ராஜஸ்தானில் ஏடிஎம் ஒன்றில் பணம் எடுத்து கொண்டிருந்த இளைஞரை கொள்ளையன் ஒருவன் கத்தியால் தாக்கி பணத்தை பறிக்க முயற்சித்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கடந்த 1ம் திகதி வாடிக்கையாளர் ஒருவர் ஏடிஎம்-ல் இருந்து பணம் எடுத்து கொண்டிருந்தார்.
அப்போது உள்ளே நுழைந்த மர்ம நபர் ஒருவர் அந்த வாடிக்கையாளர் பணம் எடுக்கும் வரை காத்திருந்துள்ளார்.
அப்போது திடீரென அந்த மர்ம நபர் பணம் எடுத்து கொண்டிருந்த நபரை கத்தியால் சரமாரியாக தாக்கியதாக கூறப்படுகிறது. கத்தியால் தாக்கிவிட்டு அந்த நபரிடம் இருந்த பணத்தை பறிக்கவும் முயற்சித்துள்ளான்.
மேலும் அந்த இளைஞரை அந்த மர்ம நபர் 3 முறை கத்தியால் தாக்கியுள்ளான். இதனிடையே கத்தியால் தாக்கி கொள்ளையிட முயன்ற அந்த மர்ம நபரை வங்கியின் வாடிக்கையாளர் பிடிக்க முயன்றுள்ளார்.
சுதாரித்துக்கொண்ட அந்த மர்ம நபர் தப்பி ஓடிவிட்டதாக கூறப்படுகிறது. இந்த காட்சிகள் ஏ.டி.எம் இயந்திரத்தில் இருந்த சிசிடிவி கெமராவில் பதிவாகியுள்ளது.
தற்போது சி.சி.டி.வி. கெமராவில் பதிவான காட்சிகளை வைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட அந்த மர்ம நபரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
அவரது பெயர் நவீன் பிரிஹர் என்றும் அவசர பணத்தேவை காரணமாக வேறு வழியின்றி இத்தகைய செயலில் ஈடுபட்டதாகவும் பொலிசாரிடம் தெரிவித்தார்.
கொள்ளை முயற்சியின்போது தாக்குதலால் பாதிக்கப்பட்ட நபர் தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவரது உயிருக்கு ஆபத்து ஏதுமில்லை என்று மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.