தொடர்பாக வினா எழுப்பின.
அதேவேளை குழப்பங்கள் ஏற்பட்டன, அவ்விடத்தில் பாடல் ஒலிபரப்பப்பட்டது. இதனால் சச்சரவு தோற்றம் பெற்றது. அரசியல் செய்வதாயின் வேறு இடத்திற்கு செல்லவேண்டும். இங்கு அரசியல் செய்தல் ஆகாது என்ற சாரப்பட இரு பக்க கருத்துக்களும் முன் வைக்கப்பட்டன. இந்நிலையில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திர குமார் பொன்னம்பம் தனது ஆதரவாளர்களை திலீபன் உண்ணாவிரதம் இருந்த இடத்திற்கு செல்லுமாறு பணித்தமையைத் தொடர்ந்து நிலைமை அமைதியானது. அதனைத் தொடர்ந்து அனைத்து நிகழ்வுகளும் முடிவுற்று கலந்து கொண்டவர்கள் கலைந்து சென்றனர்.