கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிப்பதற்கு உடன்பாடு காணப்பட்டுள்ளது. சாய்ந்தமருது, கல்முனை விவகாரம் தொடர்பில் அமைச்சர் பைசர் முஸ்தபா தலைமையில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு அரசியல் பிரதிநிதிகள் மற்றும் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகளுக்கிடையில் உள்ளூராட்சி சபைகள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சில் நேற்று (17) மாலை நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போதே இவ்வுடன்பாடு எட்டப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிக்கப்படுமானால் தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட நகர சபையொன்று உருவாக்கப்பட வேண்டும் எனவும் உடன்பாடு காணப்பட்டுள்ளது.
கிழக்கின் கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களைச் சேர்ந்த சகல மக்களதும் அபிலாஷைகள் உள்வாங்கப்பட்டு எந்தவொரு மக்களுக்கும் பாதிப்பு ஏற்டாத வகையில் இவ்விடயம் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக பிரிப்பதாக இருந்தால் அதற்கான எல்லைப் பிரதேசங்கள் எவ்வகையில் அமைய வேண்டும் என்பது தொடர்பாக ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் தலைமையில் ஒரு குழுவும் இங்கு நியமிக்கப்பட்டது.
இவ்விடயம் குறித்து சகல கட்சிகளினதும் உடன்பாடுகள் பெறப்பட்டு இதற்கு ஒரு சுமுகமான தீர்வைப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் இம்மாதம் 22 ஆம் திகதி எதிர்க்கட்சித் தலைவர் ஆர். சம்பந்தன் தலைமையில் அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தையை நடத்துவதற்கும் தீர்மானிக்கப்பட்டது.
இப் பேச்சுவார்தையை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் பைசர் முஸ்தபா,
2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின் போது கிழக்கு மாகாண முஸ்லிம்களின் வேண்டுகோளுக்கிணங்க சாய்ந்தமருது பிரதேச சபைக்கான வேண்டுகோள் முன்வைக்கப்பட்டது.
அதற்கு ஜனாதிபதியும் பிரதமரும் உடன்பட்டார்கள். பின்னர் நான் உள்ளூராட்சி மன்றங்கள் மற்றும் மாகாண சபைகள் அமைச்சரான போது சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கத்திற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்தேன்.
அப்போது கல்முனை மக்கள் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தார்கள். சாய்ந்தமருதுக்கான தனியானதொரு பிரதேச சபையைக் கோருகிறார்கள் என்று நான் தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கும் அறிவித்தேன். அதற்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
அதன் பின்னர் கல்முனை மக்கள் இங்கு வந்து கல்முனை மாநகர சபையை நான்கு உள்ளூராட்சி சபைகளாக உருவாக்க வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைத்தார்கள்.
இன்று ஜனாதிபதி மற்றும் பிரதமரின் ஆலோசனைப் பிரகாரம், தமிழ்தேசியக் கூட்டமைப்புக்கும் கிழக்கு மாகாணத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் அரசியல் கட்சிகளுக்குமிடையில் ஒரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
தமிழர்களை பெரும்பான்மையாக கொண்ட உள்ளூராட்சி மன்றமொன்றை வழங்குவதற்கு இங்கு உடன்பாடு எட்டப்பட்டது. அதற்கான எல்லைப்பிரதேசம் எவ்வகையில் அமைய வேண்டும் என்பது தொடர்பாக ஆராய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனின் தலைமையில் ஒரு குழு நியமிக்கப்பட்டது.
சகல கட்சிகளினதும் உடன்பாட்டை பெற்று இதற்கு ஒரு தீர்வைப் பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கின்றோம். இம்மாதம் 22ஆம் திகதி இதன் அடுத்த கட்ட பேச்சுவார்த்தையை நடாத்துவதற்கு தீர்மானித்தள்ளோம்.
கிழக்கில் தமிழ் கட்சிகளினதும் ஏனைய கட்சிகளினதும் உடன்பாடு கிடைக்காவிட்டால் கல்முனை மாநகர சபையை பிரிப்பதற்கு உடன்பட மாட்டேன்.
கல்முனையை நான்காக பிரிப்பதாக இருந்தால் அங்கு தேசிய ஐக்கியம் நிலைநிறுத்தப்பட வேண்டும். அங்கு மக்கள் மத்தியில் தேசிய ஒற்றுமை சிதைவதாக இருந்தால் அதற்கு நான் ஒருபோதும் இடமளிக்கப்பபோவதில்லை என்பதை பொறுப்புடன் தெரிவிக்கின்றேன் என்றார். தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்கட்சித் தலைவருமான ஆர். சம்பந்தன், தெரிவித்ததாவது,
தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிரதிநிதிகளுக்கும் முஸ்லிம் மக்களுடைய பிரதிநிதிகளுக்கமிடையில் சந்திப்பொன்று இடம்பெற்றது. இச்சந்திப்பு தொடர்ந்து நடைபெறும்.
இந்தப்பிரச்சினையை சமாதானமான முறையில் தீர்ப்பது அவசியம். மக்கள் ஒற்றுமையாக வாழ வேண்டும். அந்த நோக்கத்துடன் இரண்டு பகுதிகளுக்கும் ஏற்புடையதொரு தீர்ப்பு ஏற்படுத்துவதற்காக நாங்கள் தொடர்ந்து விரைவில் கூடுவோம்.
விளையாட்டுத்துறை பிரதியமைச்சர் எம்.எச் ஹரீஸ் தெரிவித்ததாவது,
தமிழ் கூட்டமைப்பும் முஸ்லிம் பிரதிநிதிகளும் கல்முனையை நான்காக பிரிப்பதென்பதை கொள்கை ரீதியாக ஏற்றுக்கொண்டுள்ளார்கள்.
இது தொடர்பில் தொடர்ந்து பேச்சுவார்தை இடம்பெறும் என முடிவெடுக்கப்பட்டது. தமிழ் பிரதிநிதிகள் ஐந்து பேரும் முஸ்லிம் பிரதிநிதிகள் ஐந்து பேரும் எதிர்வரும் வாரங்களில் பேசுவதென தீர்மானிக்கப்பட்டது.
இப்பிரச்சினைக்கு விரைவில் தீர்வு காண முயற்சி செய்கின்றோம். சகல தரப்பினர்களினதும் அபிலாஷைகளும் உள்வாங்கப்பட்டு ஒரு இணக்கமான தொரு கொள்கை ரீதியான தீர்வாக 4 உள்ளூராட்சி சபைகளையும் கல்முனையில் உருவாக்குவதென்பது தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இதனை நடைமுறை சாத்தியமாக்குவதற்குரிய பேச்சுவார்தையை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு அமைச்சர் இணக்கம் தெரிவித்துள்ளார்.
அசாத் சாலி தெரிவித்ததாவது,
இது சாய்ந்தமருது மக்களுக்கு நடந்த அநியாயம். ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் இவ்விவகாரத்தை அரசியல்மயப்படுத்தியது. பிரதமரை அங்கு அழைத்துச்சென்று சாய்ந்தமருதுக்கு ஒரு பிரதேச சபையை தருவதாக நம்பிக்கையளித்தார்கள்.
என்னுடைய இயக்கமே இதனை வழங்கும் என பின்னர் முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் கூறினார். கல்முனையை நான்காக பிரிப்பதாக இருந்தால் தமிழ் மக்களுக்கும் ஒரு சபையை தாருங்கள் என தமிழ்த் தேசிய கூட்டமைப்பு கோரிக்கை விடுத்தது.
அதில் நாம் உடன்பட்டோம். இதற்கு கால அவகாசம் போடக்கூடாதென பிரதியமைச்சர் ஹரீஸ் கூறினார். கால அவகாசம் வழங்க வேண்டும் என நாம் கூறினோம்.
இங்கு யாருக்கும் பாதகமில்லாமல் சுமுகமான முறையில் இப்பிரச்சினைக்கு தீர்வு காணப்பட வேண்டும் என்ற நோக்கிலேயே அனைவரும் உள்ளார்கள்.
இதனை அரசியல்மயப்படுத்தாமல் இருந்திருந்தால் இவ்வளவு தூரம் இப்பிரச்சினை சென்றிருக்காது. ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் அப்பகுதி மக்களுக்குள் பிரச்சினையை ஏற்படுத்தி வைத்துள்ளது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் கோடீஸ்வரன் தெரிவித்ததாவது,
சாய்ந்தமருது பிரதேச சபை உருவாக்கத்திற்கு எந்தவகையிலும் தமிழர்கள் எதிர்ப்பில்லை. அதேநேரம் ஏனைய பிரதேச சபைகள் அல்லாத நகர சபைகள் உருவாக்க வேண்டும் என்றால் தமிழர்களின் பிரதேசங்களை உள்ளடக்கியதான ஒரு நகர சபையை உருவாக்க வேண்டும்.
அதில் தமிழ் பிரதேசங்களையும் தமிழ் இடங்களையும் உள்ளடக்கியதான ஒரு பிரதேச சபையை உருவாக்கவே நாம் முன்மொழிந்துள்ளோம். இதை தவிர ஒரு சபை அல்ல. எத்தனை சபை உருவாக்கினாலும் எமக்கு பிரச்சினையல்ல.
நாம் ஒரு சபையையே வேண்டுகின்றோம். ஒரு நகர சபை. தமிழ் பிரதேசங்களை உள்ளிடக்கியதான ஒரு நகர சபை உருவாக்கப்பபடும் போதே தமிழர்களின் கலையும் கலாசாரமும் அதில் பாதுகாக்கப்படும்.
எமது உரிமைகளையும் அபிவிருத்தியையும் அதில் செய்ய முடியும். நாங்கள் எங்களுக்கொரு சபையை கேட்கவில்லை. ஆனால் நான்கு சபையாக முன்வைக்கப்படும்போதே நாம் எங்களுக்கொரு சபையை வேண்டுகின்றோம். எமது முன்மொழிவை ஏற்றுக்கொண்டார்கள்.
சாய்ந்தமருதை கொடுப்பதில் எமக்கு நூறு வீத உடன்பாடு உள்ளது. சாய்ந்தமருதில் 70 வீதம் முஸ்லிம், 30 வீதம் தமிழர்கள் உள்ளார்கள். சாய்ந்தமருது பிரதேச சபை வழங்குவதால் 60 வீதம் முஸ்லிம் 40 வீதம் தமிழர்களாக மாறிவிடுவார்கள் என்கின்ற காரணத்திற்கமையவே இதனை ஒரு அரசியல் நோக்கத்திற்கு பிரிக்கக் கூடாதென சொல்கிறார்கள்.
முன்னாள் அமைச்சர் அதாவுல்லா
கல்முனையை நான்கு பிரிவுகளாக பிரிப்பதற்கு நாம் உடன்பட்டோம். இப்பொழுது மிக குறுகிய காலத்திற்குள் நான்கை எவ்வாறு பிரிக்க வேண்டும் என்பதை ஆராய்வார்கள்.
நான் அமைச்சராக இருந்த போது நான் பிரித்த அந்தக் குறிப்புக்களை பரிசீலிப்பதற்கு ஒரு சந்தர்ப்பம் உருவாகியுள்ளது. நான் இருந்த பொது அதனை வழங்குவதற்கான வர்த்தமானியை அனுப்பியிருந்த விடயத்தை இன்று அமைச்சரிடம் தெளிவாக பகிரங்கமாக கூறியுள்ளேன் என்றார்.
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன், எம்.பிக்களான மாவை சேனாதிராஜா, எம்.ஏ.சுமந்திரன், கோடீஸ்வரன் உட்பட ஹென்ரி மகேந்திரன் ஆகியோர் தமிழ்த் தரப்பில் கலந்துகொண்டனர். பிரதியமைச்சர் ஹரீஸ், முன்னாள் அமைச்சர் அதாவுல்லா எம்.பி, அஸாத் சாலி உட்பட முக்கியஸ்தர் பலர் முஸ்லிம் தரப்பில் கலந்துகொண்டனர்.