நாவலப்பிட்டி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட நாவலப்பிட்டி ஹிந்தின்ன வனப்பகுதியில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் நேற்று மீட்கப்பட்டுள்ளதாக நாவலப்பிட்டி பொலிஸார் தெரிவித்தனர்.
இந்தச் சடலத்தின் வலது கையின் ஒரு பகுதியை நாய் ஒன்று எடுத்து வந்து குறித்த பகுதியில் உள்ள கற்பாறையில் போட்டு விட்டுச் சென்றதை கண்ட பிரதேச மக்கள் நாவலப்பிட்டி பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.
இதனையடுத்து அங்கு சென்ற பொலிஸார் சடலத்தை மீட்டுள்ளனர். சம்பவ இடத்துக்குச் சென்ற நாவலப்பிட்டி நீதிமன்ற நீதிவான் விசாரணைகளை மேற்கொண்டதுடன் சடலம் பிரேத பரிசோதனைக்காக நாவலப்பிட்டி ஆதார வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.
சடலமாக மீட்கப்பட்ட நபர் 58 வயதுடையவர் எனவும் குறித்த சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை எனவும் பொலிஸார் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.