முன்னாள் பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரனின் (கருணா அம்மான்) வெளிநாட்டுப் பயணங்களுக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை நீக்க, கொழும்பு பிரதான நீதவான் லால் ரணசிங்க பண்டார, நேற்று (09) உத்தரவு பிறப்பித்தார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான சலுகைகள் அடிப்படையில், கருணாவுக்கு வழங்கப்பட்டிருந்த குண்டு துளைக்காத ஜீப் வண்டியை, முறையற்ற விதத்தில் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டின் பேரில், அவருக்கு எதிராக வழக்குத் தொடரப்பட்டிருந்தது.
இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய வழக்கு, சட்டமா அதிபரின் ஆலோசனைக்கு அமைய நீக்கிக்கொள்ளப்பட்டுள்ள நிலையில், கருணாவுக்கு எதிராக விதிக்கப்பட்டிருந்த வெளிநாட்டுப் பயணத் தடையையும் நீக்குமாறு, பாரிய நிதி மோசடிகள் குறித்து விசாரணை நடத்தி வரும் நிதிக் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால், நீதிமன்றத்தில் விடுக்கப்பட்டிருந்த கோரிக்கைக்கு அமையவே, மேற்படி பயணத் தடை நீக்கப்பட்டுள்ளது.