இலங்கை தமிழர் பிரச்னையை எதிர்க்கட்சிகள் விடுவதாக இல்லை. நெடுமாறனும் , வீரமணியும் ஒன்றாகச் சேர்ந்து அமைப்பை உருவாக்கினார்கள்.
ஆங்காங்கே ரயில் மறியல் , போராட்டங்கள் நடைபெற்றன. எட்டாயிரம் தொண்டர்கள் சகிதம் கருணாநிதி கைதானார். அ.தி.மு.க.வோ உட்கட்சிப் பிரச்னையில் தள்ளாடியது.
வீட்டுவரியை உயர்த்தியதுக்கு எம்.ஜி.ஆர். ஒரு காரணம் சொன்னால் , நிதியமைச்சராக இருந்த நெடுஞ்செழியன் இன்னொரு காரணம் சொன்னார்.
எம்.ஜி.ஆர். என்ன நினைக்கிறார் , என்ன பேசுகிறார் என்பது யாருக்கும் புரியவில்லை. பயங்கரக் குழப்பம். மாதக்கணக்கில் அமைச்சரவைக் கூட்டமே நடக்கவில்லை.
ராமாவரம் தோட்டத்தில் எல்லோரும் நாள் கணக்கில் காத்துக்கிடந்தார்கள். கட்சிப்பிரமுகர்களுக்கு திடீர் திடீரென்று போன் வந்தது. எம்.ஜி.ஆர். குரலில் யாராவது பேசி குழப்பினார்கள்.
எம்.ஜி.ஆர். அனுப்புவதுபோல் ஏதாவது சிபாரிசுக் கடிதம் வந்தால் நம்ப வேண்டாமென்று உள்துறைச் செயலகமே சுற்றறிக்கை அனுப்பியது.
யாரும் என்னுடைய வேலையில் தலையிடமுடியாது என்று எம்.ஜி.ஆரிடமிருந்து அரசியல் அறிக்கை வந்தது.
எதற்கு இந்தக் குழப்பமெல்லாம் ? ஆட்சியை நம்பிக்கையான ஆட்களிடம் ஒப்படைத்துவிட்டு எம்.ஜி.ஆர். ஓய்வு எடுக்கலாமே!
அதை யார் எம்.ஜி.ஆரிடம் சொல்வது ? டிசம்பர் 2, 1987. சென்னை கத்திப்பாரா சந்திப்பில் நேரு சிலை திறப்பு விழா.
விழாவுக்கு வந்திருந்த ராஜிவ் காந்தி , எம்.ஜி.ஆரின் உடல்நிலை பற்றி அக்கறையுடன் விசாரித்தார்.
எம்.ஜி.ஆரின் உடல்நிலைக் குறைபாடு, அரசியல் பிரச்னைகள், நிர்வாகக் குழப்பங்கள் பற்றியெல்லாம் ஏற்கெனவே கேள்விப்பட்டிருந்தார்.
கிளம்பும் நேரத்தில் மனத்தில் தோன்றியதை வெளிப்படையாக எம்.ஜி.ஆரிடம் கேட்டுவிட்டார்.
துணை முதல்வர் பதவியை உருவாக்கி , அதில் ஜெயலலிதாவை நியமித்துவிட்டு ஓய்வெடுக்கலாமே என்பதுதான் அது.
வேறு யாராவது கேட்டிருந்தால் எம்.ஜி.ஆர். நிச்சயம் கோபப்பட்டிருப்பார். சின்னதாகப் புன்னகை செய்துவிட்டு கிளம்பிவிட்டார்.
தனக்குப் பின்னால் யார் வருவார் என்பது பற்றி எம்.ஜி.ஆர். கடைசி வரை வாய் திறக்கவில்லை.
அதைப்பற்றி தீவிரமாக யோசித்தார். ஆனால் , முடிவெடுக்க முடியாமல் ஒத்திப்போட்டுவிட்டார் என்பதுதான் உண்மை.
மீண்டும் உடல்நிலை மோசமடைந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தனர். ஆனால் , எதுவும் பலனளிக்கவில்லை. டிசம்பர் 24, 1987 அன்று எம்.ஜி.ஆர். மரணம் அடைந்தார்.
அடுத்த தலைமை யார் என்பதைத் தெளிவாக அவர் அறிவிக்காததால் கட்சிக்குள் நிறையவே குழப்பங்கள்.
எஞ்சியிருக்கும் இரண்டாண்டு காலத்தையும் எம்.ஜி.ஆர். பெயரைச் சொல்லி கழித்துவிடலாம் என்றுதான் நினைத்தார்கள்.
ஆனால் , கட்சிக்குள் கோஷ்டிப் பூசல் அதைத் தடுத்துவிட்டது. ஆர்.எம். வீரப்பன் , ஜானகியை முன்னிலைப்படுத்தினார்.
இடைக்கால முதல்வராக இருந்த நெடுஞ்செழியனை யாரும் ஆதரிக்கவில்லை.
நெடுஞ்செழியன், ஜெயலலிதாவை ஆதரித்தார்.
ஆளுங்கட்சி உறுப்பினர்கள் ஜெயலலிதா , ஜானகி என இரண்டாகப் பிரிந்தார்கள்.
எம்.ஜி.ஆர். உயிரோடிருக்கும் வரை ஜானகி , கட்சியின் சாதாரண உறுப்பினராகக்கூட இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ஜனவரி 2, 1988. அவ்வை சண்முகம் சாலையிலிருக்கும் கல்யாண மண்டபத்தில் கட்சியின் செயற்குழு கூடியது.
செயற்குழு உறுப்பினர்கள் , மாவட்டச் செயலாளர்கள் , எம்.எல்.ஏ.க்கள் , எம்.பி.க்கள் என ஜெயலலிதாவின் ஆதரவாளர்கள் திரண்டு வந்திருந்தார்கள்.
செயற்குழு , ஜெயலலிதாவை கட்சியின் பொதுச்செயலாளராகத் தேர்ந்தெடுத்தது.
அதே நேரத்தில் ஆளுநர் குரானாவிடமிருந்து அமைச்சரவை அமைக்கச் சொல்லி ஜானகிக்கு அழைப்பு வந்தது.
ஜெயலலிதாவுக்கு அதிர்ச்சியளிக்கும் வகையில் ஜானகி முதல்வரானார்.
லாயிட்ஸ் ரோடு அ.தி.மு.க. அலுவலகத்தைக் கைப்பற்றுவதற்காக இரண்டு பிரிவுகளும் மோதிக்கொண்டன. லத்தி சார்ஜ் நடத்தப்பட்டது.
ஜெயலலிதாவைக் கைது செய்து போயஸ்கார்டன் வீட்டில் கொண்டுவிட்டார்கள்.
அ.தி.மு.க. அலுவலகத்தைப் பூட்டி சீல் வைத்தார்கள். ஆழ்வார்பேட்டையில் கட்சிக்கென்று புதிய அலுவலகத்தை ஜெயலலிதா ஆரம்பித்து வைத்தார்.
இரட்டை இலைச் சின்னத்துக்கு இரண்டு அணிகளும் உரிமை கொண்டாடினார்கள். தேர்தல் ஆணையம் , சின்னத்தை முடக்கி வைத்தது. இரண்டு பெண்மணிகளுக்குள் நடக்கும் பனிப்போரால், எம்.ஜி.ஆரின் கட்சிக்குக் கஷ்டகாலம் என்றார்கள்.
எம்.ஜி.ஆரின் சொத்துக்கணக்குகளும் அவர் எழுதிய உயிலும் சர்ச்சைக்குள்ளானது. உயிலில் ஜானகி பெயர் தவிர , வேறு யார் பெயரும் இல்லை.
சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து நிறைய சம்பளம் வாங்கிய எம்.ஜி.ஆரின் சொத்துக்கணக்குகளாகச் சொல்லப்பட்டவை நம்ப மடியாததாக இருந்தன.
சம்பாதித்த சொத்துக்களை எம்.ஜி.ஆர்., ஏழைகளுக்கே கொடுத்து விட்டதாகச் சொந்தங்கள் தரப்பிலிருந்து விளக்கம் தரப்பட்டது.
எம்.ஜி.ஆர். யாருக்குக் கொடுத்தார் , எவ்வளவு கொடுத்தார் , என்ன கணக்கு வழக்கு என்பதெல்லாம் யாருக்கும் தெரியவில்லை.
எம்.ஜி.ஆருக்குச் சொந்தமான சொத்துக்களைப் பற்றி மத்திய அரசு விசாரித்து அறிக்கை தரவேண்டும் என்று கேள்வி கேட்டது ஜெயலலிதா மட்டுமே.
ஜானகி அணியில் 97 எம்.எல்.ஏ.க்கள். ஜெயலலிதா அணியில் 34 எம்.எல்.ஏ.க்கள். எம்.எல்.ஏ.க்கள் மதில் மேல் பூனையாக இருந்தாலும் கட்சியின் அடிமட்டத் தொண்டர்களின் ஆதரவு ஜெயலலிதாவுக்குத்தான் இருந்தது.
எம்.ஜி.ஆரின் பொற்கால ஆட்சி தொடருவதற்கு ஆதரவளிக்க வேண்டும் என்றது ஜானகி தரப்பு. ஜெயலலிதா ஒப்புக்கொள்ளவில்லை.
சட்டமன்றத்தைக் கலைத்துவிட்டு தேர்தலைச் சந்திக்கலாம் என்றார்.
ஜானகி அணி , மற்ற கட்சிகளின் ஆதரவைத் தேட ஆரம்பித்தது. மூப்பனாரை முதல்வராக்கினால் ஆதரவளிப்பதாக காங்கிரஸ் தரப்பிலிருந்து பேசப்பட்டது.
ஜானகி , ஜெயலலிதா இரு அணிகளுமே ஒப்புக்கொள்ளவில்லை. எந்த அணிக்கும் ஆதரவில்லை என்று அறிவித்தது தி.மு.க. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியினர் டெல்லியின் உத்தரவை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.
எப்படியும் சட்டமன்றம் கூடுவதற்கு பதினைந்து நிமிடத்துக்கு முன்னால் முடிவெடுத்துவிடுதாகத் தெரிவிக்கப்பட்டது.
சட்டசபை கூடியது. டெல்லி மேலிடம் என்ன முடிவெடுத்தாலும் ஜானகி அணியை ஆதரிக்கப்போவதாகச் சில காங்கிரஸ்காரர்கள் முடிவோடு வந்திருந்தார்கள்.
அ.தி.மு.க. உறுப்பினர்கள்கூட அமைதியாக உட்கார்ந்திருந்த நேரத்தில் , காங்கிரஸ் கட்சிக்குள் கோஷ்டித் தகராறு ஆரம்பமானது. ஒரு சில காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் ஜானகி அணியை ஆதரித்துப் பேச , இன்னும் சில காங்கிரஸார் அதை எதிர்த்துப் பேச , சட்டமன்றம் அல்லோலகல்லோலப்பட்டது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் ஜானகியால் வெற்றி பெறமுடியவில்லை. சட்டமன்றம் ரணகளமானது. சட்டசபையைக் கலைத்துவிட கவர்னர் பரிந்துரை செய்தார். ஜெயலலிதா அணி , ஜானகி அணி என இரட்டை இலை , தனித்தனி இலையாகப் பிரிந்தது.
தொடரும்…
ஜெயலலிதாவிடம் யாரும் பேசக் கூடாது என உத்தரவிட்ட எம்.ஜி. ஆர்!! (அம்மு முதல் அம்மா வரை…. பகுதி-11)