“இதுதான் கடைசி யுத்தம் எனவே நீ உனக்கு தேவையான ஆட்களை அழைத்துக்கொண்டு கிழக்கிற்கு போய் உடனடியாக பத்தாயிரம் பேரை சேர்த்து பயிற்ச்சி கொடுத்து மீண்டும் வன்னிக்குள் அழைத்து வா.
அதே நேரம் இங்குள்ள கிழக்கு மாகாணப் போராளிகளுக்கு நான் ஒரு கூட்டம் வைக்க வேண்டும் அதற்கான ஏற்பாட்டையும் செய்து முடி. நீ போகலாம் “…என்று கட்டளையிட்டார் .
கருணாவும் தலையாட்டிவிட்டு அங்கிருந்து கிளம்பிப் போய் தலைவர் சொன்னது போல ஒரு கூட்டத்தை ஒழுங்கு பண்ணினான்.
வன்னியோடு தரைவளிப்பாதையால் கிழக்கை இணைத்து வெற்றிக்கொடியோடு திரும்புவோம் என்கிற பெரும் கனவுகளோடும் பத்தாயிரம் போராளிகளோடும் உற்சாகமாக மட்டக்கிளப்பிலிருந்து கடினமான காட்டுப் பாதையால் வன்னிக்குள் நுழைந்த கருணா..
அங்கு பெரும் வெற்றிகளை குவித்து விட்டு தன்னுடைய 2000 பேர் கொண்ட ஜெயந்தன் படையணியையும் வன்னியில் விட்டு விட்டு மீதமாக உயிரோடிருந்த வெறும் 600 பேரோடு மீண்டும் அதே காட்டுப் பாதையால் மனதில் ஒரு வெறுமையோடு கிழக்கிற்கு திரும்பிக்கொண்டிருந்தான்.
அது மட்டுமல்ல மீண்டும் பத்தாயிரம் பேரை கொண்டுவா என்கிற தலைவனின் கட்டளை காதில் மீண்டும் மீண்டும் ஒலிக்க தொடங்குகிறது ..
இந்தக்கட்டளை தனக்கு கிடைக்கும் என்று தெரிந்துதான் முதலில் தலைவர் அனைவரையும் அழைத்து ஆட்சேர்ப்பு பற்றி கூறும்போது அவன் மட்டும் குனிந்து நிலத்தில் விரிக்கப்பட்டிருந்த வரைபடத்தை பார்த்துக்கொண்டிருந்தான்.
விரக்திக்கு தள்ளப் பட்டவனின் மனது முடியாது என்று முடிவெடுக்கத் தொடங்குகிறது..
மட்டக்கிளப்பிற்கு திரும்பிய கருணா ஆட்சேர்ப்பில் ஆர்வம் கட்டவில்லை.
ஏனெனில் அங்கு பதினைந்து வயதுக்கு மேல் அனேகமாக எல்லாரையுமே தேடித் தேடி பிடித்து பயிற்ச்சி கொடுத்து வன்னிக்கு அனுப்பியாகிவிட்டது.
இன்னும் சில வருடங்கள் போனால்தான் சிறுவர்களை வளரவிட்டு பிடிக்கலாம்.
அதவிட சிறுவர்களை படையில் இணைத்த தற்காக சர்வதேச மன்னிப்புச்சபை, சிறுவர் பாதுகாப்பு சபை ..ஐ நா சபை என்று உலகில் உள்ள அணைத்து சபைகளும் கருணாமீது காட்டமான அறிக்கைப் போர் தொடுதுக்கொண்டிருந்தர்கள்.
இப்போ பேச்சுவார்த்தை தொடங்கி வெளிநாடுகள் வேறு கண்காணிக்கத் தொடங்கி விட்டதால் கையை சும்மா வைத்துக்கொண்டு நடப்பதை கவனிப்பதே நல்லது என்று முடிவெடுத்திருந்தான்.
அதே நேரம் அமேரிக்கா தலைமையில் ஐரோப்பிய நாடுகள் சிலவும் இணைந்து இலங்கையரசோடும் புலிகளோடும் பேசப்படவேண்டிய விடயங்களின் திட்ட வரைபை உருவாக்கியிருந்தார்கள்.
பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்வு காணப்பட்டால்
இலங்கைத் தீவின் முன்னேற்றத்திற்கு உதவுவதாக இந்தியா உட்பட உலகின் முக்கியமான 33 நாடுகள் ஆதரவளிப்பதாக கையொப்பம் இருகிறார்கள்.
புலிகள் இலங்கையரசு பேச்சு வார்த்தைகள் தொடங்கும்போதே இந்த நாடுகள் அமெரிக்கா தலைமையில் இரண்டு திட்டத்தில் உறுதியாக இருந்தார்கள்.
முதலாவது திட்டம் இலங்கை பிரச்சனையை மேசை பேச்சுவார்தைகள் மூலம் புலிகளின் கைகளில் உள்ள ஆயுதங்களை களைந்து அவர்களை சனநாயக அரசியலில் ஈடுபடுத்தி இலங்கையரசிற்கும் அழுத்தங்களை கொடுத்து இறங்கிவரச் செய்து சுமுகமாக தீர்த்து வைத்தல்.
இரண்டாவது திட்டம் பேச்சுவார்த்தையை வழைமைபோல புலிகள் குழப்பியடித்தால் என்ன விலை கொடுத்தேனும் அனைத்து நாடுகளும் இணைந்து முழுமையாக அவர்களின் ஆயுதங்களை களைந்தெடுத்து பலவீனமாக்கி அழித்தொழித்து விட்ட பின்னர் பிரச்சனையை தீர்த்தல்.
இந்த இரண்டு வரைபுகளையும் திட்மிட்டு விட்டே பேச்சுவார்த்தைகளிற்கு அனுசரணை வழங்கத் தொடங்கியிருந்தார்கள்.
நோர்வே தலைமையில் பேச்சு வார்த்தைகள் தொடங்கி விட்டிருந்த அதே வேளை புலிகள் அமைப்பில் கருணாவுக்கும் நிதிப் பொறுப்பாளர் தழிழேந்தியுடனும் பிரச்னை தொடங்கி விட்டிருந்தது .
காரணம் கருணா அவரிடம் வைத்த கோரிக்கைதான். அது என்னவெனில் யாழ்ப்பாணத்தில் வன்னியில் உள்ளது போன்று கிழக்கில் ஒரு மாவீரர் துயிலும் இல்லம் அமைக்க பணம் வேண்டும் என்பதே
….புலிகள் தங்கள் கட்டுப்பாட்டில் இருந்த யாழ்ப்பாணத்தில் முதலாவது பிரமாண்டமான மாவீரர் துயிலும் இல்லத்தை கட்டியிருந்தார்கள்.
அவர்கள் யாழை விட்டு வெளியெறிய பின்னர் அது இலங்கை படையினரால் இடித்து அழிக்கப்பட்டிருந்தது.
சமாதான காலத்தில் அந்த மாவீர் துயிலும் இல்லத்தை புலிகள் மீளவும் நவீன முறையுடன் சிறப்பாக பளிங்கு கற்களாலும் மின் விளக்குகளாலும் அலங்கரித்து பிரமாண்டமக கட்டியிருந்தார்கள்.
அதே பேல வன்னியிலும் மாவீரர் துயிலும் இல்லங்கள் கட்டப் பட்டுக் கொண்டிருந்தது.
ஆனால் கிழக்கில் அப்படியொரு மாவீரர் துயிலும் இல்லம் இருக்கவில்லை.
கிழக்கில் மாவீரர் துயிலும் இல்லங்கள் மாவீரர்கள் விதைக்கப்பட்டு அந்த இடத்தில் மண் குவியலின் மீது நடப்பட்ட தடியில் ஒரு பலகையில் அல்லது கடதாசி மட்டடையில் மாவீரரின் பெயர் எழுதப் பட்டிருக்கும்.
ஒரே இயக்கத்தில் ஒரேகொள்கைக்காக உயிரை விட்ட போரளி ஒருவனிற்கு பளிங்குக் கல்லறை.. இன்னொருவனிற்கு வெறும் மண்குவியல்.
இங்கு பணம்தான் தீர்மானித்தது.
இதனை புலிகளின் பிரச்சார வீடியோ பத்திரிகையான ஒளி வீச்சு வீடியோவை போட்டு பார்த்தாலே தெரியும்.
எனவே கோப்பாய் மாவீரர் துயிலும் இல்லத்தை போல கிழக்கிலும் ஒன்றை நிருமானிக்க நினைத்து கருணா புலிகளின் நிதி பொறுப்பாளரிடம் நிதி ஒதுக்கும்படி கேட்டிருந்தபோது அதனை மறுத்த நிதி பொறுப்பாளர் கிழக்கில் வர்த்தகர்களிடம் நிதி சேகரித்து கருணாவே செய்யட்டும் என சொல்லி விடுகிறார்.
கிழக்கில் எண்பது வீதம் வர்த்தகர்கள் முஸ்லிம்கள்தான் சண்டைக் காலத்தில் அவர்களிடம் பணம் கேட்டால் பயத்திலாவது கொடுத்து விடுவார்கள்.
ஆனால் சமாதானக் காலத்தில் யுத்த நிறுத்த கண்காணிப்பு குழுவும் இருக்கின்றபோது பணம் கேட்டால் நேரடியாக வியாபாரிகள் யுத்த நிறுத்த கண்காணிப்புக் குழுவிடம் கருணாமீதுதான் புகார் கொடுப்பார்கள்.
எனவே வன்னியிலிருந்துதான் நிதி வேண்டும் என கேட்டதும் ..கிழக்கு மாகாண நிதி விபரங்களை கருணாவின் மனைவியே கையாழ்கிறார் சரியாக கணக்கு காட்டப்படுவதில்லையென்கிற குற்றச்சாட்டை தமிழேந்தி வைக்கிறார்.
இங்கு தமிழேந்தி கருணா உரசல் ஆரம்பிக்கின்றது.
இரண்டாவது பொட்டம்மனுடன் ஏற்கனவே இருந்த சிறிய உரசல் வலுக்கிறது.
அது என்னவெனில் 96 ம் ஆண்டில் இருந்தே புலிகளின் புலனாய்வு பிரிவு பொட்டம்மானிற்கும் கருணாவிற்கும் உரசல்கள் ஆரம்பிக்கத் தொடங்கியிருந்தது.
புலிகளின் புலனாய்வு பொறுப்பாளராக பொட்டம்மான் இருந்தாலும் வடக்கிற்கு வெளியே கிழக்கிலாகட்டும் தெற்கிலாகட்டும் நடத்தப்பட்ட அனைத்து தாக்குதல்களையும் பெரும்பாலும் ஒருங்கிணைத்து வழி நடத்தியவர்கள் மட்டுமல்லாது தாக்குதல் நடத்திய தற்கொலை போராளிகளும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களாகவே இருந்தார்கள்.
அதற்கு முக்கிய காரணங்கள் இரண்டு.
முதலாவது தெற்கில் நடந்த தாக்குதல்கள் அனைத்திற்குமே அதற்கான வழங்கல்கள் கிழக்கு மட்டக்கிளப்பில் இருந்து கண்டிக்கு கொண்டு போய் அங்கிருந்து கொழும்பிற்குள் கொண்டுபோய் சேர்ப்பார்கள்.
அது மட்டுமல்லாது தாக்குதல் போராளிகளின் பாதையும் அதுதான்.
இரண்டாவது கிழக்கு மகாணத்தை சேர்ந்தவர்கள் தான் சிங்களத்தை சரளமாக கதைக்கத் தெரிந்தவர்களாக இருந்தார்கள்.
தெற்கில் தாக்குதல் நடத்துவதற்காக அனுப்பப்பட்ட அனைவருமே முஸ்லிம்களின் அடையாள அட்டையுடனும் அவர்கள் அடையாளங்களுடனுமே அனுப்பப் பட்டிருந்தார்கள்.
முஸ்லிம்கள்போல வட்டார வழக்கில் இயற்கையாக தமிழை பேசவும் கிழக்கு மாகாணத்தை சேர்ந்தவர்களாலேயே முடியும் என்பதும் முக்கிய காரணம்.
எனவேதான் வடக்கு தவிர்ந்த ஏனைய பகுதிகளில் நடந்த அனைத்து தாக்குதல்களினதும் வலைப்பின்னல் தொர்புகள் வழிநடத்தல்கள் அனைத்துமே கருணாவின் பங்கு முக்கியமானதாக இருந்தது.
பிரபாகரன் கோடு போட்டால் கருணா றோட்டு போடுபவராக இருந்து பிரபாகரனிடம் நல்லபெயர் வாங்கியவர்.
அதனால் தெற்கில் நடந்த தாக்குதல்கள் அனைத்திலும் கருணாவின் பங்கு பெரியதாகவே இருந்தது.
இது பொட்டம்மானிற்கு கொஞ்சம் இடைஞ்சலாகவே இருந்தது.
எனவே கருணா தமிழேந்தி பிரச்னை தொடங்கியதும் கருணாவை கண்காணிக்க தனியாக சில புலனாய்வு போராளிகளை அவரின் அணியில் சேர்த்திருந்தார்.
இதனை கண்டு பிடித்த கருணா பொட்டம்மானின் உளவாளிகள் இருவரை கொலை செய்து விடுகிறார் .
ஒரு கட்டத்தில் பொட்டம்மானே தனது சிறிய அணியொன்றோடு மட்டக்கிளப்பிற்கு நேரடியாகப்போய் கருணாவை கைது செய்யும் முயற்சியையும் மேற்கொண்டிருந்தார்.
ஆனால் பொட்டம்மான் அங்கு போனதுமே கருணா பாதுகாப்பு என்கிற போர்வையில் பொட்டம்மானை சுற்றி தனது ஆட்களை பாதுகாப்பாக போட்டு அவரை ஒரு கைதியாக்கி வரவேற்று வழியனுப்பி வைத்திருந்தார்.
பொட்டம்மானின் இந்த செயல் கருணாவை மேலும் எரிசலூட்டி யிருந்தது .
இவையெல்லாம் பிரபாகரன் காதுக்கு போய்க்கொண்டிருந்தது.
சண்டை இல்லாமல் சும்மா இருந்தாலே இது போன்ற பிரச்சனைகள் தான் வரும் எனவே விரைவில் இந்த உள்வீட்டு பிரச்சனைகளுக்கெல்லாம் முடிவு கட்டுவதோடு இறுதி யுத்தத்தினையும் தொடங்கி விடுவதென முடிவெடுத்திருந்தார்பிரபாகரன் …
தொடரும்…
புதிய தொடர்-சாத்திரி
-தொகுப்பு: கி.பாஸ்கரன்-