வான் புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்துவதற்காக, வானில் இருந்து வானுக்கு ஏவுகணைகளை ( air-to-air missiles) வீசக்கூடிய 6 விமானங்களை இலங்கை அரசு சீனாவிடம் இருந்து வாங்கியிருந்தது. செங்டூ F-7G ரகத்திலான விமானங்கள் அவை.
அவற்றில் ஒரு விமானத்தால், வானில் வைத்து வான்புலிகளின் விமானத்தை தமது டார்கெட் சிஸ்டத்தில் லாக் செய்ய முடியவில்லை என்பதை, கடந்த அத்தியாயத்தில் பார்த்தோம்.
வான்புலிகளின் விமானத்தை வானில் கண்ட பின்னரும், அதை சுட்டு வீழ்த்த முடியாமல் போன சம்பவம், இலங்கை பாதுகாப்பு வட்டாரங்களில் இதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது.
இது தவிர, வான்புலிகளின் விமானங்கள் பறந்த உயரத்துக்கு மிக அருகில்கூட விமானப்படையின் செங்டூ விமானங்களை கொண்டுவர முடியாது என்ற நிலை.
காரணம் என்னவென்றால், மிக மிக வேகம் குறைந்த வான்புலிகளின் விமானங்கள், மரங்களின் உயரத்துக்கு சற்று மேலாக செல்லும் விதத்தில் பறப்பதையே (tree top level flying) வழக்கமாக கொண்டிருந்தன.
ஆனால், அதிவேக செங்டூ விமானங்களை அவ்வளவு தாழ்வாக பறக்க வைக்க முடியாது. (முடியாது என்றில்லை. பறப்பது மிகவும் ஆபத்தானது. விமானி சற்றி கவனப் பிசகாக செலுத்தினாலும், ஒரு விநாடியில் விமானம் தரையில் மோதிவிடும் என்பதால், அப்படி பறக்க யாரும் முன்வர மாட்டார்கள்)
இந்த நிலையில், வான்புலி விமானங்களை வானில் இருந்து தாக்கி அழிப்பது முடியாத காரியம் என்பதை இலங்கை விமானப்படை புரிந்து கொண்டது.
இனி என்ன செய்வது?
வெளிநாட்டு விமானப்படை அதிகாரிகளின் உதவி கோரப்பட்டது. 3 நாடுகளைச் சேர்ந்த விமானப்படை நிபுணர்கள் கலந்துகொண்ட கூட்டம் ஒன்று, கொழும்பு ராணுவ தலைமையகத்தில் நடந்தது. இந்தியா, பாகிஸ்தான், மற்றும் அமெரிக்காவை சேர்ந்த நிபுணர்கள் அதில் கலந்து கொண்டனர்.
இந்த ஆலோசனைக் கூட்டத்தின் இறுதியில், “மிக மெதுவாக, குறைந்த உயரத்தில் பறக்கும் சிங்கிள் இஞ்சின் வான்புலி விமானங்களை வானில்-இருந்து-வானுக்கு ஏவப்படும் ஏவுகணைகள் மூலம் சுட்டு வீழ்த்துவது சாத்தியமே இல்லை” என்று மூன்று நாடுகளின் நிபுணர்களும் தெரிவித்து விட்டனர்.
“ஆனால், வான்புலி விமானங்களில் குறைந்த வேகமும், உயரமும் air-to-air யுத்தத்துக்கு மைனஸ் பாயின்ட்டாக உள்ள அதே வேளையில், தரையில்-இருந்து-வானுக்கு (ground-to-air) யுத்தத்தில் ராணுவத்துக்கு பிளஸ் பாயின்ட்டாக உள்ளது. இந்த விமானங்களை தரையில் இருந்து தாக்கி வீழ்த்தும் வழிமுறைகளை ஆராயுங்கள்” எனவும் கூறிவிட்டு சென்றனர், வெளிநாட்டு நிபுணர்கள்.
இதையடுத்து, வான்புலி விமானங்களை வீழ்த்தும் பொறுப்பு, விமானப்படையின் பிளையிங் ஸ்குவாட்டில் இருந்து, ராணுவத்திடம் கைமாறியது.
வான்புலிகளின் விமான தாக்குதல் இலக்குகள் எவையாக இருக்கலாம் என பட்டியல் தயாரிக்கப்பட்டது. துறைமுகங்கள், விமான நிலையம், பல்வேறு ராணுவ தளங்கள், பவர் ஸ்டேஷன்கள், எண்ணை சேமிப்பு நிலையங்கள், ராணுவ தலைமையகம், மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவையே, புலிகளின் தாக்குதல் இலக்குகளாக இருக்கலாம் என்று ஊகிக்கப்பட்டது.
இதையடுத்து, இந்த பகுதிகளில், கிரவுன்ட் ஃபயர் பவர் அதிகரிக்கப்பட்டது. மேலதிக விமான எதிர்ப்பு எந்திர துப்பாக்கிகள் தரையில் பொருத்தப்பட்டன.
தலைநகர் கொழும்புவில், முக்கிய இலக்குகளின் அருகேயுள்ள உயர்ந்த பில்டிங்குகளின் மொட்டை மாடிகளிலும் விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் பொருத்தப்பட்டு, அங்கெல்லாம் 24 மணி நேரமும், துப்பாக்கிகளை இயக்குவதற்கு ஆட்கள் இருக்கும்படி பார்த்துக் கொள்ளப்பட்டது.
அடுத்த திட்டம், இந்த இலக்குகளை நோக்கி வான்புலிகளின் விமானங்கள் வருவது தெரிந்தால், தரையில் உள்ள விமான எதிர்ப்பு துப்பாக்கிகள் தொடர்ந்து சுட்டுக்கொண்டே இருக்க வேண்டும். அதாவது குறிபார்த்து சுடுவதில்லை. எல்லா திசையிலும் தொடர்ந்து சுட்டுக்கொண்டு இருக்க வேண்டும் (இறுதியில், புலிகளின் ஒரு விமானம் வீழ்த்தப்பட்டது இந்த விதத்தில்தான்).
வான்புலி விமானங்களை சுட்டு வீழ்த்தும் பொறுப்பை இலங்கை விமானப்படையிடம் இருந்து எடுத்து, தரைப்படையிடம் கொடுத்ததை விமானப்படை உயரதிகாரிகள் பெரிதாக ரசிக்கவில்லை. இதையடுத்து, தமது தரப்பில் இருந்து வான்புலிகளின் விமானங்களை சுட்டு வீழ்த்த வேறு ஏதாவது வழி உள்ளதா என ஆராய தொடங்கினார்கள்.
விமானப்படையின் நவீன போர் விமானங்களால் வான்புலிகளின் சிறிய, இலகு விமானங்களை சுட்டு வீழ்த்த முடியாது என்ற நிலையில், தாமும் வான்புலி விமானங்கள் போன்ற சிறிய, மெதுவாக பறக்கும் விமானங்களை இயக்கினால் என்ன என்ற ரீதியில் போனது அவர்களது யோசனை.
இலங்கை கடற்படை மேற்கொண்ட அதே நடவடிக்கைதான் இது.
கடல்புலிகளிடம் சிறிய சைஸ் வேகப்படகுகள் அதிகம் இருந்தன. கடற்படையோ, தமது பெரிய தாக்குதல் படகுகளை வைத்துக்கொண்டு பல சிறிய படகுகளை கடலில் எதிர்கொள்ளும்போது, கடல்புலிகளுக்கே தொடர்ந்தும் வெற்றி கிட்டியது.
இதையடுத்து, கடல்படையும், புலிகளின் பாணியில் சிறிய வேகப்படகுகளை கட்டினார்கள். அதன் பின்னரே கடற்படைக்கு கடல் யுத்தங்களில் வெற்றி கிட்ட தொடங்கியது.
இதே பாணியை தாமும் பின்பற்றினால் என்ன என்று யோசித்தார்கள், இலங்கை விமானப்படை அதிகாரிகள்!
இலங்கை விமானப்படையின் ஆரம்பகால சிறிய விமானங்கள் சில விமானப்படை அருங்காட்சியகத்தில் உள்ளன. அவை இன்னமும் பறக்கும் நிலையில்தான் உள்ளன.
அவற்றை வெளியே கொண்டுவந்து, சிறிது திருத்த வேலைகளை செய்து, ஒரு விமானி, மற்றும் ஒரு துப்பாக்கியால் சுடும் நபர் ஆகியோருடன் வானுக்கு அனுப்பினால் என்ன என்ற ரீதியில் சீரியசாக ஆராய்ந்தார்கள்.
அதாவது, முதலாம் உலக யுத்தத்தின்போது நடந்த dogfights போல!
வான்புலி விமானங்கள் வருவது ரேடாரில் தெரிந்து விட்டால் விமானப்படையின் இந்த குட்டி விமானங்கள் வானில் கிளம்பி, வான்புலி விமானம் பறக்கும் அதே உயரம், அதே வேகத்தில் வானில் வைத்து குறுக்கிட முடியும்.
வான்புலி விமானங்களில் வெடிகுண்டுகள் பொருத்தப்பட்டு உள்ளதால், அவர்களின் எடை அதிகம். அதனால், பிளையிங் கேப்பபிளிட்டி குறைவு. விமானப்படை குட்டி விமானங்களில் வெடிகுண்டுகள் இல்லை என்பதால், எடை குறைவு. துரத்துவது சுலபம்.
மற்றொரு பிளஸ் பாயின்ட், வான்புலி விமானங்களில் பொருத்தப்பட்ட வெடிகுண்டுகளை நோக்கி விமானப்படை விமானத்தில் இருந்து சுட்டால், அந்த குண்டுகளே வெடித்து, வான்புலி விமானத்தை வீழ்த்திவிடும்.
இந்தத் திட்டம், அப்ரூவலுக்காக விமானப்படை தலைமையகத்துக்கு போனது. (தொடரும்)