மும்பையில், ஓடும் ரயிலில் இருந்து தவறி விழ இருந்த ஒரு பெண்ணை சக பயணி காப்பாற்றியுள்ளார். அவருக்குப் பாராட்டுகள் குவிகின்றன.
நெஞ்சைப் பதைபதைக்கவைக்கும் ஒரு வீடியோ, சமூக வலைதளங்களில் உலாவந்துகொண்டிருக்கிறது.
அதில், மின்சார ரயில் சென்றுகொண்டிருக்கும்போது, படியின் அருகில் நின்றுகொண்டிருந்த இளம் பெண் ஒருவர் வெளியில் எட்டிப் பார்த்தபோது, எதிர்பாராதவிதமாக அவரது கால் வழுக்கிக் கீழே விழ, அடுத்த நொடியில் அருகே நின்றுகொண்டிருந்த பயணி ஒருவர் அந்தப் பெண்ணின் கைகளைப் பிடித்துக்கொள்கிறார்.
சில விநாடிகள் தொங்கியபடியே சென்ற அந்தப் பெண், இறுதியில் மேலே தூக்கி காப்பாற்றப்படுகிறார். இந்த வீடியோ, அதிகமாகப் பகிரப்பட்டுவருகிறது.
17 வயதான திவா என்ற பெண்தான் நேற்று விபத்தில் சிக்கி காப்பாற்றப்பட்டவர். மும்பை, காத்கோபர் மற்றும் விக்ரோலி இடையே இந்தச் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இதில் காயமடைந்த திவா, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு பிறகு வீடு திரும்பியுள்ளார்.
இதுபற்றி ஆங்கிலச் செய்தி ஊடகத்தில் பேசியுள்ள திவா, “ நான் என் கைகளை மட்டும்தான் வெளியில் நீட்டினேன். அதன்பிறகு என்ன நடந்தது என எனக்குத் தெரியவில்லை. ஆனால், அதிர்ஷ்டவசமாக அருகில் இருந்த பயணியால் நான் காப்பாற்றப்பட்டேன்.
என் நண்பருடன் போனில் பேசிக்கொண்டு அபாயமில்லா பகுதியில்தான் நின்றுகொண்டிருந்தேன். எதேர்ச்சையாக கையை நீட்டும்போது, எதிரில் வந்த ரயிலால் நிலைதடுமாறிக் கீழே விழுந்துவிட்டேன்” எனத் தெரிவித்துள்ளார்.
மேலும், விபத்தில் சிக்கிய பெண்மீது சட்டம் 156-ன் கீழ் ரயில்வே போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
விபத்தில் சிக்கிய பெண்ணின் வீடியோ ஒரு புறம் வைரலாக, மற்றொரு புறம் பெண்ணைக் காப்பாற்றிய அந்த முகம் தெரியாத பயணிக்குப் பாராட்டுகள் குவிந்துவருகிறது.
பெண் விழுந்த நேரத்தில், அருகில் இருந்த பயணி மட்டும் சாதுர்யமாக செயல்படாமல் இருந்திருந்தால் பெரும் விபத்து ஏற்பட்டிருக்கும். அந்த பெண் படியில் பயணம் செய்தது தவறு, எனப் பலரும் சமூக வலைதளத்தில் கருத்து தெரிவித்துவருகின்றனர்.
To all the people traveling by Mumbai local trains, be careful while you stand on the footpath. pic.twitter.com/qkDthV1CEJ
— Ninjaaaa with AAAA (@SecretNinjaaaa) October 3, 2018