அம்பாறை மாவட்டம், அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஒலுவில் பிர தேசத்தில் தனது வீட்டிற்கு அண்மையில் உள்ள வீதியருகில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காருக்குள்
இருந்து ஐந்தரை வயது சிறுவன் ஒருவன் சடலமாக மீட்கப்பட்டுள்ளான். இச்சம்பவம் நேற்று முன் தினம் மாலை இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஒலுவில் ஆறாம் பிரிவின் அன்சாரி ஜும்ஆ பள்ளி வீதியினைச் சேர்ந்த லாபீர் இன்சாப் எனும் சிறுவனே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளதாகவும் அவரது மரணமானது சந்தேகத்துக்கு இடமானது என்ற ரீதியில் அக்கரைப்பற்று பொலிஸார் தீவிசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சர் சட்டத்தரணி ருவன் குணசேகர தெரிவித்தார்.
ஒலுவில் அல்-ஜாயிஷா வித்தியாலயத்தில் தரம் ஒன்றில் கல்வி கற்று வந்த சிறுவன் நேற்று முன்தினம் பிற்பகல் ஒரு மணியளவில் தனது வீட்டிலிருந்து சிறிய துவிச்சக்கர வண்டியில் அருகில் உள்ள கடைக்கு சென்றுள்ளான்.
இவ்வாறு சென்ற சிறுவன் வீடு திரும்பாததால் பிற்பகல் 2.30 மணியிலிருந்து பிரதேசதம் முழுவதும் சிறுவனின் உறவினர்கள் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
குறித்த சிறுவனை தேடிக் கண்டுபிடிக்கும் வகையில் பிரதேசத்தில் உள்ள பள்ளிவாசல்களின் ஒலிபெருக்கிகளில் அறிவிப்புகள் விடுத்தும் தேடுதலை மேற்கொண்டனர். எனினும் சிறுவன் கிடைக்கவில்லை.
எவ்வாறாயினும் நேற்று முன் தினம் மாலை 5.30 மணியளவில் குறித்த சிறுவனின் வீட்டின் அருகில் நிறுத்து வைக்கப்பட்டிருந்த காரின் உரிமையாளர் காரை திறந்து பார்த்த வேளையில் சிறுவனின் சடலம் காரிற்குள் கிடப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்து விடயத்தினை சிறுவனின் உறவினரிடம் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து உறவினர்கள் சிறுவனின் சடலத்தினை ஒலுவில் மாவட்ட வைத்தியசாலைக்குக் கொண்டு சென்றனர்.
எனினும் வைத்தியசாலைக்கு கொன்டு செல்லப்படும் போதும் சிறுவன் உயிரிழந்த நிலையிலேயே இருந்துள்ளதாக வைத்தியசாலை தகவல்கள் தெரிவித்தன.
இதனையடுத்து நேற்று முன்தினமிரவு சம்பவ இடமத்திற்கு நேரில் சென்ற பார்வையிட்ட அக்கரைப்பற்று மெஜஸ்ரேட் பதில் நீதிபர் ஏ.எச்.சமீம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் பிரேத பரிசோதனைக்காக அக்கரைப்பற்று ஆதார வைத்திசாலைக்கு எடுத்துச் சென்று பிரதேச பரிசோதனையின் பின்னர் உடலை உறவினரிடம் ஒப்படைக்குமாறு உத்தரவிட்டார்.
இந் நிலையில் சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் காரின் உரிமையாளரிடமும் மேலும் சிலரிடமும் வாக்கு மூலம் பதிவு செய்துள்ளனர்.
குறித்த காரில் இருந்த கோளாறு ஒன்று கரணமாக அக்காரை கதவினை வெளியில் இருந்து லொக் செய்ய முடியாது என காரின் உரிமையாளர் தெரிவித்துள்ள நிலையில், திறந்திருந்த காருக்குள் சிறுவன் சென்று கதவினை லொக் செய்து கொண்ட பின்னர் திறக்க முடியாமல் மூச்சித் திணறி மரணித்தாரா என பொலிஸார் விசாரணை செய்துவருகின்றனர்.
அத்துடன் வேறு சில கோணங்களிலும் விசாரணை இடம்பெறுகின்றன.