டெக்னாலஜியைப் பயன்படுத்தினால் பிடிபட வாய்ப்பிருக்கிறது என்பதால் பேஸ்புக், டுவிட்டர் போன்றவற்றை ராஜேஷ் அர்ஜூன் பயன்படுத்தியதில்லை. மொபைல் போன் சிம் கார்டு கூட போலி முகவரியில்தான் வைத்திருக்கிறான்.
மருத்துவமனைகளுக்குள் திருடச் செல்லும்போது சிம் இல்லாத வெற்று மொபைலை வைத்துக்கொண்டு அப்படியே பேசிக்கொண்டு செல்வது போல் பிலிம் காட்டுவதுதான் அவன் பாணி. விமான டிக்கெட் எடுப்பதிலும் போலி முகவரி, போலியான அடையாள அட்டையையே பயன்படுத்தி இருக்கிறான்.
திருப்பதியில் குடும்பத்தோடு தங்கிய ஓட்டலில் மட்டுமே அவனது மனைவி கொடுத்த அடையாள அட்டை மூலம் இந்த வழக்குகளில் துப்புத் துலங்கியது!
படுக்கையில் கிடக்கும் நோயாளிக்கு எதிரில் நிற்கும் டாக்டர் கண்கண்ட கடவுள்தான். உயிரைத் தவிர வேறு எதை அந்தக் கடவுள் கேட்டாலும் யோசிக்காமல் எடுத்துக் கொடுத்து விடுவார்கள்.
இந்த வீக்னஸைப் பயன்படுத்தி இந்தியா முழுவதும் சுமார் 100 பவுண் நகைகளைத் திருடிய பலே டாக்டரை வளைத்திருக்கிறது தமிழகத்திலுள்ள கோவை பொலிஸ்!
கோவை நகரின் பரபரப்பான கிராஸ் கட்ரோடு பகுதியில் இருக்கிறது ஷீலா மருத்துவமனை. 2013 செப்டம்பர் 17ஆம் தேதியன்று இந்த மருத்துவமனை நிர்வாகத்திடம் உள் நோயாளியாக இருந்த ஒரு கர்ப்பிணிப் பெண் அதிர்ச்சிகரமான ஒரு புகாரை அளித்தார்.
அதில், நான் பெட்ல படுத்திருந்தேன். ஒரு டாக்டர் வந்து என்னை செக் அப் பண்ணினார். எக்ஸ்ரே எடுக்கணும்னு சொல்லி என்னோட தாலிச் செயினை கழட்டி வெச்சுட்டு எக்ஸ்ரே ரூமுக்கு போகச் சொன்னார்.
அவரு சொன்ன மாதிரி நகைகளைக் கழட்டி வெச்சுட்டு அங்கே போனேன். அங்கே இருந்தவரோ உங்களுக்கு எக்ஸ்ரே எடுக்க வேண்டியதில்லை என்று சொல்லிட்டார்.
குழம்பிப் போய் ரூமுக்கு வந்து பார்த்தால் டாக்டரும் இல்லை. நகைகளுமில்லை. தாலியோட சேர்த்து ஒன்பது சவரனைக் காணோமுங்க என்று கண்ணீர் வடித்தார்.
இதற்கடுத்து ஏப்ரல் 14ஆம் திகதி கோவை அவிநாசி சாலையிலுள்ள குப்புசாமி நாயுடு மருத்துவமனை லேபர் வார்டிலிருந்து கண்ணீரும் கம்பலையுமாக வந்த பெண், ஒரு டாக்டர் வந்து என்னை செக் அப் பண்ணினார்.
நகையைக் கழட்டி வெச்சுட்டு ஸ்கேன் ரூமுக்கு போகச் சொன்னார் என்று முந்தைய புகாரின் ஸ்டைலிலேயே புலம்பியிருக்கிறார். இந்த முறை டாக்டர் எடுத்தது பதினைந்து பவுண் நகைகளை.
கடந்த ஜூலை 9ஆம் திகதியன்று கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனையிலும் கர்ப்பிணிப் பெண் ஒருவர் இதே டைப் புகாரைச் சொல்லி நிர்வாகத்திடம் குமுறியிருக்கிறார்.
அவரிடம் டாக்டர் எடுத்தது இருபத்தைந்து சவரன்கள். இந்தப் புகார் பதிவானதும் கோவை மாநகர பொலிஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் ஒரு ஸ்பெஷல் டீமை அமைத்து சில ஆலோசனைகளைச் சொல்லி அதன்படி மூவ் செய்ய வைத்திருக்கிறார்.
அந்த அடிப்படையில் ஸ்கெட்ச் போட்டு டாப்கியரில் மூவ் செய்த பொலிஸ் டீம், கடந்த 25ஆம் தேதியன்று மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் அந்தக் கில்லாடி டாக்டரை வளைத்திருக்கின்றனர். அவன் பெயர் ராஜேஸ் அர்ஜூன் பரஸ்கலே என்பதாகும்.
அந்த ஸ்பெஷல் டீம் பொலிஸிடம் பேசியபோது, கோவையில் பதிவான மூணு கேஸையும் வெச்சு ஒரு ஸ்கெட்ச் போட்டோம். சம்பந்தப்பட்ட மருத்துவமனைகளின் சி.சி.டி.வி. கேமரா பதிவுகளையும் வெச்சு செக் பண்ணினோம். ஒரே நபர் மூணு வீடியோ பதிவுகளிலும் இருந்தார். கையில் ஸ்டெதாஸ்கோப் வெச்சபடி வெள்ளை கோட் போட்ட இளம் டாக்டராக இருந்தார்.
அவரோட போட்டோவை எடுத்துக்கிட்டு அடுத்த லெவலுக்கு முன்னேறினோம். லோக்கல் குற்றவாளிகளோடு அவரோட அடையாளங்கள் ஒத்துப்போகலை. பிளஸ் முகமும் வேறு மாநிலமா தெரிஞ்சது.
திருட்டு நடந்த மூணு ஹொஸ்பிடல்களுமே ஏர்போர்ட்டை நோக்கிய ரோடுகளே இருப்பது எங்களுக்கு இடிச்சது. அதனால் ஏர்போர்ட் பதிவேடுகளை செக் பண்ணினோம். கூடவே ஏர்போர்ட் பக்கத்துல இருக்கிற லொட்ஜ்களில் போட்டோவைக் காட்டி விசாரிச்சோம். ஒரு துப்பும் கிடைக்கவில்லை.
கர்நாடகா, ஆந்திரா பொலிஸுக்கும் இந்தப் போட்டோக்களை அனுப்பி சில விஷயங்களை செக் பண்ணினோம். அப்போ திடீர்ன்னு ஒரு தகவல் கிடைச்சது. அதாவது சமீபத்துல திருப்பதிக்கு அந்த நபர் தன்னோட குடுபத்தோட வந்து தங்கிட்டுபோனது தெரிய வந்துச்சு.
மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் பக்கம் பவன்நகர் பகுதின்னு அந்த அட்ரஸ்ல இருந்துச்சு. சைலண்டா கிளம்பிப் போயி அந்த போலி டாக்டரை அமுக்கிட்டோம்.
அவன்கிட்டே விசாரிச்சதுல பல ஆச்சரிய தகவல்கள் கிடைச்சது. அதாவது அவனோட சொந்த ஊர் கர்நாடக மாநிலம் ஹூப்ளி. அவன் அப்பா, அம்மாவும் டாக்டர்கள்.
ஆனால் பத்தாங்கிளாஸுக்கு மேலே இவனுக்கு படிப்பு ஏறலை. கைச்செலவுக்கு வீட்டுலேயும் அப்பா, அம்மாவோட கிளினிக்லேயும் திருடுற பழக்கம் இருந்திருக்குது.
டெம்போ டிரைவரா கொஞ்சநாள் இருந்திருக்கான். பிரீத்திங்கிற பொண்ணோட திருமணமாகியிருக்குது. கொஞ்ச வருஷத்துக்கு முன்னாடி பெத்தவங்க ரெண்டு பேருமே இறந்துட்டாங்க.
இந்த நிலைமையில் கர்நாடகாவில் ஒரு நாள் ஹொஸ்பிடல்ல அட்மிட் ஆன மனைவியைப் பார்க்க போயிருக்கான் ராஜேஸ். விசிட்டர்ஸ் டைம் முடிஞ்ச பிறகு போன இவன், வார்டு வாசல்ல தயக்கமா போய் நின்னதும் செக்யூரிட்டி சல்யூட் அடிச்சுட்டு உள்ளே வாங்க டாக்டர் அப்படின்னு சொல்லியிருக்கார்.
உள்ளே போயி வெளியே வந்துட்டு இருக்கிறப்ப ஒரு நர்ஸ் ஓடிவந்து, டாக்டர் அந்த பேஷண்டுக்கு குளுகோஸ் சரியா ஏறமாட்டேங்குது. ஊசியை நரம்புல சரியா பிட் பண்ணிக்கொடுங்கன்னு கேட்டிருக்குது. தன்னோட அப்பா, அம்மா கூட ஹொஸ்பிட்டல்ல உதவிக்கு இருந்ததுல கிடைச்ச அனுபவத்துல அதைச் சரி பண்ணி கொடுத்துட்டு வந்திருக்கான்.
இந்த நிலைமையில் கன்னட நடிகர் சுதீப் ஒரு படத்துல இன்ஸ்பெக்டர், டாக்டர், அட்வகேட்ன்னு பல கெட்டப்புல வருவாராம். அந்தப் படத்தைப் பார்த்தவன் நம்மை ஹொஸ்பிடல்களில் டாக்டர் என்றே நம்புறாங்களே, பேசாம அப்படியே நடிச்சு பணம் சம்பாதிக்கலாமேன்னு நினைச்சிருக்கான்.
அந்தத் தப்பையும் ரொம்பக் கில்லாடித்தனமாக யோசிச்சு பண்ணியிருக்கான். கர்ப்பிணிப் பெண்கள் வார்டுதான் திருட்டுக்கு சரியான இடம் என்று முடிவு பண்ணியிருக்கான்.
காரணம் அவங்கதான் ரொம்ப சோர்ந்து படுத்திருப்பாங்க, சத்தமா கத்த முடியாது. ஓடி வரமாட்டாங்க. அப்படிங்கிறது ஐடியா. அரசு மருத்துவமனைக்கு வர்ற பெண்களிடம் நகை இருக்காது. அதனாலதான் மிகப்பெரிய மகப்பேறு மருத்துவமனைகள், மல்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைகளைப் பார்த்துப் பார்த்து வேலையைக் காட்டியிருக்கான்.
ஹொஸ்பிடலுக்குள்ள வயிட்கோட், ஸ்டெத் வெச்சுட்டு நுழையுற இவனை யாருமே சந்தேகமா பார்த்தது இல்லையாம். கர்ப்பிணிப் பெண்கள் வார்டு பக்கம் போறவன், நகையை அடிச்சுட்டு அடுத்த நிமிஷமே விறுவிறுன்னு வெளியேறிடுவானாம். மஹாராஷ்டிரா, ஆந்திரா, கர்நாடகான்னு பல இடங்களில் இந்த வேலையைக் காட்டியிருக்கான். தமிழ்நாட்டில் கோவை, மதுரை, சென்னை, திருச்சின்னு முக்கியமான நகரங்களில் வேலையைக் காட்டியிருக்கான்.
ஒவ்வொரு திருட்டுக்கும் நாசிக்ல இருந்து பிளைட்லதான் வந்திருக்கான். நகை திருடுறவன் விமானத்துல வருவான்னு பொலிஸ் நினைக்காதுன்னு சொல்றான்.
மருத்துவமனைகளில் வெறுமனே வாசல், டாக்டருக்காக பேஷண்டுகள் காத்திருக்கும் பகுதி அப்படின்னு சில இடங்களில் மட்டும் கண்காணிப்பு கேமராக்கள் வைக்காமல் கிட்டத்தட்ட முழு மருத்துவமனையுமே கேமராவின் கண்காணிப்பில் வைக்க வேண்டியது அவசியம் என்று இப்போதை க்குப் புலனாகுது!