அமெரிக்க இராணுவத்தால் சுட்டுக் கொல்லப்பட்ட அல் கைதா தலைவர் ஒசாமா பின்லேடனுக்கு ஆதார் அட்டை கோரி விண்ணப்பித்த இளைஞர் ஒருவரை ராஜஸ்தான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.
சதாம் ஹுசைன் மன்சூரி (25) என்ற இளைஞர் ராஜஸ்தானின் பில்வாரா என்ற மாவட்டத்தைச் சேர்ந்தவர். அண்மையில் அரச அலுவலகத்துக்குச் சென்று ஆதார் அட்டையொன்றைப் பெற விண்ணப்பம் செய்திருந்தார்.
அவரது விண்ணப்பத்தைப் பார்த்த அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். ஏனெனில், அந்த விண்ணப்பத்தில் ஒசாமா பின்லேடனின் புகைப்படம் உள்ளிட்ட ஏனைய தகவல்கள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தமையே!
இதையடுத்து இது குறித்து பொலிஸாருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் அங்கு வந்த பொலிஸார், தேவையற்ற குழப்பத்தை ஏற்படுத்த முயற்சித்ததாகக் கூறி சதாம் ஹுசைனைக் கைது செய்து நீதிமன்றில் ஒப்படைத்தனர்.
எதனால் இப்படியொரு காரியத்தைச் செய்தார் என்பது குறித்து இன்னும் தெரியவரவில்லை.