யாசின் எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டுமென ஆசைப்பட்டாலும், அவனை என் பிள்ளைபோல் நினைத்து நான் படிக்க வைப்பேன் என நடிகர் ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
ஈரோடு கனிராவுத்தர்குளம், சி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த பாட்சா – அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன் முகமது யாசின். சேமூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் முகமது யாசின், கடந்த 11-ம் தேதி காலை பள்ளி இடைவேளையின்போது தனது நண்பர்கள் சிலருடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறான்.
அப்போது பள்ளியை ஒட்டிச் செல்லும் சாலையில் 50,000 ரூபாய் கேட்பாரற்றுக் கிடந்திருக்கிறது. இதைப் பார்த்த சிறுவன் யாசின், அந்தப் பணத்தை அவனுடைய வகுப்பாசிரியரிடம் கொண்டு போய் கொடுத்திருக்கிறான்.
சிறுவனின் இந்த நேர்மையைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப்போன ஆசிரியர்கள், யாசினை நேரடியாக ஈரோடு எஸ்.பி.யிடமே அழைத்துச் சென்று அந்தப் பணத்தை ஒப்படைத்திருக்கிறார்கள்.
இந்தச் சிறுவனின் செயலை பொதுமக்களும் பிரபலங்களும் வெகுவாக பாராட்டி வருகின்றனர். இந்நிலையில் யாசினின் வீட்டுக்குச் சென்ற ரஜினி மன்ற நிர்வாகிகள் சிறுவனையும், அவனின் பெற்றோர்களையும் கௌரவித்துள்ளனர்.
அப்போது சிறுவனிடம் உனக்கு என்ன உதவி வேண்டும் எனக் கேட்டதுக்கு, ‘ எனக்கு உதவி எதுவும் வேண்டாம் ரஜினி அங்கிளை நேரில் பார்க்க வேண்டும். அதுவே என் ஆசை’ எனக் கூறியுள்ளான்.
சிறுவனின் ஆசையை ரஜினியிடம் தெரிவித்த போது அவர் உடனடியாக யாசினை காண ஏற்பாடு செய்யுமாறு கூறியுள்ளார். இதனைத்தொடர்ந்து இன்று காலை சென்னை வந்த சிறுவன் மற்றும் அவரது பெற்றோர்களை, ரஜினி தனது வீட்டுக்கு வரவழைத்து நேரில் சந்தித்துள்ளார்.
மேலும் அந்தச் சிறுவனின் செயலைப் பாராட்டி அவனுக்கு ஒரு தங்க சங்கிலியையும் பரிசாக வழங்கியுள்ளார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய ரஜினி, “பணத்துக்காகக் கொலை, கொள்ளை எனப் பல விசயங்கள் நடக்கும் இந்தக் காலகட்டத்தில், யாசின் தனக்கு கிடைத்த பணத்தை எண்ணுடையது இல்லை எனப் திருப்பி தந்துள்ளான்.
இந்தக் குணம், இந்த மனம் இதை எப்படிப் பாராட்டுவது என்றே தெரியவில்லை. இவனைப் பெற்றவர்கள் இவ்வளவு பண்பானவனாக வளர்த்தவர்களுக்கு என் மனமார்ந்த பாராட்டுகள். தற்போது சிறுவன் அரசுப் பள்ளியில் படித்துக்கொண்டிருக்கிறார்.
அவன் அங்கேயே படிக்கட்டும் என நான் பெற்றோர்களிடம் கூறியுள்ளேன். யாசின் எதிர்காலத்தில் என்ன படிக்க வேண்டுமென ஆசைப்பட்டாலும், அவனை என் பிள்ளைபோல் நினைத்து நான் படிக்க வைப்பேன். இவர்களைப் போன்ற குழந்தைகள் மிகவும் பாராட்டுக்குரியவர்கள் .
காமராஜரின் பிறந்த நாளான இன்று யாசினை சந்தித்ததில் மிகவும் மகிழ்ச்சி” எனக் கூறினார்.
தொடர்புடைய செய்தி
`என் பெற்றோர் சொன்ன அந்த வார்த்தைகள்தான்’ – ரூ.50 ஆயிரத்தை போலீஸிடம் ஒப்படைத்த மாணவன் நெகிழ்ச்சி!!
ஈரோட்டில் சாலையில் கேட்பாரற்றுக் கிடந்த 50,000 ரூபாயை ஈரோடு எஸ்.பி.யிடம் ஒப்படைத்த பள்ளி மாணவனுக்கு பாராட்டுகள் குவிகின்றன.
ஈரோடு கனிராவுத்தர்குளம், சி.எஸ்.நகர் பகுதியைச் சேர்ந்த பாட்சா – அப்ரோஸ் பேகம் தம்பதியின் இளைய மகன் முகமது யாசின். சேமூரில் உள்ள அரசு தொடக்கப்பள்ளியில் 2-ம் வகுப்பு படித்து வரும் முகமது யாசின், நேற்று காலை 11 மணியளவில் இடைவேளையின்போது பள்ளி மாணவர்கள் சிலருடன் விளையாடிக்கொண்டிருந்திருக்கிறான்.
அப்போது பள்ளியை ஒட்டிச் செல்லும் சாலையில் 50,000 ரூபாய் கேட்பாரற்றுக் கிடந்திருக்கிறது. இதைப் பார்த்த சிறுவன் யாசின், அந்தப் பணத்தை அவனுடைய வகுப்பாசிரியரிடம் கொண்டு போய் கொடுத்திருக்கிறான்.
சிறுவனின் இந்த நேர்மையைக் கண்டு ஆச்சர்யப்பட்டுப்போன ஆசிரியர்கள், யாசினை நேரடியாக ஈரோடு எஸ்.பி.யிடமே அழைத்துச் சென்று அந்தப் பணத்தை ஒப்படைத்திருக்கிறார்கள்.
இதுகுறித்து சிறுவன் யாசினை சேமூரில் அவர் படிக்கும் பள்ளியில் சென்று சந்தித்துப் பேசினோம். ‘எங்க அப்பா துணியை பைக்ல எடுத்துட்டுப் போய் அங்கங்க கடை போட்டு வியாபாரம் பண்ணிட்டு இருக்கார்.
அம்மா அக்கம்பக்கத்துல பாத்திரம் தேக்கிற வேலை செய்றாங்க. எனக்கு ஒரு அண்ணன் இருக்கான். அவன் 9-வது படிச்சிக்கிட்டு இருக்கான். ‘யார் பொருளுக்கும் ஆசைப்படக் கூடாது.
எல்லாரும் நம்மளை மாதிரிதான் கஷ்டப்பட்டு சம்பாதிக்குறாங்க’ன்னு எங்க அம்மாவும் அப்பாவும் அடிக்கடி வீட்ல சொல்லிக்கிட்டே இருப்பாங்க. நேத்து அப்படித்தான் ஸ்கூல் பக்கத்துல இருக்கிற ரோட்டுல காசு நிறைய கிடந்துச்சி. ரோட்டுல யாருமே இல்லை.
உடனே அந்தக் காசை எடுத்துட்டுப் போய் டீச்சர்கிட்ட கொடுத்துட்டேன். அவங்க அதை போலீஸ்கிட்ட கொடுத்திடலாம்னு சொன்னாங்க. எனக்கு ஒரே ஹேப்பி. ஏன்னா எனக்கு போலீஸ்னா ரொம்பப் புடிக்கும். படிச்சி போலீஸ் ஆகணுங்கிறதுதான் என்னோட ஆசை.
டீச்சர் என்னை போலீஸ்கிட்ட கூட்டிட்டு போனாங்க. அங்க கொண்டு போய் கீழ கிடந்ததுன்னு சொல்லி காசை கொடுத்தோம். எனக்கு கை கொடுத்த போலீஸ் சார், ‘குட் பாய்’ன்னு சொன்னாங்க.
எனக்கு ரொம்ப சந்தோஷமா இருந்துச்சி. எங்க அம்மா அப்பாகிட்டயும் வந்து வீட்டுல சொன்னேன். அவங்களும் என்னை கட்டிப்பிடிச்சி சந்தோஷப்பட்டாங்க. என்னை எல்லாரும் குட் பாய்ன்னு சொல்றாங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு” என்றார்.