சென்னை: குடி குடியை கெடுக்கும் என்று மதுபாட்டிலில் கண்ணுக்கு தெரியாத எழுத்தில் எழுதியிருக்கும். இதை நிரூபிப்பதுபோல் ஓவர் குடி ஒரு திருமணத்தை தடுத்து நிறுத்தி இருக்கிறது.
திருக்கழுக்குன்றம் அடுத்த ஈச்சங்கரனை கிராமத்தை சேர்ந்தவர் சபாபதி(27). இவருக்கும் கல்பாக்கம் அடுத்த புதுப்பட்டினம் பகுதியை சேர்ந்த லதா(22) (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்ற பெண்ணுக்கும் திருமணம் முடிவு செய்யப்பட்டிருந்தது. நேற்று முன்தினம் வரவேற்பு நிகழ்ச்சிகள் நடந்தது.
மாப்பிள்ளையும், மணமகளும் தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து சிரித்தபடியே போட்டோவும் எடுத்து கொண்டனர். அதன் பிறகு இரவு இரண்டுபேரும் உட்கார்ந்து சாப்பிட்டனர். அதுவும் போட்டோ எடுக்கப்பட்டது.
இன்று காலை (10ம் தேதி) திருமணம் என்பதால், மணமகளும், மணமகனும் ஆயிரம் கனவுகளுடன் ஹாய் சொல்லி, அவரவர் அறைக்கு திரும்பினர். நேற்று திருக்கழுக்குன்றத்தில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் காலை ஏழரை – ஒன்பது முகூர்த்தத்தில் திருமணம் நடக்க இருந்தது.
இதற்காக மணப்பெண் அதிகாலையிலேயே எழுந்து மஞ்சள் தேய்த்து குளித்துவிட்டு திருமண புடவையில் தயாராக இருந்தார். தாலி கட்டுவதற்கு முன்பாக சில சடங்குகளுக்காக மணமகள், தன் பெற்றோருடன் மணமேடையில் காத்திருந்தார்.
ஆனால், இரவு நண்பர்களுடன் சேர்ந்து மாப்பிள்ளை சபாபதி ஓவராக குடித்துள்ளார். அதே சடங்கிற்காக மணமகனை அழைத்து வரச் சென்ற பெற்றோர் வர நீண்ட நேரம் ஆனது.
மாப்பிள்ளையும் வரவில்லை. அவரை அழைத்து வரச் சென்ற அவரின் பெற்றோரும் வரவில்லை. ஆனால், மணமேடையில் இருந்த புரோகிதரோ, நேரம் ஆகிறது. மாப்பிள்ளையை சீக்கிரம் அழைத்து வாங்க’ என்று நச்சரித்து கொண்டே இருந்தார்.
உடனே மாப்பிள்ளை இருந்த அறைக்கு மணமகள் தன் உறவினர்களுடன் சென்றபோது, ஓவர் குடியில் நிற்க முடியாமல் தடுமாறிக் கொண்டிருந்தார். அவரை நிற்க வைக்கும் முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தது.
இந்த காட்சியை பார்த்த மணமகள் லதா, தாலி கட்ட கூட எழுந்திருக்க முடியாத நிலையில் உள்ள மாப்பிள்ளையை திருமணம் செய்ய மாட்டேன் என்று கூறிவிட்டார்.
இந்நிலையில், இரு வீட்டாரிடையே வாக்கு வாதம் ஏற்பட்டது. இந்த சண்டை ரோடு வரை சென்றது. இதனால் தகவல் அறிந்த திருக்கழுக்குன்றம் போலீசார் அங்கு சென்று இரு தரப்பினரையும் சமரசம் செய்து வைத்தனர்.
எனினும் இரு வீட்டாரும் சமாதானம் அடையாத நிலையில், மணமகன் வீட்டார் மீது திருக்கழுக்குன்றம் காவல் நிலையத்தில் பெண் வீட்டார் புகார் செய்தனர். அதன் பேரில் எஸ்ஐ கிருஷ்ணமூர்த்தி இந்த புகார் மீது இரு தரப்பினரிடமும் விசாரணை செய்து வருகிறார்.