கருணைக்கொலை மூலம் தனது உயிரை மாய்த்துள்ளார் பெல்ஜிய நாட்டு பாராலிம்பிக் வீராங்கனை மாரீகே வெர்வோர்ட். அவருக்கு வயது 40.
2012 லண்டன் பாராலிம்பிக் போட்டிகளில் தங்கப்பதக்கத்தையும், ஒரு வெள்ளிப்பதக்கத்தையும் வென்றவர் மாரீகே வெர்வோர்ட். ரியோ 2016 பாராலிம்பிக் போட்டிகளில் மேலும் இரண்டு பதக்கங்களை இவர் பெற்றார்.
குணப்படுத்த முடியாத தசை சிதைவு நோயால் அவர் பாதிக்கப்பட்டிருந்தார்.
கருணைக்கொலை சட்டபூர்வமானதாக இருக்கும் பெல்ஜியத்தில், மருத்துவர் ஒருவரின் உதவியோடு தனது வாழ்க்கையை முடித்து கொள்ள அனுமதிக்கும் ஆவணங்களில் 2008ம் ஆண்டிலேயே மாரீகே வெர்வோர்ட் கையெழுத்திட்டிருந்தார்.
மாரீகே வெர்வோர்ட் பாதிக்கப்பட்டிருந்த நோயால், அவரது காலில் தொடர்ந்து வலியும், பக்கவாதமும் இருந்ததால் அவரால் சரியாக தூங்க முடியாமல் போனது.
லபிராடர் ‘சென்‘ என்ற நாயின் உதவியோடு மாரீகே வெர்வோர்ட் வாழ்ந்து வந்தார்.
2016ம் ஆண்டு பிபிசி வானொலி 5யில் வழங்கிய நேர்காணலில், “உங்களது தசை சிதைவு நோயோடு வலியையும், சிகிச்சைகளையும் தாங்கி கொண்டு சாதனைகளை படைத்து, புன்முறுவலோடு எப்படி இருக்க முடிகிறது என்று பலரும் என்னை கேட்கிறார்கள். என்னை பொறுத்தவரை சக்கர நாற்காலியோடு விளையாடுவதும், போட்டியிடுவதும் ஒரு வகை சிகிச்சையே” என்று கூறியிருந்தார் மாரீகே வெர்வோர்ட்.
செவ்வாய்க்கிழமை மாலை மருத்துவரின் உதவியோடு தனது வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வந்துள்ளார் மாரீகே வெர்வோர்ட்.