“எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே, இந்த வீட்டிலே, உத்தமன் போலவே நடிக்கிறார்கள்” என்ற தமிழ் பாடல் வரிகளும், “பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்” என்ற பழமொழியும் இன்றைய தமிழக அரசியலை சுட்டிக்காட்டியுள்ளது.
ஆம். தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி எத்தனை நாள் தான் மக்களை ஏமாற்றுவார். உத்தமன் போல் நடிக்கமுடியாது என்பதை இன்று உணர்த்தி விட்டார்.
எந்த நாளும் உத்தமன் போல் நடிக்க முடியாது. ஒரு நாளைக்கு ‘உத்தமன் ‘ வேஷம் கலைந்து விடும். இன்று வேஷம் கலைந்து விட்டது. பல நாள் திருடனின் தில்லுமுல்லுகள் இன்று அம்பலமாகிக் கொண்டிருக்கின்றன.
எப்படியாவது எதிர்வரும் 4 ஆண்டுகள் ஆட்சி நடத்த வேண்டும், தமது கொள்கைகளையும் பதவிகளையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதே எடப்பாடியினதும், அமைச்சர்களினதும் எண்ணமாகும். கனவில் கூட முதலமைச்சராக முடியாத எடப்பாடி சசிகலாவின் ஆதரவினால் அவரது பினாமி முதலமைச்சரானார்.
இன்று அக்கட்சியின் சுகங்களை அனுபவித்த அவருக்கு அதனை விட்டு விலக மனமில்லை. ஆனால் தமிழக சட்ட சபை அமைச்சர்களும் எம். பி.க்களும் அவரது கட்டுப் பாட்டில் இல்லை.
…………………………………………………………………………………….
உத்தமன் போல் நடிப்ப வர்களின் முகத்திரை கிழிக்கப்பட வேண்டும்.
வெள்ளை வேட்டி வெள்ளை சட்டை ஏமாற்று வித்தைக்கு முடிவு கட்ட வேண்டும்.
திறமையானவன் அடை யாளம் காணப்பட வேண்டும்.
…………………………………………………………………………………………
அமைச்சர்களான உதயகுமார், திண்டுக்கல் சீனிவாசன் உட்பட பலர் தத்தமது கருத்துக்களை சுதந்திரமாக கூறுகின்றனர். முதலமைச்சரை மதிப்பதே இல்லை.
சசிகலாவின் பினாமி முதலமைச்சரான எடப்பாடி இன்று மத்திய பாரதிய ஜனதா கட்சியுடனும், பிரதமர் மோடியுடனும் நெருங்கிய தொடர்புகளைப் பேணியும் தமது பதவியையும் ஆட்சியையும் பாதுகாக்க அனைத்து வழிகளையும் பின்பற்றி வருகிறார்.
தேசப்பற்று என்பது அயோக்கியனின் இறுதி புகலிடம் என்பது முதுமொழி. அதனைத்தான் இன்று இலங்கையில் பல அரசியல்வாதிகள் தமது “பிழைப்பாக” நடத்துகின்றனர்.
ஆனால் பிரதமர் நரேந்திர மோடி உண்மையான உள்ளத்துடன் சிறந்த தேசப்பற்றாளன். இன்று ஆட்சிக்கு வந்து மூன்று வருடங்கள் கழிந்து விட்ட நிலையிலேயே தமிழ்நாட்டில் வருமானத்துறை சோதனைகள், ஊழல் மோசடிகள் தொடர்பான விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இதனை அரசியல் பழிவாங்கல் என்று கூறமுடியாது. நாட்டுக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்தாது ‘ஏப்பம்’ விட்டு வருமானத்தை விட அதிக சொத்துக்களை சேர்த்து பலர் திடீரென பணக்காரர்களாகி உள்ளனர். இது எப்படி சாத்தியமாகும் என்பதை விசாரணை நடத்த வேண்டியது அரசின் கடப்பாடாகும்.
இவ்வளவு காலமும் ஜெயாவின் மரணம் வரை தமிழகத்தின் ஊழல் மோசடிகள் வருமானத்தை விட அதிக சொத்துக்களை சேர்ப்பது இரும்புத் திரை போட்டு மறைக்கப்பட்டது. இன்று இரும்புத்திரை விலகியுள்ளது. வருமான வரித்துறை சோதனைகள் ஆரம்பமாகியுள்ளன. இது தான் உண்மை.
ஊரிலிருந்து ஒருசதமேனும் இல்லாது பிச்சைக்காரர்களாக அ.தி.மு.க.வில் இணைந்து அமைச்சர்களானவர்களுக்கு இன்று பல வீடுகள், வாகனங்கள் ஏன் பொண்டாட்டிகளும் இரண்டு பேர். திடீரென பணம் கொட்ட ஆரம்பித்துள்ளது. இது எப்படி சாத்தியமாகும்?
சுகாதார அமைச்சர் விஜயபாஸ்கரின் வீடு பலமுறை சோதனை செய்யப்பட்டது. அவரது மனைவி ரம்யாவிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டன.
அவர் பல கம்பனிகளுக்கு தலைவராக பதவி வகித்து வருவது தொடர்பாகவும் விசாரிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நடிகர் சரத்குமார், ராதிகா ஆகியோரிடமும் விசாரணைகள் நடத்தப்பட்டன.
இன்று முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் அவரது மகன் கார்த்திக் சிதம்பரத்திடமும் விசாரணைகள் நடத்தப்பட்டன. இவ் விசாரணைகளில் பல உண்மைகள் வெளியாகி இருப்பதாகவும் விரைவில் வழக்குகள் விசாரணைக்கு எடுக்கப்படும் எனவும் அறிவிப்பு செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில் சசிகலாவின் பினாமி எடப்பாடி பழனிச்சாமி மீதும் வருமானத்தை விட அதிக சொத்து சேர்த்ததாகவும் ஊழல் மோசடிகளில் தன்னை ஈடுபடுத்திக் கொண்டதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இவ்வாறானதொரு புறச் சூழலிலேயே தன்னை முதலமைச்சராக்கிய சசிகலாவை விட்டு பிரிந்து மோடியுடன் சாய்வதற்கும் தாஜா பணணுவதற்கும் எடப்பாடி நிகழ்ச்சி நிரலை தயார் செய்து முன்னெடுத்து வருகிறார்.
இந்தக் கொள்கையை பல அமைச்சர்களும் எம்.எல்.ஏ. க்களும் ஆதரிக்கின்றனர். எடப்பாடிக்கு சாமரம் வீச ஆரம்பித்துள்ளனர். இதனை அறிந்து கொண்ட சசிகலா தனக்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர்கள் இருவரையும் எம்.எல்.ஏக்களையும் ஆட்சியிலிருந்து வேறுபடுத்தியுள்ளார்.
அண்மையில் இந்த 11 பேரும் தனியாக சந்தித்து பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ளனர். எடப்பாடிக்கு எதிராக போர்க்கொடி உயர்த்தியுள்ளனர். அதேவேளை, அ.தி.மு.க வின் பிரமுகரான நாஞ்சில் சம்பத் எடப்படி – மோடி நட்புறவுக்கு போர்க்கொடி உயர்த்தியுள்ளார்.
டி.டி.வி. தினகரன் தான் அ.தி.மு.க வின் விடிவெள்ளி, சசிகலாதான் பாதுகாவலர். அவர்கள் பொதுச்செயலாளர், இணைப் பொதுச்செயலாளர் பதவியினை வகிக்க வேண்டும் என ஆணித்தரமாக கூறுகின்றார்.
இவ்வாறு ஜெயலலிதாவின் மரணத்தின் பின்பு அ.தி.மு.கவினர் எடப்பாடி, சசிகலா, பன்னீர், நாஞ்சில் சம்பத் என பல பிரிவுகளாக பிரிந்து செயற்படுகின்றனர் என்று தான் கூறவேண்டும்.
அ.தி.மு.க. வில் பிளவுகள் இல்லை, பிளவுகள் இல்லையென்று எவர் கூறினாலும் பிளவுகள், பிரிவுகள் உள்ளன என்பதுதான் உண்மை. இது எதிர்காலத்தில் அ.தி.மு.க.வை பலவீனமாக்கிவிடும். அப்போது தமிழ்நாட்டில் ஏனைய கட்சிகள் தலைதூக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கும்.
தமிழ்நாட்டில் இன்று அ.தி.மு.க.வின் அரசியல் கோட்டை சரிந்துகொண்டிருப்பது தான் உண்மை. தமது பதவி, சேர்த்து வைத்த சொத்துக்கள், நான்கு வருட ஆட்சியைத் தொடருவதே எடப்பாடி உட்பட தமிழக அரசின் கொள்கையாக உள்ளது.
தமிழகமோ, மக்களின் நலமோ அவர்களுக்கு கொஞ்சமேனும் கிடையாது. மக்களையும், தமிழ்நாட்டையும் மறந்து அரசு செயற்படுகிறதென்பதை தமிழக மக்கள் நன்கறிவார்கள். எனவே, வெள்ளைவேட்டி, வெள்ளை சட்டை அணிந்துகொண்டு தமிழ்நாட்டை கொள்ளையடிப்பவர்களுக்கு இடமளிக்காது தடைபோட வேண்டும்.
வருமானத்தைவிட அதிக சொத்துக்களை சேர்த்தோர் கைதுசெய்யப்பட வேண்டும். சொத்துக்களைப் பறித்து பொதுமக்களுக்கு பகிர்ந்தளிக்க வேண்டும். உத்தமன் போல் நடித்து பொது சொத்துக்களை கொள்ளையடிப்போரை உள்ளே சிறையில் தள்ள வேண்டும்.
ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவனின் வேலைகள் தொடர்ந்துகொண்டேதான் இருக்கும். எடப்பாடி பழனிச்சாமி குழுவினர் மத்திய அரசை ஏமாற்றும் கைங்கரியத்தில் ஈடுபட்டுவரும் நிலையில் ஓ.பன்னீர்செல்வம் திடீரென டில்லி பறந்துள்ளார். பிரதமரை சந்திக்கிறார், தேர்தல் ஆணையாளரை சந்திக்கிறார்.
இதன்பின்னர் என்ன மாறுதல்கள் இடம்பெறும் என்பது தெரியாது. எது எப்படியோ ஏமாற்றுபவர்களிடமிருந்து தமிழகத்தையும், தமிழர்களையும் காப்பாற்ற வேண்டும். பிரதமர் மோடி டில்லிக்கு மட்டுமல்ல, தமிழ் நாட்டுக்கும் பிரதமராவார். எனவே, தமிழகத்தின் எதிர்காலம் கருதி தீர்மானம் எடுக்கவேண்டும்.
தமிழக தலைவர்களின் தனிப்பட்ட ஆசாபாசங்களை நிறைவேற்றிக்கொள்ள இன்று ஆட்சியாளர்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றனர். எனவே, சட்ட சபை கலைக்கப்பட்டு உடனடியாக தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதுவே தமிழ்நாட்டுக்கான தீர்வாகும். இதனை மிஞ்சிய தீர்வெதுவும் கிடையாது. பல்டி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும். உண்மையான அரசியலுக்கு முன்னுரிமை வழங்கவேண்டும். உத்தமர்கள் போல் நடித்து மக்களை ஏமாற்றுபவர்கள் அடையாளம் காட்டப்பட வேண்டும்.
எடப்பாடியின் அரசு நிலையானது அல்ல. அது பொய்யான டம்மி அரசு. இது கலைக்கப்படவேண்டும். இல்லாவிட்டால் தமிழகத்துக்கு விமோசனம் கிடைக்கப்போவதில்லை.
முதலமைச்சர் உட்பட அமைச்சர்கள் எம்.எல்.ஏ.க்கள் அனைவரும் வார்த்தைக்கு வார்த்தை அம்மா அம்மா அவரது கொள்கைகளை முன்னெடுப்போம் என ஜெயாவின் புகழ்பாடுகின்றனர்.
ஆனால், ஆரம்பத்திலேயே ஜெயாவின் கொள்கைகளை அவர்கள் மீறி செயற்படுகின்றனர். சசிகலாவையும் அவரது குடும்பத்தையும் அரசியலுக்கு வரக்கூடாது என ஒதுக்கி வைத்தார் ஜெயலலிதா. ஆனால், இன்று அக்கொள்கையை மீறியே அனைவரும் செயற்படுகின்றனர்.
இவ்வாறானதொரு நிலையில் இவர்கள் அம்மாவை பின்பற்றுவார்களா என நம்பிக்கையுடன் கூறமுடியுமா? எடப்பாடியின் அரசு இன்று ஆட்டம் கண்டுள்ளது. ஓ.பி.எஸ். டில்லி பயணம் மேற்கொள்கிறார். எதிர்காலம் என்ன என்று அனைவரும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
ஏமாற்றுபவர்கள் நீண்ட காலம் நிலைத் திருக்க மாட்டார்கள் என்பது உறுதியாகும். அவர்கள் இறைவனால் தோல்வியடையச் செய்யப்படுவார்கள்.
-ப.பன்னீர் செல்வம்-