காதல் விவகாரத்தின் காரணமாக, இளைஞர் ஒருவரைக் கட்டி வைத்து அடித்துத் துன்புறுத்தி, அவரது வாயில் சிறுநீர் கழிக்கப்பட்ட கொடூரம் இந்தியாவின் ஒடிஸா மாநிலத்தில் இடம்பெற்றுள்ளது.
ஒடிஸா மாநிலத்தின் ஹூர்டா மாவட்டத்தில் உள்ள கைபதார் கிராமத்தில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கடந்த 18ஆம் தேதியன்று பங்கிடா கிராமத்தைச் சேர்ந்த சௌம்ய ரஞ்சன் தாஸ் என்ற இளைஞரை, கைபதாரைச் சேர்ந்த ராஜேந்திர புயான் மற்றும் காட்டியா பல்டாசிங் ஆகிய இருவரும் தென்னைமரமொன்றில் கட்டி வைத்து சித்திரவதை செய்துள்ளனர்.
அவர்கள் அவரை கேவலமான வார்த்தைகளால் திட்டியும் தொடர்ந்து அடித்தும் வந்துள்ளனர். இந்த கொடூரமானது சில மணி நேரங்களாகத் தொடர்ந்த போதும் ஊரார் யாரும் அதைத் தட்டிக் கேட்கவில்லை.
அதற்குப் பதிலாக அதை தங்களது செல்போனில் வீடியோவாக எடுப்பதில் கவனம் செலுத்தினர்.
ஒருகட்டத்தில் மிகவும் சோர்ந்து போன சௌம்ய ரஞ்சன் தாஸ் தாகம் அதிகரித்துக் குடிநீர் கேட்டுக் கதறிய போது, இவர்கள் இருவரும் அவரது வாயில் சிறுநீர் கழித்துள்ளனர்.
இதையும் யாரும் தட்டிக் கேட்கவில்லை.அப்போது எடுக்கப்பட்ட வீடியோவானது சமுக வலைத்தளங்களில் வைரலாகப் பரவிய பிறகே காவல்துறை வழக்குப்பதிவு செய்து அவர்கள் இருவரையும் கைது செய்துள்ளது.
இந்தத் தகவலை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அஜய் பிரதாப் ஸ்வைன் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். காதல் விவகாரத்தால் ஏற்பட்ட முன்பகையே இந்தக் கொடூரத் தாக்குதலுக்கு காரணம் என்று கூறப்படுகிறது.