கண்டியில் அவசரகால சட்டத்திற்கு அமைவாக 24 மணி நேர ஊரடங்கு உத்தரவு நேற்று மாலை பிறப்பிக்கப்பட்டபோதிலும் கண்டி மாவட்டத்தில் பல பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் நேற்றும் தொடர்ந்தன.
இந்த அசாதாரண சூழ்நிலை காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் முஸ்லிம் மக்கள் பெரும் அச்சத்திற்கு மத்தியில் தமது இருப்பிடங்களுக்குள் முடங்கியிருந்தனர்.
வன்முறைகளை கட்டுப்படுத்தும் நோக்குடன், பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் கண்டியில் முப்படையினரும் பொலிஸாரும் பெருமளவில் குவிக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன் நேற்றுமுன்தினம் இரவு மெனிக்ஹின்ன மற்றும் தென்னகும்பற பகுதிகளில் பள்ளிவாசல், அகதியா பாடசாலை, மற்றும் வீடுகள் தாக்கப்பட்டும் எரியூட்டப்பட்டும் சேதமாக்கப்பட்டுள்ளன.
இது தவிர, எழுகொட, பெனிதெனிய பகுதிகளிலும் பள்ளிவாசல்கள் மீது கல்வீச்சுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதனிடையே, நேற்று மதியம் அம்பத்தென்ன, கட்டுகஸ்தோட்டை, அக்குறனை, பெனிதெனிய, எழுகொட, வத்தேகம, மடவளை, குருந்துகொல்ல ஆகிய பகுதிகளிலும் இனவாதிகளினால் வன்முறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டன. இதன்போது, பல வீடுகளும் வர்த்தக நிலையங்கள் தாக்கப்பட்டுள்ளன.
தனிப்பட்ட சம்பவம் ஒன்று காரணமாக நான்கு இளைஞர்களால் தாக்கப்பட்ட பெரும்பான்மையின சாரதி சிகிச்சை பலனின்றி உயிரிழந்துடன், அவரது இறுதிக்கிரியை கடந்த திங்களன்று இடம்பெற்றது.
இதன்போது, குறித்த விவகாரம் முஸ்லிம் சமூகத்திற்கு எதிராக திட்டமிடப்பட்டு திருப்பிவிடப்பட்டமையையடுத்து இனவாதிகள் முஸ்லிம் மக்களை இலக்குவைத்து தாக்குதல்களை நடத்த ஆரம்பித்தனர்.
இதனால், கடந்த திங்கட்கிழமை திகன மற்றும் தெல்தெனிய பகுதிகளில் பதற்றம் ஏற்பட்டது. அத்துடன் மரண சடங்குகளின் பின்னர் திகன நகரில் உள்ள முஸ்லிம் பள்ளிகள், வர்த்தக நிலையங்கள், வீடுகள் திட்டமிட்டு தாக்கப்பட்டன.
இதனையடுத்து அன்றைய தினம் இரவு கண்டியில் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டது. மறுநாள் செவ்வாய்க்கிழமை காலை வரை ஊரடங்கு அமுலில் இருந்தது.
இந்நிலையில், கண்டி பகுதியில் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டதையடுத்து தெல்தெனிய மற்றும் பொல்கொல்ல பொலிஸ் பிரிவுப் பகுதியில் ஊரடங்கு அமுலுக்கு வந்தது.
வன்முறைத் தாக்குதல்கள் மேலும் பல இடங்களுக்கு பரவியமையையடுத்து செவ்வாய் இரவு மீண்டும் ஊரடங்கு அமுலானது. நேற்று புதன்கிழமை காலை கட்டுகஸ்தோட்டை அக்குறணை பகுதிகளில் தாக்குதல்கள் இடம்பெற்றதையடுத்து மறு அறிவித்தல்வரை கண்டி மாவட்டம் முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.
பின்னர் அவசரகால கட்டளைச் சட்டத்தின் ஐந்தாவது அத்தியாயத்திற்கமைவாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அவசரகால நிலைமையை பிரகடனம் செய்துள்ளமையை கருத்திற்கொண்டு 2018 ஆம் ஆண்டின் முதலாம் இலக்க அவசர நிலைமை கட்டளைகளுக்கு அமைவாக பொலிஸ்மா அதிபருக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களை பயன்படுத்தி கண்டி மாவட்டத்திற்கு நேற்று மாலை 4 மணி முதல் இன்று மாலை 4 மணி வரை 24 மணி நேர ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டது.
இதற்கமைய இக்காலப்பகுதியில் அரச சேவையாளர்கள் பொலிஸ், முப்படை வீரர்கள் தவிர ஏனையோர் ஊரடங்கு அமுலாக்கப்பட்ட பிரதேசங்களில் உள்ள பொதுப்பாதைகள், புகையிரத பாதைகள் பூங்காக்கள், திடல்கள் உள்ளிட்ட எந்தவொரு பொது இடங்களிலும் இருத்தல், அதனூடாக பயணம் செய்தல் தடைசெய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும், எவரேனும் குறித்த இடங்களூடாக பயணிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டால் அது தொடர்பில் ஏதேனும் பொலிஸ் நிலையமொன்றின் பொறுப்பதிகாரியின் எழுத்துமூல அனுமதி பெறப்படல் வேண்டும் என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.
தென்னகும்பறை தாக்குதல்
தென்னகும்பறை பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு ஊடுருவிய இனவாத தாக்குதல்தாரிகள் அங்கு அகதியா பாடசாலையின் கண்ணாடிகளை பொல்களால் தாக்கியுள்ளதோடு, குறித்த அகதிய்யா பாடசாலைக்குள் பெற்றோல் குண்டுத்தாக்குதலையும் மேற்கொண்டுள்ளனர்.
இதனைவிட ஐந்துக்கும் மேற்பட்ட வீடுகளின் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். இது தவிர தென்னகும்பர பாலத்துக்கு அருகாமையிலுள்ள ப்ளக் என்ட் வைட் எனும் தளபாட காட்சியறையொன்றை தீக்கிரையாக்கியுள்ளனர். அத்துடன் முச்சக்கரவண்டியொன்றும் இரு மோட்டார் சைக்கிள்களும் எரித்து நாசமாக்கப்பட்டுள்ளன.
மெனிக்ஹேன
மெனிக்ஹேன பகுதியில் நேற்றுமுன்தினம் இரவு பள்ளிவாசல் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. அத்துடன் வர்த்தக நிலையங்கள், குடியிருப்புகள் மீதும் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
400 க்கும் மேற்பட்ட நபர்களை கொண்ட இனவாதக் குழு இந்த தாக்குதலை நடத்தியுள்ளது. இதனை கட்டுப்படுத்த விசேட அதிரடிப்படையினர் ஆகாயத்தை நோக்கி துப்பாக்கிப்பிரயோகம் மேற்கொண்டுள்ளனர். அத்துடன் எட்டு பேரை கைதுசெய்துள்ளனர்.
பெனிதெனிய, எழுகொட பகுதியில் தாக்குதல்
பெனிதெனியவிலுள்ள சாவியா ஒன்றின் மீதும் எழுகொடயொன்றின் மீதும் நேற்றுமுன்தினம் இரவு இனந்தெரியாத நபர்களால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அம்பத்தென்ன
நேற்றுக் காலை 9 மணியளவில் அம்பத்தனை பகுதிக்குள் புகுந்த இனவாதக் கும்பல் ஒன்று அங்குள்ள பன்சலையொன்றின் மீது தாக்குதல் நடத்தியதுடன் பள்ளிவாசல் மற்றும் முஸ்லிம்களுக்கு சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள் மீதும் தாக்குதல் நடத்தியுள்ளது.
இதன்போது பொலிஸார் தாக்குதல்களை மேற்கொண்டு அவர்களை கட்டுப்படுத்த முயன்றபோதும் நிலைமை மோசமடைந்துள்ளது. இதனையடுத்து விசேட அதிரடிப்படையினர் அழைக்கப்பட்டுள்ளனர். இதன் பின்னர் அங்கிருந்து வெளியேறிய தாக்குதல்தாரிகள் கட்டுகஸ்தோட்டை நோக்கி நகர்ந்துள்ளனர்.
கட்டுகஸ்தோட்டை
கட்டுகஸ்தோட்டை நகரிலுள்ள உணவகம், ஆடையகம் மற்றும் மருந்தகம் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் தக்கியா பள்ளியொன்றின் மீதும் பெற்றோல் குண்டுதாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
அக்குறணை
நேற்று பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் ஏ9 வீதி ஊடாக மாத்தளை பகுதியிலிருந்து அக்குறணை நகருக்குள் நுழைய முற்பட்ட தாக்குதல் தாரிகள் அக்குறணை 8ஆம் கட்டை மல்வானஹின்ன பள்ளிவாசல் மீது கல்வீச்சு தாக்குதல் மேற்கொண்டுள்ளதுடன், அங்குள்ள சில கடைகளை எரியூட்டியுள்ளனர். இதன்போது விரைந்த பொலிஸார் எதிர்தாக்குதல்களை மேற்கொண்டமையால் தாக்குதல்தாரிகள் பின்வாங்கியுள்ளனர்.
வத்தேகம
நேற்றுமுன்தினம் நள்ளிரவு 12 மணியளவில் வத்தேகம ஜூம்ஆப் பள்ளி மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது பள்ளிவாசலின் யன்னல் கண்ணாடிகள் நொருக்கப்பட்டுள்ளதுடன், பெற்றோல் குண்டும் வீசப்பட்டுள்ளது.
மடவளை
மடவளை பிரதேசத்திலுள்ள இரும்புக் களஞ்சியம் ஒன்றின் மீது மோட்டார் சைக்கிளில் வந்த நபர்களால் பெற்றோல் குண்டு வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதனால், அவ்விரும்புச் களஞ்சியம் முற்றாக எரிந்து நாசமடைந்துள்ளது.
மேலதிக பாதுகாப்பு
கடந்த சில தினங்களாக கண்டி மாவட்டத்தில் பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருந்தது. உச்ச பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இராணுவத்தினரும் விசேட அதிரடிப்படையினரும் நேற்றைய தினம் வரை தொடர்பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டனர். இந்நிலையில், இதற்கு மேலதிகமாக கடற்படையினரின் பாதுகாப்பும் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் பிரதான சந்திகளில் குழுக்களாகவும் முஸ்லிம் கிராமங்கள் பள்ளிவாசல்களுக்கு அருகாமையிலும் நிறுத்தப்பட்டுள்ளனர்.
மறுஅறிவித்தல்வரை பாடசாலைகள் மூடப்பட்டன
வன்முறைகள் தொடர்வதையடுத்து கண்டி மாவட்டத்தில் உள்ள சகல பாடசாலைகளும் மறுஅறிவித்தல்வரை மூடப்பட்டுள்ளன என்று கல்வி அமைச்சு அறிவித்துள்ளது. கடந்த திங்கட் கிழமை முதல் கண்டி மாவட்டத்தில் பாடசாலைகள் இயங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கதாகும்.