சென்னை: இயக்குநர் பாலா என்னை அடிக்க ஆள் வைத்தார் என்று நடிகை மவுனிகா குற்றம்சாட்டியுள்ளார். மறைந்த இயக்குநர் பாலு மகேந்திராவின் இரண்டாவது மனைவி மவுனிகா.
கணவரின் உடலுக்கு அஞ்சலி செலுத்த மவுனிகா முயன்றபோது, அவரை இயக்குநர் பாலா தடுத்ததாக சர்ச்சை எழுந்தது. பின்னர் ஒருவழியாக மவுனிகா வந்து அஞ்சலி செலுத்திவிட்டுப் போனார். இப்போது அவர் தனக்கும் பாலுமகேந்திராவுக்குமான உறவு, பாலு மகேந்திரா இறந்தபோது நடந்த சம்பவங்கள் பற்றியெல்லாம் பேட்டி கொடுத்து வருகிறார்.
சமீபத்தில் அவர் அளித்த பேட்டியொன்றில் கூறியிருப்பதாவது:
சேர்ந்து வாழ்ந்தோம்
இயக்குநர் பாலுமகேந்திரா படங்களில் நடித்த போது அவரை காதலித்தேன். முதலில் மறுத்தார். நான்தான் வற்புறுத்தி அவருடன் சேர்ந்து வாழ ஆரம்பித்தேன்.. பிறகு அவர் என்னை விட்டு விலகி போகவில்லை. நானாக அவரை தாலி கட்டும்படி வற்புறுத்தவில்லை. அவர் தான் ஒரு நாள் திடீரென சிவன் கோவிலில் வைத்து எனக்கு தாலி கட்டினார்.
28 வருட பந்தம்
பாலுமகேந்திராவுக்கும் எனக்கும் 28 வருட பந்தம் இருக்கிறது. அவர் என்னை அன்புடன் பார்த்துக் கொண்டார்.
அப்படிப்பட்ட என்னை பாலுமகேந்திரா மரணம் அடைந்த போது பார்க்க வரக்கூடாது என்று இயக்குநர் பாலா தடுத்தார். நான் வரக்கூடாது என்று சொல்ல பாலாவுக்கு என்ன உரிமை இருக்கிறது?
அடித்து விரட்ட…
பாலுமகேந்திரா உடல் வைக்கப்பட்டு இருந்த இடத்துக்கு நான் சென்றால் என்னை அடித்து விரட்டவும் ஆட்களை நிறுத்தி இருந்தார். பாலா விதித்த தடையை மீறி என் கணவரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்த டைரக்டர் பாரதிராஜா உதவி செய்தார்.
அப்பவே பிரிக்க வேண்டியதுதானே…
எனக்கும் பாலுமகேந்திராவுக்குமான உறவு தவறானதாக இருந்து இருந்தால் அவர் உயிரோடு இருக்கும் போதே என்னை பாலுமகேந்திராவிடம் இருந்து பிரிக்க பாலா முயற்சி செய்து இருக்கலாமே… -இவ்வாறு மவுனிகா கூறியுள்ளார்.