வீடொன்றின் புகைக் கூடு வழியாக வீட்டுக்குள் உள்நுழைந்த திருடர்கள் வீட்டிலிருந்த தாய்,மகள் ஆகியோரது கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி வீட்டிலிருந்த 14 பவுண் தங்க நகைகள் மற்றும் 20 ஆயிரம் ரூபா பணம், துவிச்சக்கர வண்டி என்பவற்றைத் திருடிச் சென்றுள்ளனர்.
குறித்த சம்பவம் யாழ்.உடுப்பிட்டி கட்டைப் புளியடிப் பகுதியில் நேற்று(07) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
வீட்டுக்குள் நுழைந்த நான்கு பேர் கொண்ட திருட்டுக் கும்பல் வீட்டில் தனித்திருந்த தாயையும், மகளையும் கத்தி முனையில் மிரட்டியுள்ளதுடன் சுமார் இரு மணித்தியாலங்களுக்கு மேலாக வீடு முழுவதும் சல்லடை போட்டும் தேடிய பின்னர் வீட்டிலிருந்த தங்கநகைகள், பணம் என்பவற்றைத் திருடியுள்ளனர்.
திருடிய நகைகளை வீட்டிலிருந்த தாய் மற்றும் மகளிடம் காட்டிய திருடர்கள் “இவை கவரிங் நகைகளாகவிருந்தால் நீங்கள் இருவரும் உயிரோடிருக்க மாட்டீர்கள்” எனத் தெரிவித்தவாறு அவர்களைக் கடுமையாகத் தாக்கியுமுள்ளனர்.
இதனையடுத்து குறித்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.