மதுரை: மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அருகே கவுரவக் கொலை நடந்ததாக கூறப்படும் புகார் பற்றி சிபிஐ விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி அடுத்த போலிப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் திலீப்குமார். இவர் அருகில் உள்ள சேம்பர் கிராமத்தை சேர்ந்த விமலா (19) என்ற பெண்ணை காதலித்து வந்துள்ளார். இவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள்.
இந்நிலையில், காதலர்கள் இருவரும் கடந்த ஜூலை மாதம் 22ஆம் தேதி கேரளாவில் திருமணம் செய்து கொண்டனர். இதனிடையே, மகளை காணவில்லை என்று விமலாவின் தந்தை வீரண்ணன் உசிலம்பட்டி காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
இந்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து காதலர்களை தேடி வந்தனர். இந்நிலையில், காதலர்கள் இருவரும் திருமணம் செய்துகொண்டு, கேரளாவில் இருப்பதை அறிந்த காவல்துறையினர் அங்கு சென்று அவர்களை அழைத்து வந்துள்ளனர்.
இதையடுத்து, இருவரையும் உசிலம்பட்டி நீதிமன்றத்தில் காவல்துறையினர் ஆஜர்படுத்தினர். அப்போது, வயதை காரணம் காட்டி இருவரையும் பிரித்து நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து, விமலா அரசு காப்பகத்தில் தங்க வைக்கப்பட்டார். இதனிடையே, கடந்த செப்டம்பர் 22ஆம் தேதி விமலாவுக்கும், தேனியை சேர்ந்த சதீஷ் என்பவருக்கும் நிச்சயதார்த்தம் நடந்துள்ளது.
இதைத் தொடர்ந்து, காதல் கணவர் திலீப்குமாருக்கு தகவல் தெரிவித்துவிட்டு துணி எடுப்பதாக பெற்றோரிடம் கூறிவிட்டு சதீஷூடன், விமலா தேனிக்கு வந்துள்ளார்.
அப்போது, திலீப்குமாருடன் தனக்கு திருமணம் நடந்து விட்டதாகவும், இதனால் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றும் விமலா, சதீஷிடம் கூறியுள்ளார். அப்போது, சதீஷ் ஆத்திரம் அடைந்துள்ளார். அப்போது அங்குவந்த திலீப்குமாருக்கும், சதீஷூக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது.
இது குறித்து சதீஷ், விமலாவின் பெற்றோரிடம் கூறியுள்ளார். இந்நிலையில், கடந்த 1ஆம் தேதி இரவு விமலா மர்மமான முறையில் இறந்தார். இந்நிலையில் தனது மகள் தற்கொலை செய்து கொண்டதாக பெற்றோர்கள் கூறினர்.
அவரை அவரது பெற்றோர், உறவினர்கள் அடித்து கொன்றதோடு, பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்ததாக புகார் எழுந்தது.
இதனிடையே, காதல் மனைவி விமலா உயிரிழந்த சம்பவம் திலீப்குமாருக்கு தெரியவந்துள்ளது. இது குறித்து மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் விஜேந்திர பிதாரியிடம் புகார் அளித்தார்.
அதில், தனது காதல் மனைவியை அவரது பெற்றோர் கவுரவக் கொலை செய்துவிட்டதாகவும், இதற்கு காவல்துறையினரும் உடந்தையாக இருந்ததாகவும் தெரிவித்திருந்தார்.
இது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்ய டி.எஸ்.பி குமாரவேலுவுக்கு எஸ்.பி. பிதாரி உத்தரவிட்டார். இதையடுத்து, டி.எஸ்.பி சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி வந்தார்.
இந்நிலையில், சாதி மாறி திருமணம் செய்ததால் தனது மனைவி விமலா கொல்லப்பட்டதாகவும், இது குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியும் திலீப்குமார், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
இந்த மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற கிளை, 4 வாரத்தில் விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டுள்ளது.