முதல்தர கிரிக்கெட்டில் மூன்று முச்சதங்களை அடித்த முதல் இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா. இந்த ரஞ்சி சீசனில் தன் முதல் இரட்டைச்சதத்தைப் பதிவு செய்தார்.
ஆனாலும், இந்திய அணியின் தேர்வாளர்கள் லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் ஜடேஜாவின் பெயரை டிக் அடிக்கவில்லை. தற்போது நடக்கும் இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரில் ஜடேஜா இடம்பெறவில்லை.
ஆனால், செளராஸ்ட்ரா கிரிக்கெட் சங்கம் நடத்தும் மாவட்ட அளவிலான உள்ளூர் டி-20 போட்டியில், ஒரு சாதனை நிகழ்த்தி, கிரிக்கெட் உலகைத் திரும்பிப் பார்க்கவைத்துள்ளார்.
ஆம், ரவி சாஸ்திரி, யுவராஜ் சிங்குக்குப் பிறகு ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை அடித்துள்ளார் ஜடேஜா. அதைப் பற்றிய ஒரு பதிவு.
இதற்கு முன் சர் கார்ஃபீல்டு சாபர்ஸ் ஆகஸ்ட் 31, 1968-ல் ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை அடித்திருந்தார். 16 ஆண்டுகள் கழித்து 1985-ல் ரவி சாஸ்திரி தொடர்ந்து ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்களை அடித்து, சாதனைப் பட்டியலில் இரண்டாவது இடம்பிடித்தார்.
தென்னாப்பிரக்காவைச் சேர்ந்த கிப்ஸ் பெயரும் இந்தப் பட்டியலில் உள்ளது. 2007 டி-20 உலகக் கோப்பையில் இங்கிலாந்துக்கு எதிரான ஆட்டத்தில், ஸ்டூவர்ட் பிராட் வீசிய ஓவரில் யுவராஜ் சிங் அடுத்தடுத்து ஆறு சிக்ஸர்களை அடித்து நொறுக்கியது எல்லோருக்குமே பரிச்சயம். க்ளார்க் 2013-ல் இப்பட்டியலில் இடம்பெற்றார். இந்த வரிசையில் ஜடேஜாவும் இடம்பிடித்துள்ளார்.
செளராஸ்ட்ரா கூட்டமைப்பு மைதானத்தில், மாவட்டங்களுக்கு இடையேயான டி-20 போட்டி ராஜ்கோட்டில் நேற்று நடைபெற்றது. இதில் ரவீந்திர ஜடேஜா ஜாம்நகர் அணிக்காக விளையாடி வந்தார்.
அம்ரேலிக்கு எதிரான நேற்றைய போட்டியில், ஆஃப் ஸ்பின்னர் நீலம் வம்ஜா வீசிய 15-வது ஓவரில், ஆறு பந்துகளிலும் ஆறு சிக்ஸர்கள் அடித்தார் ஜடேஜா.
தொடர்ந்து ஆக்ரோஷத்துடன் ஆடிய ஜடேஜா, 69 பந்துகளில் 154 ரன்களைக் குவித்தார். இதில் 120 ரன்கள் ஓடாமல் எடுக்கப்பட்டவை.
அதாவது 15 பவுண்டரிகள், 10 சிக்ஸர்கள் விளாசி, பார்வையாளர்களின் அப்லாஸை அள்ளினார். 19-வது ஓவரில் ஜடேஜா ரன் அவுட்டாக, ஜாம்நபகர் அணி 20 ஓவர்களில் ஆறு விக்கெட் இழப்புக்கு 239 ரன்கள் எடுத்தது.
முடிவில், ஜாம்நகர் அணி 121 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்த வெற்றியின் மூலம் ஜாம்நகர் அணிக்கு நான்கு புள்ளிகள் கிடைத்தது.
ஆறு பந்துகளில் ஆறு சிக்ஸர்கள் அடித்த சொற்ப வீரர்களுள், மூன்று பேர் இந்திய அணியைச் சேர்ந்தவர்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். கிரிக்கெட்டைப் பொறுத்தவரை ஆரம்பத்தில் இதன் மேல் இருந்த வசீகரம் தற்பொழுது குறைந்துகொண்டே வந்தாலும், இன்னும் கிரிக்கெட்டுக்கு வெறித்தனமான ரசிகர்கள் இருக்கத்தான் செய்கின்றனர்.
தவிர, அந்தக்காலம் போல அல்லாமல், நவீன கிரிக்கெட்டில் சர்வதேச அளவிலும் சரி, உள்ளூர் அளவிலும் சரி நாள்தோறும் புதுப்புது சாதனைகள் அரங்கேறிக்கொண்டே இருக்கின்றன.
இரண்டு நாள்களுக்கு முன், ஒருநாள் கிரிக்கெட்டில் மூன்றாவது முறையாக இரட்டைச்சதம் அடித்தார் ரோஹித்.
தற்போது, உள்ளூர் போட்டியில் ஒரே ஓவரில் ஆறு சிக்ஸர் விளாசியிருக்கிறார் ஜட்டு. இந்தச் சாதனைகளின் சொந்தக்காரர்கள் இந்திய வீரர்கள் என்பது கூடுதல் பெருமை. வாழ்த்துகள் சர் ஜட்டு!