உலகிலேயே மிக அதிக எடை கொண்டவராக நம்பப்பட்ட எகிப்திய பெண், ஐக்கிய அரபு எமிரேட்டில் மரணமடைந்தார்.
இமான் அகமது அப்ட் எல் அடி என்ற இப்பெண், இந்த வருடத்தின் தொடக்கத்தில் எடை குறைப்பு சிகிச்சைக்காக இந்தியா வந்திருந்தார்.
அவர் தனது 500 கிலோ உடல் எடையில் 300க்கும் மேலான கிலோவை குறைத்ததாகவும் ஆனால், மற்ற உடல்நல பிரச்சனை காரணமாக அவர் இறந்ததாகவும் உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.
37 வயதான இப்பெண் இதய நோய் மற்றும் சிறுநீரக செயலிழப்பினால் பாதிக்கப்பட்டிருந்ததாக மருத்துவமனை அறிக்கை கூறுகின்றது.
“எங்களது பிராத்தனைகளையும், இதயப்பூர்வமான இரங்கலையும் அவரது குடும்பத்திற்கு சொல்லிக்கொள்கிறோம்” என மருத்துவமனை கூறியுள்ளது.
மும்பையில் எடை குறைப்பு அறுவை சிகிச்சை செய்து கொண்ட பிறகு, கடந்த மே மாதம் முதல் ஐக்கிய அரபு எமிரேட்டின் தலைநகரான அபுதாபியில் வசித்துவந்தார்.
25 ஆண்டுகளாக அவர் வீட்டை விட்டு வெளியே செல்ல முடியாத நிலையில் இருந்தார் என அறுவை சிகிச்சைக்கு முன்பு அவரது பெற்றோர் தெரிவித்தனர்.
இமான் அகமது அப்ட் எல் அடியின் சகோதரியின் இணையப் பிரசாரத்திற்கு பிறகு, மும்பையில் சிகிச்சை பெறச் சிறப்பாக அமர்த்தப்பட்ட விமானத்தில் வந்தார்.
ஆனால், மும்பை மருத்துவ குழுவுடன் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக அவர் ஏற்கனவே சிகிச்சை பெற்ற மருத்துவமனைக்கே மீண்டும் மாற்றப்பட்டார்.
அவரது உடல் எடை குறைப்பு பற்றி மும்பை மருத்துவர்கள் அளித்த கூற்றுகள் குறித்து அவரது குடும்பத்தினர் சந்தேகங்களை எழுப்பினர்.