உத்தரப்பிரதேசம் மாநிலத்தில் ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் கர்ப்பிணி பெண்ணிற்கு நடுரோட்டில் பிரசவம் பார்க்கப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப்பிரதேசம் மாநிலம் மதுராவிற்கு அருகில் உள்ள சோனே என்ற கிராமத்தைச் சேர்ந்த கர்ப்பிணி பெண் நேற்று பிரசவ வலியால் அவதியுற்றார்.
அக்கிராமத்திலிருந்து மருத்துவமனைக்கு செல்ல போக்குவரத்து வசதி இல்லாததால் ஆம்புலன்சிற்கு போன் செய்தனர். ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் அப்பெண்ணை நடைப்பயணமாக சாலைக்கு அழைத்து வந்தனர். அப்போது திடீரென பெண்ணிற்கு அதிக வலி ஏற்பட்டது.
இதையடுத்து, கிராமத்தைச் சேர்ந்த பெண்கள் நடுரோட்டில் வைத்து பிரசவம் பார்த்தனர். சிறிது நேரத்திற்கு பின் பெண்ணிற்கு குழந்தை பிறந்தது. குழந்தையை துணியில் சுற்றி பாதுகாப்பாக வைத்திருந்தனர்.
ஆம்புலன்ஸ் வர தாமதமானதால் நடுரோட்டில் பிரசவம் பார்க்கப்பட்டது அப்பகுதியில் அதிர்ச்சியையும், கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இது போன்று பல கிராமங்களில் உரிய போக்குவரத்து மற்றும் மருத்துவ வசதி இல்லாமல் மக்கள் அவதியுற்று வருகின்றனர்.